Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - காண்டம் 5
சுந்தர காண்டம் (முதல் பகுதி) /படலங்கள் 1-6

irAmAyaNam of kampar
canto 5 (cuntara kAnTam), part 1
(paTalams 1-6, verses 4847 - 5536)
In tamil script, unicode/utf-8 format



    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
    providing us with a romanized transliterated version of this work and for permissions
    to publish the equivalent Tamil script version in Unicode encoding
    We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2016.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are :
    http://www.projectmadurai.org/


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - சுந்தர காண்டம் (முதல் பகுதி) /படலங்கள் 1-6

5.1 கடவுள் வாழ்த்து படலம் (4847)
5.2 கடல் தாவு படலம் (4848 - 4941)
5.3 ஊர் தேடு படலம் (4942 - 5175)
5.4 காட்சிப் படலம் (5176 - 5334)
5.5 உருக் காட்டு படலம் (5335 - 5452)
5.6 சூடாமணிப் படலம் (5453 - 5536)


5.1 கடவுள் வாழ்த்து படலம் 4847


அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ' அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே, மறைகளுக்கு இறுதி ஆவார்!       5.1.1
---------

5.2 கடல் தாவு படலம் 4848 – 4941

அநுமன் மகேந்திரத்துப் பேருருவோடு நின்ற நிலையில் துறக்க நாடு காண்டலும் கருதலும்

ஆண் தகை ஆண்டு அவ் வானோர் துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும் மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
'காண் தகு கொள்கை உம்பர் இல் 'எனக் கருத்துள் கொண்டான்.            5.2.1

இலங்கையைக் கண்டு ஆரவாரித்தல்

'கண்டனென் இலங்கைமூதூர்! கடிபொழில், கனக நாஞ்சில்,
மண்டல மதிலும், கொற்ற வாயிலும், மணியில் செய்த
வெண் தளக் களப மாட வீதியும், பிறவும்! 'என்னா,
அண்டமும் திசைகள் எட்டும் அதிரத் தோள் கொட்டி ஆர்த்தான்.            5.2.2

அநுமன் தாளால் அழுந்திய மகேந்திரத்து நிகழ்ந்தவை (4850-4859)

வன் தந்த வரிகொள் நாகம் வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும் புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற, நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப் பிதுங்கின குடர்கள் மான.            5.2.3

புகல் அரும் முழையுள் துஞ்சும் பொங்கு உளைச் சிங்கம் பொங்கி,
உகல் அரும் குருதி கக்கி, உள் உற நெரிந்த; ஊழின்
அகல் அரும் பரவை நாண அரற்றுறு குரல ஆகிப்
பகல் ஒளி கரப்ப வானை மறைத்தன பறவை எல்லாம்.            5.2.4

மொய் உறு செவிகள் தாழ்ந்து முதுகு உற, முறை கால் தள்ள,
மை உறு விசும்பின் ஊடு நிமிர்ந்த வாலதிய, மஞ்சின்
மெய் உறத் தழீஇய மெல் என் பிடியொடும், வெருவலோடும்,
கை உற மரங்கள் சுற்றிப் பிளிறின களிநல் யானை.            5.2.5

பொன்பிறழ் சிமையக் கோடு பொடி உறப், பொறியும் சிந்த,
மின்பிறழ் குடுமிக் குன்றம் வெரிந் உற நெரியும் வேலை,
புன் புற மயிரும் பூவா, கண்புலம் புறத்து நாறா,
வன் பறழ் வாயில் கௌவி, வல்லியம் இரிந்த மாதோ!      5.2.6

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய் நெரிந்து சிந்தத்,
தூக்கு உறு தோலர், வாளர், துரிதத்தின் எழுந்த தோற்றம்,
தாக்கு உறு செருவில் நேர்ந்தார் தாளற வீசத் தாவி,
மேக்கு உற விசைத்தார் என்னப் பொலிந்தனர் விஞ்சை வேந்தர்!            5.2.7

தாரகை, சுடர்கள், மேகம், என்று இவை தவிரத் தாழ்ந்து,
பார் இடை அழுந்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்,
கூர் உகிர்க் குவவுத் தோளான் கூம்பு எனக், குமிழி பொங்க,
ஆர்கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!            5.2.8

தாது உகு நறு மென் சாந்தம், குங்குமம், குலிகம், தண் தேன்,
போது உகு பொலம் தாது, என்று இத் தொடக்கத்த யாவும் பூசி,
மீது உறு சுனை நீர் ஆடி, அருவி போய் உலகின் வீழ்வ,
ஓதிய குன்றம் கீறிக் குருதி நீர் சொரிவது ஒத்த!            5.2.9

கடல் உறும் மத்து இது என்னக் கன வரை திரியும் காலை,
மிடல் உறு புலன்கள் வென்ற மெய்த் தவர் விசும்பின் உற்றார்,
திடல் உறு கிரியில் தத்தம் செய்வினை முற்றி முற்றா
உடல் உறு பாசம் வீசா, உம்பர்ச் செல்வாரை ஒத்தார்.            5.2.10

வெயில் இயல் குன்றம் கீறி வெடித்தலும், நடுக்கம் எய்தி
மயில் இயல் தளிர்க்கை மாதர் தழீஇக் கொளப், பொலிந்த வானோர்,
அயில் எயிற்று அரக்கன் அள்ளத் திரிந்த நாள், அணங்கு புல்லக்
கயிலையில் இருந்த தேவைத் தனித்தனிக் கடுத்தல் செய்தார்!            5.2.11

ஊறிய நறவும், உற்ற குற்றமும், உணர்வை உண்ணச்,
சீறிய மனத்தர், தெய்வ மடந்தையர், ஊடல் தீர்வுற்று
ஆறினர், அஞ்சுகின்றார், அன்பரைத் தழுவி உம்பர்
ஏறினர், இட்டு நீத்த பைங் கிளிக்கு இரங்குகின்றார்.            5.2.12

அநுமன் கடல் கடக்க விரைதல்

இத் திறம் நிகழும் வேலை, இமையவர், முனிவர், மற்றும்
முத்திறத்து உலகத்தாரும், முறைமுறை விசும்பின் மொய்த்தார்,
தொத்து உறு மலரும், சாந்தும், சுண்ணமும், மணியும், தூவி,
'வித்தக! சேறி 'என்றார்; வீரனும் விரைவது ஆனான்.            5.2.13

துணைவர் கூற்றும் தூயவன் இசைவும்

'குறு முனி குடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது, விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல் வீர!
சிறிது இது என்று இகழல் பாலை அல்லை; நீ சேறி! 'என்னா
உறுவலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.            5.2.14

அநுமன் தன் உறுப்புக்களைத் தொழிற்படுத்து மேலெழுதல் (4862-4863)

'இலங்கையின் அளவிற்று அன்றால், இவ் உரு எடுத்த தோற்றம்!
விலங்கவும் உளதன்று! 'என்று, விண்ணவர் வியந்து நோக்க,
அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து, அடித்துணை அழுத்தலோடும்,
பொலம் கெழு மலையும், தாளும், பூதலம் புக்க மாதோ!            5.2.15

வால் விசைத்து எடுத்து, வன் தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி, மானத்
தோல் விசைத் தோள்கள் பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டும்
கால் விசைத் தடக்கை நீட்டி, கண்புலம் கதுவா வண்ணம்,
மேல் விசைத்து எழுந்தான், உச்சி விரிஞ்சன் நாடு உரிஞ்ச வீரன்.            5.2.16

அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை (4864-4869)

ஆயவன் எழுதலோடும், அரும் பணை மரங்கள் யாவும்,
வேய் உயர் குன்றும், வென்றி வேழமும், பிறவும், எல்லாம்
'நாயகன் பணி இது! 'என்னா, நளி கடல் இலங்கை தாமும்
பாய்வன என்ன, வானம் படர்ந்தன, பழுவம் மான!            5.2.17

இசை உடை அண்ணல் சென்ற வேகத்தால், எழுந்த குன்றும்
பசை உடை மரமும், மாவும், பல் உயிர்க் குலமும், வல்லே
திசை உறச் சென்று சென்று, செறிகடல் இலங்கை சேரும்
விசை இல ஆகித் தாழ்ந்து வீழ்வன என்ன வீழ்ந்த!            5.2.18

மாவொடு, மரமும், மண்ணும், வல்லியும், மற்றும், எல்லாம்,
போவது புரிந்த வீரன் விசையினால், புணரி போர்க்கத்
தூவின, கீழும் மேலும் தூர்த்தன, சுருதி அன்ன
சேவகன் சேரா முன்னம் சேதுவும் இயன்ற மாதோ!            5.2.19

கீண்டது வேலை நல் நீர், கீழ் உறக் கிடந்த நாகர்
வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட, மணிகள் மின்ன,
ஆண்தகை அதனை நோக்கி, 'அரவினுக்கு அரசன் வாழ்வும்
காண்தகு தவத்தன் ஆனேன் யான் 'எனக் களிப்புக் கொண்டான்.            5.2.20

வெய்து, வான் சிறையினால் நீர் வேலையைக் கிழிய வீசி,
நொய்தின் ஆர் அமுதம் கொண்ட நோன்மையே நுவலும் நாகர்,
'உய்தும் நாம் என்பது என்னே? உறுவலிக் கலுழன் ஊழின்
எய்தினான் ஆம் 'என்று எண்ணி, அலக்கண் உற்று, இரியல் போனார்!            5.2.21

துள்ளிய மகர மீன்கள் துடிப்பு அறச், சுறவு தூங்க,
ஒள்ளிய பனைமீன் துஞ்சத், திவலையது ஊழிக் காலின்,
வள் உகிர் வீரன் செல்லும் விசை பொர மறுகி, வாரி
தள்ளிய திரைகள் முந்து உற்று, இலங்கை மேல் தவழ்ந்த மாதோ!            5.2.22

விசும்பில் விரைந்து செல்லும் அநுமன் தோற்றம் (4870-4878)

இடுக்கு உறு பொருள்கள் என்னாம்? எண்திசை சுமந்த யானை
நடுக்கு உற, விசும்பில் செல்லும் நாயகன் தூதன், நாகம்
ஒடுக்கு உறு காலை, வன் காற்று அடியொடும் ஒடித்த அந்நாள்,
முடுக்கு உறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியை ஒத்தான்!            5.2.23

கொட்பு உறு புரவித் தெய்வக் கூர் நுதிக் குலிசத்தாற்கும்,
கண் புலம் கதுவல் ஆகா வேகத்தான், கடலும், மண்ணும்
உள்படக் கூடி அண்டம் உற உள செலவின், ஒற்றைப்
புட்பக விமானம் தான் அவ் இலங்கை மேல் போவது ஒத்தான்!                  5.2.24

விண்ணவர் ஏத்த, வேத முனிவரர் வியந்து வாழ்த்த,
மண்ணவர் இறைஞ்சச், செல்லும் மாருதி, மறம் உள் கூர,
'அண்ணல் வாள் அரக்கன் தன்னை அமுக்குவென் இன்னும்! 'என்னாக்
கண்ணுதல் ஒழியச் செல்லும் கயிலையங் கிரியை ஒத்தான்!            5.2.25

மாணியாம் வேடம் தாங்கி, மலர் அயற்கு அறிவு மாண்டு, ஓர்
ஆணியாய், உலகுக்கு எல்லாம் அறப்பொருள் நிரப்பும் அண்ணல்,
சேண் உயர் நெடுநாள் தீர்ந்த திரிதலைச் சிறுவன் தன்னைக்
காணிய விரைவில் செல்லும் கனக மால் வரையும் ஒத்தான்!            5.2.26

மழை கிழித்து உதிர மீன்கள், மறி கடல் பாய, வானம்
குழைவு உறத், திசைகள் கீற, மேருவும் குலுங்கக், கோட்டின்
முழை உடைக் கிரிகள் முற்ற, முடுகுவான், முடிவு காலத்து
அழிவு உறக் கடுகும் வேகத் தாதையும் அனையன் ஆனான்!                  5.2.27

தடக்கை நால் ஐந்து பத்துத் தலையொடும் உடையான் தானே,
அடக்கி ஐம்புலன்கள் வென்ற தவம் பயன் அறுதலாலே,
கெடக் குறியாகி, மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி,
வடக்கு எழுந்து இலங்கை செல்லும் பருதி வானவனும் ஒத்தான்!            5.2.28

புறத்து உறல் அஞ்சி, வேறு ஓர் அரணம் புக்கு உறைதல் போக்கி,
மறத் தொழில் அரக்கன் வாழும் மாநகர் மனுவின் வந்த
திறத்தகை இராமன் என்னும் சேவகற் பற்றிச் செல்லும்
அறத்தகை அரசன் திண் போர் ஆழியும் அனையன் ஆனான்!            5.2.29

கேழ் உலாம் முழு நிலாவில், கிளர் ஒளி இருளைக் கீறப்,
பாழி மா மேரு நாண, விசும்பு இடைப் படர்ந்த தோளான்,
ஆழி சூழ் உலகம் எல்லாம் அரும் கனல் முருங்க உண்ணும்
ஊழிநாள், வடபால் தோன்றும் உவா முழு மதியும் ஒத்தான்!            5.2.30

அடல் எல் ஆம் திகிரி மாயற்கு அமைந்த தன் ஆற்றல் காட்டக்,
குடல் எலாம் அவுணர் சிந்தக், குன்று எனக் குறித்து நின்ற
திடல் எலாம் தொடர்ந்து செல்லச், சேண் விசும்பு ஒதுங்கு அத்தெய்வக்
கடல் எலாம் கடக்கத் தாவும், கலுழனும் அனையன் ஆனான்!            5.2.31

அநுமன் வேகம் கண்டு வானவர் வியத்தல்

நாலினோடு உலகம் மூன்றும் நடுக்கு உற, அடுக்கும் நாகர்
மேல் இல் மேல் நின்ற காறும் சென்ற கூலத்தன், 'விண்டு
காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக் கால
வாலினால் அளந்தான்! 'என்று, வானவர் மருளச், சென்றான்!            5.2.32

அநுமன் வாலின் தோற்றம் (4880-4881)

விளித்துப் பின் வேலை தாவும் வீரன் வால், வேதம் எய்க்கும்
அளித் துப்பின் அநுமன் என்னும் அருந் துணை பெற்றதாயும்,
களித்துப் புன் தொழில் மேல் நின்ற அரக்கர் கண்ணுறுவர் என்ன
ஒளித்துப் பின்செல்லும் காலன் பாசத்தை ஒத்தது அன்றே!                  5.2.33

மேருவை முழுதும் சூழ்ந்து, மீது உற்ற வேக நாகம்,
கார்நிறத்து அண்ணல் ஏவக் கலுழன் வந்து உற்ற காலைச்
சோர்வு உறும் மனத்த தாகிச், சுற்றிய சுற்று நீங்கிப்
பேர்வுறுகின்றவாறும் ஒத்தது, அப் பிறங்கு பேழ்வால்!            5.2.34

அநுமன் வேகத்தால் நிகழ்ந்தவை (4882-4884)

குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத்தோள் குரக்குச் சீயம்,
சென்று உறு வேகத் திண்கால் எறிதரத், தேவர் வைகும்
மின்தொடர் வானத்து ஆன விமானங்கள், விசையில் தம்மில்
ஒன்றொடு ஒன்று உடையத் தாக்கி, மாக்கடல் உற்ற மாதோ!                  5.2.35

வலங்கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்கியது! 'ஏகுவான்தன் கருத்து என் கொல்? 'என்னும் கற்பால்;
'விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்கையின் அளவு அன்று! 'என்னா, இம்பர் நாடு இரிந்தது இப்பால்!            5.2.36

'ஓசனை உலப்பு இலாத உடம்பு அமைந்து உடைய! 'என்னத்,
தேசமும், நூலும், சொல்லும் திமிங்கில கிலங்கேளாடும்,
ஆசையை உற்ற வேலை கலங்க, அன்று அண்ணல் யாக்கை
வீசிய காலின், வீந்து மிதந்தன மீன்கள் எல்லாம்!            5.2.37

முன்னே நீட்டிய அநுமன் கைகளின் தோற்றம மைந்நாகமலையின் தோற்றம் (4846-4892)

பொரு அரும் உருவத்து அன்னான் போகின்ற பொழுது, வேகம்
தருவன தடக்கை, தள்ளா நிமிர்ச்சிய தம்முள் ஒப்ப,
ஒருவு அரும் குணத்து வள்ளல், ஓர் உயிர்த் தம்பி, என்னும்
இருவரும் முன்னர்ச் சென்றால் ஒத்தன, இரண்டு பாலும்!                  5.2.38

மைந்நாகமலையின் தோற்றம் (4846-4892)

இந் நாகம் அன்னான், எறி கால் என ஏகும் வேலைத்,
திந்நாகம் மா வில் செறி கீழ்த்திசை காவல் செய்யும்
கைந் நாகம், அந்நாள் கடல் வந்தது ஒர் காட்சி தோன்ற
மைந்நாகம் என்னும் மலை வான் உற வந்தது அன்றே!            5.2.39

மீ ஓங்கு செம்பொன் முடி ஆயிரம் மின் இமைப்ப,
ஓயா அருவித் திரள் உத்தரியத்தை ஒப்பத்,
தீயோர் உளராகியகால் அவர் தீமை தீர்ப்பான்,
மாயோன், மகரக் கடல்நின்று எழும் மாண்பது ஆகி!                  5.2.40

நூல் ஏந்து கேள்வி நுகரார், புலன் நோக்கல் உற்றார்
போல் ஏந்தி நின்ற தனி ஆண்மை பொறாது நீங்கக்,
கால் ஆழ்ந்து அழுந்திக், கடல் புக்குழி, கச்சம் ஆகி
மால் ஏந்த ஓங்கும் நெடு மந்தர வெற்பு மானா!            5.2.41

தள்ளற்கு அரும் நல் சிறை மாடு தழைப்பொடு ஓங்க,
எள்ளற்கு அரும் நல் நிறம் எல்லை இலாது பொங்க,
வள்ளல் கடலைக் கெடநீக்கி, மருந்து வௌவி,
உள் உற்று எழும் ஓர் உவணத்து அரசு ஏயும் ஒப்ப!            5.2.42

ஆன்று ஆழ் நெடு நீர் இடை ஆதியொடு அந்தம் ஆகித்
தோன்றாதுநின்றான் அருள் தோன்றிட முந்து தோன்றி,
மூன்று ஆம் உலகத்தொடும் முற்று உயிராய மற்றும்
ஈன்றானை ஈன்ற சுவணத் தனி அண்டம் என்ன!                  5.2.43

'இந்நீரில் என்னைத் தரும் எந்தையை எய்தி அன்றி
செய்ந்நீர்மை செய்யேன்! 'எனச் சிந்தனை செய்து, நொய்தின்,
அந்நீரில் வந்த முதல் அந்தணன், ஆதி நாள் அம்
முந்நீரில் மூழ்கித், தவம் முற்றி, முளைத்தவா போல்!                  5.2.44

பூவால் இடையூறு புகுந்து, பொறாத நெஞ்சின்
கோ ஆம் முனி சீறிட, வேலை குளித்த எல்லாம்,
மூவா முதல் நாயகன் மீள முயன்ற அந்நாள்,
தேவ ஆசுரர் வேலையில் வந்து எழு திங்கள் என்ன!            5.2.45

மைந்நாகம் எழுந்தகாலத்து நிகழ்ந்தவை (4893-4897)

நிறம் குங்குமம் ஒப்பன, நீல் நிறம் வாய்ந்த, நீரின்
இறங்கும் பவளக் கொடி சுற்றின, செம்பொன் ஏய்ந்த,
பிறங்கும் சிகரப் படர் முன்றில் தொறும், பிணாவோடு
உறங்கும் மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்து பேர!            5.2.46

கூன் சூல் முதிர் இப்பி குரைக்க நிரைத்த பாசி
வான் சூல் மழை ஒப்ப வயங்கு பளிங்கு முன்றில்
தான் சூலநாளில் தகை முத்தம் உயிர்த்த சங்கம்
மீன்சூழ்வரும் அம் முழு வெண்மதி வீறு சீற!            5.2.47

பல்லாயிரம் ஆயிரம் காசு இனம் பாடு இமைக்கும்
கல்லார் சிமயத் தடம் கைத்தலம் நீண்டு காட்டித்
தொல் ஆர்கலியுள் புக மூழ்கி வயங்கு தோற்றத்து
எல் ஆர் மணி ஈட்டம் முகந்து எழுகின்றது என்ன!            5.2.48

மனையில் பொலி மாக நெடுங்கொடி மாலை ஏய்ப்ப
வினையில் திரள் வெள் அருவித்திரள் தூங்கி வீழ
நினைவில் கடலூடு எழலோடும் உணர்ந்து நீங்காச்
சுனையில் பனைமீன் திமிலோடு தொடர்ந்து துள்ள!            5.2.49

கொடு நாலொடு இரண்டு குலப்பகை, குற்றம் மூன்றும்,
சுடு ஞானம் வெளிப்பட, உய்ந்த துயக்கு இலார்போல்,
விடம் நாகம் முழைத்தலை விம்மல் உழந்து, வீங்கி,
நெடுநாள் பொறை உற்ற உயிர்ப்பு நிமிர்ந்து நிற்ப!            5.2.50

அநுமன் மைந்நாகத்தைக் கண்டு அயிர்த்தல்

எழுந்து ஓங்கி, விண்ணோடு மண் நோக்க, இலங்கும் ஆடி
உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் எங்கும்
கொழுந்து ஓடி நின்ற கொழுங்குன்றை வியந்து நோக்கி,
அழுங்கா மனத்து அண்ணல், 'இது என்கொல்? ' எனா அயிர்த்தான்.            5.2.51

அநுமன் மைந்நாகத்தைத் தலை கீழுறத் தள்ளி மேலெழுதல்
'நீர்மேல் படரா, நெடுங்குன்று நிமிர்ந்து நிற்றல்
சீர்மேல் படராது 'எனச் சிந்தை உணர்ந்து, செல்வான்,
வேர் மேல்பட வன்தலை கீழ்ப்பட, நூக்கி, விண்ணோர்
ஊர்மேல் படரக் கடிது உம்பரின் மீது உயர்ந்தான்!            5.2.52

மைந்நாகம் மீண்டும் எழுந்து அநுமனொடு கூறல் (4900-4904)

உந்தாமுன் உலைந்து உயர் வேலை ஒளித்த குன்றம்
சிந்தாகுலம் உற்றது; பின்னரும் தீர்வில் அன்பால்
வந்து ஓங்கி ஆண்டு ஓர் சிறு மானுட வேடம் ஆகி
'எந்தாய்! இது கேள்! 'என இன்ன இசைத்தது அன்றே.            5.2.53

'வேற்றுப் புலத்தோன் அலன், ஐய! விலங்கல் எல்லாம்
மாற்றுச் சிறை என்று, அரி, வச்சிரம் மாண ஓச்ச,
வீற்றுப்பட நூறிய வேலையின், வேலை உய்த்துக்
காற்றுக்கு இறைவன் எனைக் காத்தனன், அன்பு காந்த. '            5.2.54

'அன்னான் அருங்காதலன் ஆதலின் அன்பு தூண்ட
என்னால் உனக்கு ஈண்டு செயற்கு உரித்தாயது இன்மை
பொன்னார் சிகரத்து இறை ஆறினை போதி என்னா
உன்னா உயர்ந்தேன் உயர்விற்கும் உயர்ந்த தோளாய்!            5.2.55

'கார் மேக வண்ணன் பணி பூண்டனன், காலின் மைந்தன்
தேர்வான் வருகின்றனன் சீதையைத், தேவர் உய்யப்
பேர்வான் அயல் சேறி, இதில் பெரும்பேறு இல்! 'என்ன
நீர்வேலையும் என்னை உரைத்தது, நீதிநின்றாய்!            5.2.56

'நல் தாயினும் நல்லன் எனக்கு இவன்! என்று நாடி
இற்றே, இறை! எய்தினன்; ஏயது கோடி என்னால்;
பொன்தார் அகல் மார்ப தம் இல்லுழை வந்த போதே
உற்றார்செயல் மற்றும் உண்டோ? 'என உற்று உரைத்தான்.            5.2.57

அநுமன் மைந்நாகத்தை நோக்கல்

உரைத்தான் உரையால், இவன் ஊறு இலன் என்பது உன்னி,
விரைத் தாமரை வாள் முகம் விட்டு விளங்க, வீரன்
சிரித்தான் அளவே சிறிது அத்திசைச் செல்ல நோக்கி,
வரைத்தாழ் நெடும் பொன் குடுமித் தலை மாடு கண்டான்.            5.2.58

அநுமன் மைந்நாகத்தொடு கூறல் (4906-4907)

'வருந்தேல்! இது என்? துணை வானவன் வைத்த காதல்!
அருந்தேன் இனி யாதும் ஒன்று, ஆசை நிரப்பி அல்லால்;
பெருந் தேன்மொழி சார நின் அன்பு பிணித்த போதே
இருந்தேன், நுகர்ந்தேன் : இதன்மேல் இனி ஈவது என்னோ? '                  5.2.59

'முன்பின் சிறந்தார் இடை உள்ளவர் காதல், முற்றப்
பின்பின் சிறந்தார்; குணம் நன்று இது! பெற்ற யாக்கைக்கு
என்பின் சிறந்து ஆயது ஒர் ஊற்றம் உண்டு என்னல் ஆமே?
அன்பின் சிறந்தாயது ஒர் பூசனை யார்கண் உண்டே? '            5.2.60

அநுமன் மைந்நாகத்தைப் பாராட்டி மேலும் செல்லுதல்

'ஈண்டே கடிது ஏகி, இலங்கை விலங்கல் எய்தி,
ஆண்டான் அடிமைத் தொழில் ஆற்றலின் ஆற்றல் உண்டே?
மீண்டால் நுகர்வேன் நின் விருந்து 'என வேண்டி, மெய்ம்மை
பூண்டான் அவன் கண்புலம் பிற்பட, முன்பு போனான்.            5.2.61

அநுமன் விரைவு

செவ்வான் கதிரும், குளிர் திங்களும், தேவர் வைகும்
வெவ்வேறு அரணங்களும், மீனொடு, மேகம், மற்றும்,
எவ்வாய் உலகத்தவும், ஈண்டி இருந்த தம்மின்
ஒவ்வாதன ஒத்திட, ஊழி வெம் காலும் ஒத்தான்!            5.2.62

அநுமன் விரைவால் நிகழ்ந்தவை (4910-4911)

நீர்மேல் கடல்மேல் நிமிர்கின்ற நிமிர்ச்சி நோக்காப்,
பார்மேல் தவழ் சேவடி பாய் நடவாப் பதத்து என்
தேர்மேல் குதிகொண்டவன், இத்திறம் சிந்தைசெய்தான்!
ஆர்மேல்கொல்? என்று எண்ணி, அருக்கனும் ஐயம் உற்றான்!            5.2.63

வாள் ஒத்து ஒளிர் வால் எயிறு ஊழின் மருங்கு இமைப்ப,
நீள் ஒத்து உயர் தோளின் விசும்பு நிரம்பு மெய்யின்,
கோள் ஒத்தவன் மேனி, விசும்பு இரு கூறு செய்யும்
நாள் ஒத்தது : மேல் ஒளி கீழ் இருள் உற்ற ஞாலம்!      5.2.64

சுரசை தோன்றுதல்

'மூன்று உற்ற தலத்திடை முற்றிய துன்பம் வீப்பான்
ஏன்று உற்று வந்தான் வலி எம்மை உணர்த்து நீ! 'என்று
ஆன்று உற்ற வானோர் குறைநேர, அரக்கி ஆகித்,
தோன்றுற்று நின்றாள், சுரசைப் பெயர்ச் சிந்தை தூயாள். 5.2.65

சுரசைகூற்று (4913-4914)

பேழ்வாய் ஒர் அரக்கி உருக்கொடு பெட்பின் ஓங்கிக்,
'கோள்வாய் அரியின் குலத்தாய்! கொடுங் கூற்றும் உட்க
வாழ்வாய் எனக்கு ஆம் இடமாய் வருவாய் கொல்? 'என்னா,
நீள்வாய் விசும்பும் தனது உச்சி நெருக்க நின்றாள்!      5.2.66

'தீயே எனல் ஆய பசி பிணி தீர்த்தல் செய்வான்
ஆயே விரைவு உற்று எனை அண்மினை, வண்மையாள!
நீயே இனி வந்து, நிணங்கொள் பிணங்கு எயிற்றின்
வாயே புகுவாய்! வழி மற்று இலை வானின்! 'என்றாள்.      5.2.67

அநுமன்கூற்று

'பெண்பால் ஒரு நீ பசிப் பீழை ஒறுக்க நொந்தாய் :
உண்பாய் எனது ஆக்கையை : யான் உதவற்கு நேர்வல்,
விண்பாலவர் நாயகன் ஏவல் இழைத்து மீண்டால்,
நண்பால் 'எனச் சொல்லினன், நல் அறிவாளன்; நக்காள்.      5.2.68

சுரசை கூற்றும் அநுமன் கூற்றும்

'காய்ந்து ஏழ் உலகங்களும் காண நின் யாக்கை தன்னை
ஆர்ந்தே பசிதீர்வன்! இது ஆணை! 'என்று அன்னள் சொன்னாள்.
ஓர்ந்தானும், 'இகந்து ஒருவேன்! நினது ஊழில் பேழ்வாய்ச்
சேர்ந்து ஏகுகின்றேன், வலையாம் எனில் தின்றிடு! 'என்றான்.            5.2.69

அநுமன் பேருருக் கொள்ளுதல்

அக்காலை அரக்கியும் அண்டம் அனந்தம் ஆகப்
புக்கால் நிறையாத புழைப் பெருவாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள்; அதுநோக்கி வீரன்
திக்கு ஆர் அவள்வாய் சிறிதாம்வகை சேணில் நீண்டான்.      5.2.70

அநுமன் சுரசை வாயுள் புக்கு மீளல்

நீண்டான், உடனே சுருங்கா, நிமிர் வாய் இடத்தின்
ஊண்தான் என உற்று, ஒர் உயிர்ப்பு உயிராத முன்னம்
மீண்டான்! அது கண்டனர் விண் உறைவோர்கள் : 'எம்மை
ஆண்டான் வலன்! 'என்று அலர்தூய், நெடிது ஆசி சொன்னார்.      5.2.71

சுரசை ஏத்தொடு தூதன் சென்றமை (4919-4921)

மின் மேல் படர் நோன்மையின் ஆம் உடல் வீக்கம் நீங்கித்,
தன்மேனியளாய், அவள், தாயினும் அன்பு தாழ,
'என் மேல் முடியாதன? 'என்று இனிது ஏத்தி நின்றாள்.
பொன் மேனியனும், நெடிது ஆசி புனைந்து, போனான்.      5.2.72

கீதங்கள் இசைத்தனர் கின்னரர் கீதம் நின்ற
பேதங்கள் இயம்பினர் பேதையர் ஆடல் மிக்க
பூதங்கள் தொடர்ந்து புகழ்ந்தன பூசுரேசர்
வேதங்கள் இயம்பினர் தனெ்றல் விருந்து செய்ய!      5.2.73

மந்தாரம் உந்து மகரந்தம் மணந்த வாடை
செந்தாமரை வாள் முகத்துச் செறி வேர் சிதைப்பத்
தம்தாம் உலகத்திடை விஞ்சையர் பாணி தாழாக்
கந்தார வீணைக்களி செஞ்செவி தாழ்ந்து நுங்க.      5.2.74

அங்காரதாரை தோற்றம் (4922-4924)

வெம் கார்நிறப் புணரி வேறேயும் ஒன்று அப்
பொங்கு ஆர்கலிப் புனல் தரப் பொலிவதே போல்
'இங்கு ஆர் கடத்திர் எனை? 'என்னா எழுந்தாள்
அங்காரதாரை பிறிது ஆலாலம் அன்னாள்!      5.2.75

காதக் கடும் குறி கணத்து இறுதி கண்ணாள்
பாதச் சிலம்பின் ஒலி வேலை ஒலி பம்ப
வேதக் கொழுஞ்சுடரை நாடி நெடு மேல்நாள்
ஓதத்து இன் ஊடு வரு கைடவனை ஒத்தாள்!      5.2.76

துண்டப் பிறைத்துணை எனச் சுடர் எயிற்றாள்;
கண்டத் திடைக் கறை உடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்!      5.2.77

அங்காரதாரையைக் கண்ட அநுமன் கருதியது (4925-4926)

நின்றாள் நிமிர்ந்து அலை நெடுங்கடலின் நீர் தன்
வன் தாள் அலம்ப முடி வான் முகடு வௌவ;
அன்று ஆய்திறத்தவன் அறத்தை அருேளாடும்
தின்றாள் ஒருத்தி இவள்! என்பது தெரிந்தான்.      5.2.78

பேழ் வாய் அகத்து அலது பேர் உலகம் மூடும்
நீள் வான் அகத்தின் இடை ஏகும் நெறி காணான்
வாழ் வான் அனுக்க வளர்வாள் பில வயிற்றைப்
போழ்வான் நினைத்து இனைய வாய்மொழி புகன்றான்.      5.2.79

அநுமன் வினவுதல்

'சாயா வரம் தழுவினாய்; தழிய பின்னும்
ஓயா உயர்ந்த விசை கண்டும் உணர்கில்லாய்!
வாயால் அளந்து நெடு வான்வழி அடைத்தாய்!
நீ யாரை? என்னை இவண் நின்ற நிலை? 'என்றான்.      5.2.80

அங்காரதாரை மறுமொழி

'பெண்பால் எனக் கருது பெற்றி ஒழி! உற்றால்
விண் பாலவர்க்கும் உயிர் வீடுவது மெய்யே!
கண்பால் அடுக்க உயர் காலன் வருமேனும்
உண்பால் ஒருத்தி; அது ஒழிப்பது அரிது! 'என்றாள்.      5.2.81

அநுமன் அங்காரதாரையின் வாயுள் புக்கு வயிற்றினைக் கிழித்து வெளிப்படல்

திறந்தாள் எயிற்றை அவள்! அண்ணல் இடை சென்றான்!
அறந்தான் அரற்றியது! அயர்த்து அமரர் எய்த்தார்!
இறந்தான் எனக்கொடு; ஒர் இமைப்பதனின் முன்னம்
பிறந்தான்! எனப் பெரிய கோளரி பெயர்ந்தான்!      5.2.82

அங்காரதாரை வயிற்றிலிருந்து வெளிவந்த அநுமன் தோற்றம் (4930-4931)

கள்வாய் அரக்கி கதறக் குடர் கணத்தில்
கொள் வார் தடக்கையன் விசும்பின்மிசை கொண்டான்
முள் வாய் பொருப்பின் முழை எய்தி மிக நொய்தின்
உள் வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான்!      5.2.83

சாகா வரத் தலைவரில் திலகம் அன்னான்
ஏகா அரக்கி குடர் கொண்டு உடன் எழுந்தான்
மா கால் விசைக்க வடம் மண்ணில் உற வாலோடு
ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை ஆனான்!      5.2.84

அநுமன் வென்றியால் நிகழ்ந்தவை

ஆர்த்தார்கள் வானவர்கள்; தானவர் அழுங்கா
வேர்த்தார்; விரிஞ்சனும் வியந்து மலர்வெள்ளம்
தூர்த்தான்; அகன் கயிலையில் தொலைவு இலோனும்
பார்த்தான்; முனி தலைவர் ஆசிகள் பகர்ந்தார்.      5.2.85

அநுமன் மீண்டும் ஏகுதல்

மாண்டாள் அரக்கி; அவள் வாய் வயிறு காறும்
கீண்டான் இமைப்பின் இடை மேருகிரி கீழா
நீண்டான் வயக் கதி நினைப்பின் நெடிது என்னப்
பூண்டான் அருக்கன் உயர் வானின்வழி போனான்!      5.2.86

அநுமன் நினைவு (4934-4935)

'சொற்றார்கள் சொற்றதுணை பல தொகையது அன்றோ?
முற்றா முடிந்த நெடு வானின் இடை முந்நீ
ரில் தாவி எற்று எனினும் யான் இனி இலங்கை
உற்றால் விலங்கும் இடையூறு 'என உணர்ந்தான்.      5.2.87

'ஊறு கடிது ஊறுவன; ஊறில் அறம் உன்னாத்
தேறல் இல் அரக்கர்புரி தீமை அவை தீரா
ஏறுவகை இங்கு உளது; இராம! என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல் 'என மதித்தான்.      5.2.88

அநுமன் பவளமலையில் பாய்தல்

தசும்பு உடைக் கனகம் நாஞ்சில் கடிமதில் தணித்து நோக்கா,
அசும்பு உடைப் பிரசத் தெய்வக் கற்பக நாட்டை அண்மி,
விசும்பு இடை செல்லும் வீரன் விலங்கி வேறு, இலங்கை மூதூர்ப்
பசும் புடைச் சோலைத்து ஆங்கோர் பவள மால் வரையில் பாய்ந்தான்!      5.2.89

பவளமலை சலித்தல்

மேக்கு உறச் செல்வோன் பாய, வேலைமேல் இலங்கை வெற்பு
நூக்கு உறுத்து, அங்கும் இங்கும் தள்ளுற, நுடங்கும் நோன்மை,
போக்குறற்கு இடையூறாகப் புயலொடு பொதிந்த வாடை
தாக்குறத் தகர்ந்து சாயும் கலம் எனத் தக்கது அன்றே!      5.2.90

அநுமன் இலங்கையைக் காண்டல்

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை
எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,
விண்ணிடை உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்
கண்ணடி வைத்தது அன்ன, இலங்கையைக் கண்ணில் கண்டான்!      5.2.91

அநுமன் இலங்கையை வியத்தல் (4939-4941)

நல் நகர் அதனை நோக்கி, நளினக் கை மறித்து, 'நாகர்
பொன் நகர் இதனை ஒக்கும் என்பது புல்லிது, அம்மா!
அந்நகர், இதனின் நன்றேல், அண்டத்தை முழுதும் ஆள்வான்
இந்நகர் இருந்து வாழான்! இது, அதற்கு ஏது! 'என்றான்.      5.2.92

'மாண்டது ஓர் நிலத்திற்றாம் 'என்று உணர்த்துதல் வாய்மைத்து அன்றால்!
வேண்டிய வேண்டின் எய்தி வெறுப்பு இன்றி விழைந்த துய்க்கும்
ஈண்டு அரும் போக இன்பம் ஈறு இலது, யாண்டுக் கண்டாம்,
ஆண்டு அது துறக்கம்! அஃதே அருமறைத் துணிவும், அம்மா!      5.2.93

'உள் புலம் எழுநூறு என்பர் ஓசனை; உலகம் மூன்றில்
தடெ்பு உறு பொருள்கள் எல்லாம் இதன் உழைச் செறிந்த என்றால்,
நுட்புலம் நுணங்கு கேள்வி நுழைவினர் எனினும், நோக்கும்
கண் புலம் வரம்பிற்றாமே? காட்சியும் கரையிற்றாமே?      5.2.94
------------------

5.3 ஊர் தேடு படலம் (4942- 5175)

இலங்கை நகர மாடவருணனை (4942-4949)

பொன்கொண்டு இழைத்த? மணியைக்கொடு பொதிந்த?
மின்கொண்டு அமைத்த? வெயிலைக்கொடு சமைத்த?
என்கொண்டு இயற்றிய? எனத் தெரிவு இலாத
வன் கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்!       5.3.1

நாக ஆலயங்கெளாடு நாகர் உலகும் தம்
பாகு ஆர் மருங்கும் இல என்ன உயர் பண்ப!
ஆகாயம் அஞ்ச அகல் மேருவை அனுக்கும்
மாகால் வழங்கு சிறு தனெ்றல் என நின்ற!       5.3.2

மாகாரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி
மீகாரம் எங்கணும் நறும் துகள் விளக்கி
ஆகாய கங்கையினை அங்கையினின் அள்ளிப்
பாகு ஆய செம் சொல் அவர் வீசுபடு அகாரம்!       5.3.3

பஞ்சி ஊட்டிய பரட்டு இசை கிண்கிணிப் பதுமச்
செம் செவிச் செழும் பவளத்தின் கொழுஞ் சுடர் சிதறி,     
மஞ்சின் அஞ்சன நிறம் மறைத்து அரக்கியர் வடித்த
அம் சில் ஓதியோடு உவமைய ஆக்குற அமைவ!            5.3.4

நான நாள் மலர்க் கற்பக நறுவிரை நான்ற
பானம் வாய் உற வெறுத்த தாள் ஆறு உடைப் பறவை
தேன் அவாம் விரைச் செழுங் கழுநீர்த் துயில் செய்ய
வான யாறு தம் அரமியத் தலம் தொறும் மடுப்ப!            5.3.5

குழலும், வீணையும், யாழும், என்று இனையன குழைய,
மழலை மென்மொழி கிளிக்கு இருந்து அளிக்கின்ற மகளிர்
சுழலும் நல்நெடும் தடமணிச் சுவர்தொறும் துவன்றும்
நிழலும், தம்மையும், வேற்றுமை தெரிவரு நிலைய!       5.3.6

இனைய மாடங்கள், இந்திரற்கு அமைவர எடுத்த
மனையின் மாட்சிய என்னின், அச் சொல்லும் மாசு உண்ணும் :
அனையவாம் எனின், அரக்கர்தம் திருவுக்கும் அளவை,
நினையலாம்? அன்றி உவகையும் அன்னதாய் நிற்கும்!       5.3.7

மணிகள் எத்துணை பெரியவும், மால் திரு மார்பின்
அணியும் காசினும் அகன்றன உள எனல் அரிதால்;
திணியும் நல் நகர்த் திருமனை, தெய்வமாத் தச்சன்
துணிவின் வந்தனன் தொட்டு அழகு இழைத்த அத் தொழில்கள்!       5.3.8

அரக்கர்பெருமை

மரம் அடங்கலும் கற்பகம் : மனை எலாம் கனகம் :
அர மடந்தையர் சிலதியர் அரக்கியர்க்கு; அமரர்
உரம் அடங்கி வந்து உழையராய் உழல்குவர் : ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது! தவம் செய்த தவமால்!       5.3.9

இராவணன் பெருமை

தேவர் என்பவர் யாரும் இத் திருநகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர் செய்கிலாதவர் எவர்? என்னின்
மூவர் தம்முளும் ஒருவன் அங்கு உழையனா முயலும்!
தாவில் மாதவம் அல்லது பிறிது ஒன்று தகுமோ?       5.3.10

படைமிகுதி (4952-4953)

போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலில், புறம்போய்
நேர் இயன்ற வன் திசைதொறும் நின்ற மா நிற்க,
ஆரியன் தனித் தெய்வ மாக் களிறும், ஓர் ஆழிச்
சூரியன் தனித் தேருமே, இந்நகர்த் தொகாத!       5.3.11

வாழும் மன் உயிர் யாவையும் ஒருவழி வாழும்
ஊழி நாயகன் திருவயிறு ஒத்துளது இவ் ஊர்!
ஆழி அண்டத்தின், அருக்கன்தன் அலங்கு தேர்ப் புரவி
ஏழும் அல்லன, ஈண்டு உள குதிரைகள் எல்லாம்!       5.3.12

பலவகையொலி

தழங்கு பேரியின் அரவமும், தகை நெடும் களிறு
முழங்கும் ஓதையும், மூரிநீர் முழக்கொடு முழங்கும்;
கொழுங் குழல் புதுக் குதலையர் நூபுரக் குரலின்,
வழங்கும் மேகலைக் கிண்கிணி வயின்தொறும் மறையும்!       5.3.13

இலங்கைநகரின் பெருமை (4955-4959)

மரகதத்தினும், மற்று உள மணியினும், வனைந்த
குரகதத் தனித் தேர் எலாம் இமைப்பு இல் பல் கோடி
இரவி வெட்க நின்று இமைக்கின்ற இயற்கைய என்றால்,
நரகம் ஒக்குமால் நல் நெடும் துறக்கம் இந்நகர்க்கு!       5.3.14

திருகு வெம் சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்,
அருகு போகின்ற திங்களும் மறு அற்றது, அழகைப்
பருகும் இந்நகர்த் துன் ஒளி பரத்தலில், பசும்பொன்
உருகுகின்றது போன்று உளது உலகு சூழ் உவரி!       5.3.15

அண்டம் முற்றவும் விழுங்கு இருள் அகற்றும் நின்று, அகல்வான்
கண்ட அத் தனிக் கடிநகர் நெடுமனை; கதிர்கட்கு
உண்டு அவ் ஆற்றல் என்று உரைப்பு அரிது! ஒப்பிடில், தம்முன்
விண்டவாய்ச் சிறு மின்மினி என்னவும் விளங்கா!       5.3.16

தேனும், சாந்தமும், மான்மதச் செறி நறும் சேறும்,
வான நாள் மலர் கற்பக மலர்களும், வய மாத்
தான வாரியும் நீரொடு மடுத்தலில் தழீஇய
மீனும், தானும், ஓர் வெறிமணம் கமழுமால் வேலை!       5.3.17

தெய்வத் தச்சனை புகழ்துமோ? செங்கண் வாள் அரக்கன்
மெய் ஒத்து ஆற்றிய தவத்தையே வியத்துமோ? விரிஞ்சன்
ஐயப்பாடு இலா வரத்தையே மதித்துமோ? அறியாத்
தொய்யல் சிந்தையேம் யாவரை யாது என்று துதிப்பேம்?       5.3.18

பொழில் சிறப்பு

வானும் நிலனும் பெறுமாறு இனி மற்றும் உண்டோ?
கானும் பொழிலும் இவை செங் கனகத்தினாலும்
ஏனை மணியாலும் இயற்றிய வேனும் யாவும்
தேனும் மலரும் கனியும் தரச் செய்த செய்கை.       5.3.19

கோபுரவருணனை

நீரும், வையமும், நெருப்பும், மேல் நிமிர் நெடும் காலும்
மாரி வானமும், வழங்கல வாகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடும் கோபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்தால்,
மேரு எங்ஙனம் விளர்க்குமோ உடல் முற்றும் வெள்கி?       5.3.20

மதில் வருணனை (4962-4965)

முன்னம் யாவரும், 'இராவணன் முனியும் என்று எண்ணிப்
பொன்னின் மாநகர் மீச்செலான் கதிர் 'எனப் புகல்வார்;
கன்னி ஆரையின் ஒளியினில் கண்வழுக் குறுதல்
உன்னி, நாள்தொறும் விலங்கினன் போதலை உணரார்!       5.3.21

'தீய செய்குநர் தேவரால், அனையவர் சேரும்
வாயில் இல்லது ஓர் வரம்பு அமைக்குவன் 'என மதியாக்
காயம் என்னும் அக் கணக்கு அறு பதத்தையும் கடக்க
ஏயும் நல் மதில் இட்டனன், கயிலை அன்று எடுத்தான்!       5.3.22

கறங்கு கால் புகா, கதிரவன் ஒளி புகா, மறலி
மறம் புகாது, இனி, வானவர் புகார் என்கை வம்பே!
திறம்பு காலத்துள், யாவையும் சிதையினும் சிதையா
அறம் புகாது, இந்த அணிமதிள் கிடக்கைநின்று அகத்தின்!       5.3.23

கொண்ட வான் திரைக் குரைகடல் இடையதாய்க் குடுமி
எண் தவா விசும்பு எட்ட நின்று இமைக்கின்ற இயல்பால்,
பண்டு அரா அணைப் பள்ளியான் உந்தியில் பயந்த
அண்டமேயும் ஒத்து இருந்தது இவ் அணி நகர் அமைதி!       5.3.24

இலங்கைநகர் வாழ்வோர் செயல் (4966-4981)

பாடுவார் பலர், எண் இல் மற்று அவரினும் பலரால்
ஆடுவார்கள், மற்று அவரினும் பலருளர் அமைதி
கூடு வாரிடை இன்னியம் கொட்டுவார், முட்டு இல்
வீடு காண்குறும் தேவரால் விழு நடம் காண்பார்!       5.3.25

வானம் மாதரோடு இகலுவர் விஞ்சையர் மகளிர்,
ஆன மாதரோடு ஆடுவர் இயக்கியர், அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவர், தொடர்ந்தால்,
ஏனை நாகியர் அரு நடக் கிரியை ஆய்ந்திருப்பார்!       5.3.26

செல்வ வளம்

இழையும், ஆடையும், மாலையும், சாந்தமும், ஏந்தி
உழையர் என்ன நின்று உதவுவ நிதியங்கள்! ஒருவர்
விழையும் போகமே இங்கு இது? வாய்கொடு விளம்பின்,
குழையும்! நெஞ்சினால் நினையினும் மாசு என்று கொள்ளும்!       5.3.27

நகர் அமைத்த திறம்

பொன்னின் மால்வரைமேல் மணி பொழிந்தன பொருவ,
உன்னி, நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை உரைப்பப்
பன்னி நாள் பல பணி உழந்து, அரிதினில் படைத்தான்,
சொன்ன வானவர் தச்சனாம், இந்நகர் துதிப்பான்!       5.3.28

மகர வீணையின் மந்தர கீதத்து மறைந்த
சகர வேலையின் ஆர்கலி! திசைமுகம் தழுவும்
சிகர மாளிகைத் தலம் தொறும் தெரிவையர் தீற்றும்
அகரு தூமத்தின் அழுந்தின முகில் குலம் அனைத்தும்!       5.3.29

பளிக்கு மாளிகைத் தலம் தொறும், இடம் தொறும், பசுந்தேன்
துளிக்கும் கற்பகத் தண் நறும் சோலைகள் தோறும்,
அளிக்கும் தேறல் உண்டு, ஆடுநர் பாடுநர் ஆகிக்,
களிக்கின்றார் அலால், கவல்கின்றார் ஒருவரைக் காணேன்!       5.3.30

தேறல் மாந்தினர், தேன் இசை மாந்தினர், செவ்வாய்
ஊறல் மாந்தினர், இன் உரை மாந்தினர், ஊடல்
கூறல் மாந்தினர், அனையவர்த் தொழுது, அவர் கோபத்து
ஆறல் மாந்தினர், அரக்கியர்க்கு உயிர் அன்ன அரக்கர்!       5.3.31

எறித்த குங்குமத்து இளமுலை எழுதிய தொய்யில்
கறுத்த மேனியில் பொலிந்தன! ஊடலில் கனன்று
மறித்த நேக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி
குறித்த கோலங்கள், பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி!       5.3.32

விளரிச் சொல்லியர் ஓதியால், வேலையுள் மிடைந்த
பவளக் கோடு எனப் பொலிந்தது! படைநெடும் கண்ணால்,
குவளைக் கோட்டகம் கடுத்தது! குளிர்முகக் குழுவால்,
முளரிக் கானமும் ஒத்தது, முழங்குநீர் இலங்கை!       5.3.33

எழுந்தனர் திரிந்து வைகும் இடத்ததாய், இன்று காறும்
கிழிந்திலது அண்டம், என்னும் இதனையே கிளப்பது அல்லால்,
அழிந்துநின்று ஆவது என்னே? அலர் உேளான் ஆதி ஆக, ஒழிந்த
வேறு உயிர்கள் எல்லாம், அரக்கருக்கு உறையும் போதா!       5.3.34

காயத்தால் பெரியர், வீரம் கணக்கு இலர், உலகம் கல்லும்
ஆயத்தார், வரத்தின் தன்மை அளவு அற்றார், அறிதல் தேற்றா
மாயத்தார், அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமே? மற்றோர்
தேயத்தார் தேயம் சேர்ந்தால், தேர்விலார் செருவிற் சேறல்!       5.3.35

கழல் உலாம் காலும், கால வேல் உலாம் கையும், காந்தும்
அழல் உலாம் கண்ணும், இல்லா ஆடவர் இல்லை! அன்னார்
குழல் உலாம் களி வண்டு ஆர்க்கும் குஞ்சியால், பஞ்சி குன்றா
மழலை யாழ்க் குதலைச் செவ்வாய் மாதரும் இல்லை மாதோ!       5.3.36

கள் உறக் கனிந்த பங்கி அரக்கரைக் கடுத்த! காதல்
புள் உறத் தொடர்வ, மேனி புலால் உறக் கடிது போவ,
வெள் உறுப்பு எயிற்ற, செய்ய தலையன, கரிய மெய்ய,
உள் உறக் களித்த, குன்றின் உயர்ச்சிய, ஓடை யானை!       5.3.37

வள்ளிநுண் மருங்குல் என்ன, வானவர் மருளின் உள்ளம்
தள்ளுறப் பாணி தள்ளா நடம் புரி தடம் கண் மாதர்,
வெள்ளிய முறுவல் தோன்றும் நகையர் தாம், வெள்குகின்றார்,
கள் இசை அரக்கர் மாதர் களித்திடும் குரவை காண்பார்!       5.3.38

ஒறுத்தலோ நிற்க, மற்றோர் உயர்படைக்கு ஒருங்கு இவ் ஊர் வந்து
இறுத்தலும் எளிதாம்? மற்றும், யாவர்க்கும் இயக்கம் உண்டே?
கறுத்த வாள் அரக்கி மாரும், அரக்கரும், களித்து வீசி
வெறுத்த பூண் வெறுக்கை யாலே தூரும் இவ் வீதியெல்லாம்!       5.3.39

வடங்களும், குழையும், பூணும், மாலையும், சாந்தும், யானைக்
கடங்களும், கலினமா விலாழியும், கணக்கு இலாத
இடங்களின் இடங்கள் தோறும், யாறொடும் அடுத்த எல்லாம்,
அடங்கியது என்னின், என்னே, ஆழியின் ஆழ்ந்தது உண்டோ?            5.3.40

படைப் பெருமை

வில் படை பெரிது என்கேனோ? வேல் படை மிகும் என்கேனோ?
மல் படை உடைத்து என்கேனோ? வாள் படை வலிது என்கேனோ?
கற்பணம், தண்டு, பிண்டிபாலம் என்று இனைய, காந்தும்
நல் படை பெரிது என்கேனோ? நாயகற்கு உரைக்கும் நாளில்.            5.3.41

சூரியன் மேலைக்கடலில் மறைதல்

என்றனன், இலங்கை நோக்கி, இனையன பலவும் எண்ணி,
நின்றனன், அரக்கர் வந்து நேரினும் நேர்வர் என்னாத்
தன் தகை அனைய மேனி சுருக்கி, அச் சரளச் சாரல்
குன்றிடை இருந்தான்; வெய்யோன் குடகடல் குளிப்ப தானான்.            5.3.42

இருள் பரவுதல் (4984-4987)

ஏய்வினை இறுதியில் செல்வம் எய்தினான்
ஆய்வினை மனத்து இலான் அறிஞர் சொல் கொளான்
வீவினை நினைக்கிலான் ஒருவன் மெய் இலான்
தீவினை என இருள் செறிந்தது எங்குமே!            5.3.43

கரித்த மூன்று எயில் உடைக் கணிச்சி வானவன்
எரித்தலை அந்தணர் இழைத்த யானையை
உரித்த பேர் உரிவையால் உலகுக்கு ஓர் உறை
புரித்தனன் நான்முகன் என்னும் பொற்பதே!            5.3.44

அணங்கு அரா அரசர்கோன் அளவில் ஆண்டெலாம்
பணம் கிளர் தலைதொறும் உயிர்த்த பாய்விடம்
உணங்கல் இல் உலகெலாம் முறையின் உண்டுவந்து
இணங்கு எரி புகையொடும் எழுந்தது என்னவே!            5.3.45

வண்மை நீங்கா நெடு மரபின் வந்த அப்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத்
திண்மை நீங்காதவன் சிறைவைத்தான் என
வெண்மை நீங்கிய புகழ் விரிந்தது என்னவே!            5.3.46

இருளில் அரக்கர் இயங்குதல் (4988-4989)

அவ்வழி அவ் இருள் பரந்த ஆயிடை
எவ்வழி மருங்கினும் அரக்கர் எய்தினார்
தெவ் வழி அந்தரத் திசையர் ஆகையால்
வெவ்வழி இருள்தர மதித்து மீச்செல்வார்.            5.3.47

இந்திரன் வளநகர்க்கு ஏகுவார் எழில்
சந்திரன் உலகினைச் சார்குவார் சலத்து
அந்தகன் உறையுளை அணுகுவார் அயில்
வெம்தொழில் அரக்கனது ஏவல் மேயினார்.            5.3.48

தேவமாதர் முதலியோர் பணிநீங்கிச் செல்லுதல்

பொன் நகர் மடந்தையர் விஞ்சைப் பூவையர்
பன்னக வனிதையர் இயக்கர் பாவையர்
முன்னின பணிமுறை மாறி முந்துவார்
மின்னினம் மிடைந்தனெ விசும்பின் மீ செல்வார்.            5.3.49

தேவர் முதலியோர் பணிசெய வருதல் (145-146)

தேவரும் அவுணரும் செங்கண் நாகரும்
மேவரும் இயக்கரும் விஞ்சை வேந்தரும்
ஏவரும் விசும்பு இருள் இரிய ஈண்டினார்
தா அரும் பணி முறை தழுவும் தன்மையார்.      5.3.50

சித்திரப் பத்தியில் தேவர் சென்றனர்
'இத்துணை தாழ்த்தனம் முனியும்! 'என்று தம்
முத்தின் ஆரங்களும் முடியும் மாலையும்
உத்தரீயங்களும் சரிய ஓடுவார்.            5.3.51

சந்திரோதய வருணனை (4993-4995)

தீண்டரும் தீவினை தீக்கத் தீந்துபோய்
மாண்டு அற உலர்ந்தது மாருதிப் பெயர்
ஆண் தகை மாரி வந்து அளிக்க ஆயிடை
ஈண்டு அறம் முளைத்து என முளைத்தது இந்துவே!      5.3.52

'வந்தனன் இராகவன் தூதன்! வாழ்ந்தனன்
எந்தையே இந்திரனாம்! 'என்று ஏமுறும்
அந்தம் இல் கீழ்த்திசை அளக வாள் நுதல்
சுந்தரி முகம் எனப் பொலிந்து தோன்றிற்றே!      5.3.53

கற்றை வெண்கவரி போல் கடலின் வெண்திரை
சுற்றும் நின்று அலமரப் பொலிந்து தோன்றிற்றால்!
'இற்றது என் பகை 'என எழுந்த இந்திரன்
கொற்ற வெண் குடை எனக் குளிர் வெண் திங்களே.      5.3.54

நிலவு பரவுதல் (4996-4997)

தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை
முரிந்து உயர் பால் கடல் முகந்து மூரிவான்
சொரிந்ததேயாம் எனத் துள்ளும் மீனொடும்
விரிந்தது தண்நிலா மேலும் கீழுமே!      5.3.55

அரும் தவன் சுரபியே அந்தி வான்மிசை
விரிந்த பேர் உதயமா மடி வெண் திங்களா
வருந்தல் இல் பசும் கதிர் வழங்கு தாரையாச்
சொரிந்த பால் ஒத்தது நிலவின் தோற்றமே!      5.3.56

விண்மீன் தோற்றம்

எண் உடை அநுமன்மேல் இழிந்த பூ மழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகல
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய்கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்!      5.3.57

எல்லியின் நிமிர் இருள் குறையும் இவ் இருள்
கல்லிய நிலவின் வெண் முறியும் கௌவின
புல்லிய பகை எனப் பொருவ போன்றன
மல்லிகை மலர்தொறும் வதிந்த வண்டு எலாம்!            5.3.58

வீசு உறு பசும் கதிர்க் கற்றை வெண் நிலா
ஆசு உற எங்கணும் நுழைந்து அளாயது
காசு உறு கடி மதில் இலங்கை காவல் ஊர்
தூசு உறை இட்டது போன்று தோன்றிற்றால்!            5.3.59

இகழ்வு அரும் பெரும் குணத்து இராமன் எய்தது ஓர்
பகழியின் செலவு என அநுமன் பற்றினால்
அகழ் புகுந்து அரண் புகுந்து இலங்கை ஆங்கு அவன்
புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே!       5.3.60

அநுமன் இலங்கையுள்ளே புக எண்ணுதல்

அவ்வழி அநுமனும் அணுகலாம் வகை
எவ்வழி என்பதை உணர்வின் எண்ணினான்
செவ்வழி ஒதுங்கினன் தேவர் ஏத்தப் போய்
வெவ்வழி அரக்கர் ஊர் மேவல் மேயினான்.       5.3.61

அநுமன் இலங்கையின் மதிலை அணுகுதல்

ஆழி அகழாக அருகா அமரர் வாழும்
ஏழ் உலகின் மேலை வெளி காறும் முகடு ஏறிக்
கேழ் அரிய பொன்கொடு சமைந்து கிளர் வெள்ளத்து
ஊழி திரி நாளும் உலையா மதிலை உற்றான்.       5.3.62

மதிலை வியத்தல் (5004-5005)

'கலங்கல் இல் கடும் கதிர்கள் மீது கடிது ஏகா
அலங்கல் அயில் வஞ்சகனை அஞ்சி எனின் அன்றால் :
இலங்கை மதில் இங்கு இதனை ஏறல் அரிது என்றே
விலங்கி அகல்கின்றன விரைந்து! 'என வியந்தான்.       5.3.63

'தெவ் அளவு இலாத இடை சேறல் அரிது அம்மா!
அவ்வளவு அகன்றது அரண் அண்டம் இடையாக;
எவ்வளவின் உண்டு வெளி ஈறும் அது! 'என்னா
வெவ் வள அரக்கனை மனம் கொள வியந்தான்.       5.3.64

அநுமன் இலங்கை நகர வாயிலைக் காண்டல்

மடங்கல் அரி ஏறும் மத மால் களிறும் நாண
நடந்து தனியே புகுதும் நம்பி நனி மூதூர்
அடங்கரிய தானை அயில் அந்தகனது ஆணைக்
கடுந்திசையின் வாய் அனைய வாயில் எதிர் கண்டான்.       5.3.65

வாயிலை வியத்தல் (5007-5008)

'மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு விட்டது ஒரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ? 'என நினைந்தான்.       5.3.66

'ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்ந்தால்
ஊழின்முறை அன்றி உடனே புகும்! இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை! 'என்றான்.       5.3.67

வாயில் காவலர் நிலை (5009-5012)

வெள்ளம் ஒருநூறொடு இருநூறும் மிடைவீரர்
கள்ள வினை வெவ் வலி அரக்கர் இருகையும்
முள் எயிறும் வாளும் உற மின்ன முறை நின்றார்
எள்ளரிய காவலினை அண்ணலும் எதிர்ந்தான்.       5.3.68

சூலம் மழு வாெளாடு அயில் தோமரம் உலக்கை
கால வரி வில் பகழி கப்பணம் முசுண்டி
கோல கணை நேமி குலிசம் சுரிகை குந்தம்
பாலம் முதல் ஆயுதம் வலத்தினர் பரித்தார்.       5.3.69

அங்குசம் நெடும் கவண் அடுத்து உடல் விசிக்கும்
வெம் குசைய பாசம் முதல் வெய்ய பயில் கையர்
செம் குருதி அன்ன செறி குஞ்சியர் சினத்தோர்
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாச வனம் ஒப்பார்.       5.3.70

அளக்க அரிதாகிய கணத்தொடு அயல்நிற்கும்
விளக்கினம் இருட்டினை விழுங்கி ஒளி கால
உளக் கடிய காலன் மனம் உட்கும் மணி வாயில்
இளக்கம் இல் கடற்படை இருக்கையை எதிர்ந்தான்.       5.3.71

வாயிற்காவல் கண்டு அநுமன் வியத்தல் (5013-5015)

'எவ் அமரர் எவ் அவுணர் ஏவர் உளர் என்னே!
கவ்வை முது வாயிலின் நெடுங்கடை கடப்பார்?
தெவ்வர் இவர்! சேமம் இது! சேவகனும் யாமும்
வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும்? 'என்றான்.       5.3.72

'கருங்கடல் கடப்பது அரிது அன்று : இநகர் காவல்
பெருங்கடல் கடப்பது அரிது! எண்ணம் இறை பேரின்
அருங்கடன் முடிப்பது அரிதாம்! அமர் கிடைப்பின்
நெருங்கு அடல் விளைப்பர் நெடுநாள்! 'என நினைந்தான்.       5.3.73

'வாயில்வழி சேறல் அரிது! அன்றியும் வலத்தோர்
ஆயில் அவர் வைத்தவழி ஏகல் அழகு அன்றால்.
காய்கதிர் இயக்கு இல் மதிலைக் கடிது தாவிப்
போய் இ நகர் புக்கிடுவென் 'என்று ஒர் அயல் போனான்.       5.3.74

இலங்காதேவி எதிர்தல்

நாள்நாளும் தான்நல்கிய காவல், நனி மூதூர்
வாழ்நாள் அன்னாள், போவதின், மேலே வழிநின்றாள்,
தூணாம் என்னும் தோளுடையானைச், சுடரோனைக்
காணா வந்த கட் செவி என்னக் கனல் கண்ணாள்.       5.3.75

இலங்காதேவியின் இயல்பு (5017-5021)

எட்டுத் தோளாள், நாலு முகத்தாள், உலகு ஏழும்
தொட்டுப் பேரும் சோதி நிறத்தாள், சுழல் கண்ணாள்,
முட்டிப் போரின் மூவுலகத்தை முதலோடும்
கட்டிச் சீறும் காலன் வலத்தாள், கமை இல்லாள்.       5.3.76

பாரா நின்றாள் எண்திசை தோறும் பலர் அப்பால்
வாரா நின்றாரோ என, மாரி மழையே போல்
ஆரா நின்றாள், நூபுரம் அச்சம் தரு தாளாள்,
வேரா நின்றாள், மின்னின் இமைக்கும் மிளிர்பூணாள்.       5.3.77

வேல், வாள், சூலம், வெம்கதை, பாசம், மிளிர்சங்கம்,
கோல், வாள், சாபம், கொண்ட கரத்தாள், வடகுன்றம்
போல்வாள், திங்கட் போழின் எயிற்றாள், புகை வாயில்
கால்வாள், காணில் காலனும் உட்கும் கதம் மிக்காள்.       5.3.78

அஞ்சு வணத்தின் ஆடை உடுத்தாள், அரவு எல்லாம்
அஞ்சு உவணத்தின் வேகம் மிகுத்தாள், அருள் இல்லாள்,
அம் சுவணத்தின் உத்தரியத்தாள், அலை ஆரும்
அம் சு வள் நத்தின் முத்து ஒளிர் ஆரத்து அணிகொண்டாள்.       5.3.79

சிந்து ஆரத்தின் செச்சை அணிந்தாள், தெளிநூல் யாழ்
அம் தாரத்தின் நேர்வரு சொல்லாள், அறை தும்பி
கந்தாரத்தின் இன் இசை பன்னிக் களிகூரும்
மந்தாரத்தின் மாலை அலம்பு மகுடத்தாள்.       5.3.80

இலங்கா தேவியை அநுமன் எதிர்தல்

எல்லாம் உட்கும் ஆழி இலங்கை இகல் மூதூர்
நல்லாள், அவ் ஊர் வைகு உறை ஒக்கும் நயனத்தாள்,
'நில்லாய்! நில்லாய்! 'என்று உரை நேரா, நினையாமுன்,
வல்லே சென்றாள்; மாருதி கண்டான், 'வருக! 'என்றான்.       5.3.81

அநுமனை நோக்கி இலங்காதேவி கூறுவது

'ஆகா செய்தாய்! அஞ்சலை போலும்? அறிவு இல்லாய்!
சாகா மூலம் தின்று உழல்வார்மேல் சலம் என்னாம்?
பாகு ஆர் இஞ்சிப் பொன்மதில் தாவிப் பகையாதே!
போகாய்! 'என்றாள், பொங்கு அழல் என்னப் புகை கண்ணாள்.       5.3.82

அநுமன் மறுமொழி

களியா உள்ளத்து அண்ணல், மனத்தில் கதம் மூள
விளியாநின்றே, நீதி நலத்தின் வினை ஓர்வான்,
'அளியான் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன் :
எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு? 'என்றான்.       5.3.83

இலங்காதேவி சினத்தல்

என்னா முன்னம், 'ஏகு! என ஏகாது, எதிர்மாற்றம்
சொன்னாயே? நீ யாவன்? அடா! தொல் புரம் அட்டான்
அன்னாரேனும் அஞ்சுவர் எய்தற்கு : அளியுற்றால்,
உன்னால் எய்தும் ஊர்கொல் இவ் ஊர்? 'என்று உற நக்காள்.       5.3.84

இலங்காதேவிகூற்றும்-அநுமன்மாற்றமும்

நக்காளைக் கண்டு, ஐயன் மனத்து ஓர் நகை கொண்டான்;
'நக்காய்? நீ யார்? யார்சொல வந்தாய்? உனது ஆவி
உக்கால் ஏதாம்? ஓடலை? ' என்றாள்; 'இனி, இவ்வூர்
புக்கால் அன்றிப் போகலன்! ' என்றான், புகழ்கொண்டான்.       5.3.85

இலங்காதேவி சிந்தித்தல்

'வஞ்சம் கொண்டான்! வானரம் அல்லன்! வரு காலன்
துஞ்சும் கண்டால் என்னை; இவன் சூழ் திரை ஆழி
நஞ்சம் கொண்டு ஆர் கண் நுதலைப் போல் நகுகின்றான்! '
நெஞ்சம் கொண்டே, கல் என நின்றே, நினைகின்றாள்.       5.3.86

இலங்காதேவி சூலத்தை யேவல்

'கொல்வாம்! அன்றேல், கோள் உறும் இவ் ஊர்! 'எனல் கொண்டாள்;
'வெல்வாய் நீயேல், வேறி! ' எனத் தன் விழிதோறும்,
வல்வாய் தோறும், வெம் கனல் பொங்க, 'மதிவானில்
செல்வாய்! 'என்னா, மூவிலை வேலைச் செலவிட்டாள்.       5.3.87

அநுமன் சூலத்தை முறித்தல்

தடித்தாம் என்னத் தன் எதிர் செல்லும் தழல்வேலைக்
கடித்தான், நாகம் விண்ணின் முரிக்கும் கலுழன் போல்,
ஒடித்தான் கையால், உம்பர் உவப்ப, உயர்காலம்
பிடித்தாள் நெஞ்சம் துண் என, எண்ணம் பிழையாதான்.       5.3.88

இலங்காதேவியும் அநுமனும் பொருதல் (5030-5031)

இற்றுச் சூலம் நீறு எழல் காணா, எரி ஒப்பாள்,
மற்றுத் தெய்வப் பல்படை கொண்டே மலைவாளை
உற்றுக் கையால் ஆயுதம் ஒன்றும் ஒழியாமல்
பற்றிக் கொள்ளா, விண்ணில் எறிந்தான் பழி ஓர்வான்.       5.3.89

வழங்கும் தெய்வப் பல்படை காணாள், மலைவான் மேல்
முழங்கும் மேகம் என்ன முரற்றி முனிகின்றாள்,
கழங்கும், பந்தும், குன்றுகொடு ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும் செந்தீச் சிந்த அடித்தாள், தகைவு இல்லாள்.       5.3.90

இலங்காதேவி தோல்வியுற்று வீழ்தல்

அடியா முன்னம், அங்கை அனைத்தும் ஒரு கையால்
பிடியா, 'என்னே? பெண் இவள்! கொல்லில் பிழை! 'என்னா
ஒடியா நெஞ்சத்து ஓரடி கொண்டான்; உயிரோடும்,
இடியேறு உண்ட மால்வரை போல், மண்ணிடை வீழ்ந்தாள்.       5.3.91

இலங்காதேவி தன் வரலாறு கூறுதல் (5033-5036)

விழுந்தாள்; நொந்தாள்; வெம் குருதிச் செம் புனல் வெள்ளத்து
அழுந்தா நின்றாள்; நான்முகனார் தம் அருள் ஊன்றி
எழுந்தாள்; யாரும், யாவையும், எல்லா உலகத்தும்
தொழும் தாள் வீரன் தூதுவன் முன் நின்று, இவை சொன்னாள்.       5.3.92

'ஐய! கேள்! வையம் நல்கும் அயன் அருள் அமைதியாக
எய்தி, இம் மூதூர் காப்பென், இலங்கைமாதேவி என்பேன்;
செய்தொழில் இழுக்கினாலே திகைத்து இந்தச் சிறுமை செய்தேன்.
உய்தி என்று அளித்தியாயின் உணர்த்துவல் உண்மை 'என்றாள்.       5.3.93

"எத்தனை காலம் காப்பல் யான் இந்த மூதூர்? என்று, அம்
முத்தனை வினவினேற்கு, ' முரண்வலிக் குரங்கு ஒன்று உன்னைக்
கைத்தலம் அதனால் தீண்டில், கழிவது; அன்று என்னைக் காண்டி!
சித்திர நகரம் பின்னைச் சிதைவது திண்ணம்! 'என்றாள். ''       5.3.94

'அன்னதே முடிந்தது, ஐய! அறம் வெல்லும் பாவம் தோற்கும்,
என்னும் ஈது இயம்ப வேண்டும் தகையதோ? இனி, மற்று, உன்னால்
உன்னிய எல்லாம் முற்றும்! உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன் நகர் புகுதி! 'என்று புகழ்ந்தனள், இறைஞ்சிப் போனாள்.       5.3.95

அநுமன் இலங்கையுள் புகுதல்

வீரனும், விரும்பி நோக்கி, 'மெய்ம்மையே! விளையும் அஃது! 'என்று,
ஆரியன் கமல பாதம் அகத்து உற வணங்கி, ஆண்டு, அப்
பூரியர் இலங்கை மூதூர்ப் பொன்மதில் தாவிப் புக்கான்,
சீரிய பாலின் வேலைச் சிறுபிரை தறெித்தது அன்னான்!       5.3. 96

மணிமாடங்களின் ஒளிகண்டு துணுக்குறல்

வான்தொடர் மணியில் செய்த மை அறு மாட கோடி
ஆன்ற பேர் இருளைச் சீத்துப் பகல் செய்த அமைவு நோக்கி,
'ஊன்றிய உதயத்து உச்சி ஒற்றை வான் உருளைத் தேரோன்
தோன்றினன் கொல்லோ? 'என்னா, அறிவனும் துணுக்கம் கொண்டான்.       5.3.97

இலங்கையின் ஒளியை வியத்தல் (5039-5040)

மொய்ம்மணி மாட மூதூர் முழுது இருள் அகற்றா நின்ற
மெய்ம்மையை உணர்ந்து, நாணா, மிகை என விலங்கிப் போனான்!
இம்மதில் இலங்கை நாப்பண் எய்துமேல், தன்முன் எய்தும்,
மிம்மினி அல்லனோ, அவ் வெயில்கதிர் வேந்தன் அம்மா!       5.3.98

'பொசிவு உறு பசும்பொன் குன்றில் பொன்மதில் நடுவண் பூத்த
வசை அற விளங்கும் சோதி மணியினால் அமைந்த மாடத்து
அசைவு இல் இவ் இலங்கை மூதூர் ஆர் இருள் இன்மையாலோ
நிசிசரர் ஆயிற்று, அம்மா! நீள் நகர் நிருதர் எல்லாம்! '       5.3.99

அநுமன் மாளிகை நிழலில் மறைந்து செல்லல்

என்று அன இயம்பி, வீதி ஏகுவது இழுக்கம் என்னாத்
தன் தகை அனைய மேனி சுருக்கி, மாளிகையில் சாரச்
சென்றனன் என்ப மன்னோ, தேவருக்கு அமுதம் ஈந்த
குன்று என, அயோத்தி வேந்தன் புகழ் எனக், குலவு தோளான்!       5.3.100

பசுக்கொட்டில் முதலிய பல இடங்களிலும் அநுமன் தேடிச் செல்லுதல்

ஆத் துறு சாலை தோறும், ஆனையின் கூடம் தோறும்,
மாத் துறு மாடம் தோறும், வாசியின் பந்தி தோறும்,
காத் துறு சோலை தோறும், கரும் கடல் கடந்த தாளான்,
பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டில், போனான்.       5.3.101

இலங்கைநகர் வீதியில் செல்லும் அநுமன் தோற்றம்

பெரிய நாள் ஒளிகொள் நானாவித மணிப் பித்திப் பத்தி
சொரியும் மா நிழல் அங்கு அங்கே சுற்றலால், காலின் தோன்றல்,
கரியனாய் வெளியன் ஆகிச் செய்யனாய்க் காட்டும், காண்டற்கு
அரியனாய் எளியனாம் தன் அகத்து உறை அழகனே போல்!       5.3.102

கவிக்கூற்று

ஈட்டுவார் தவம் அலால், மற்று ஈட்டினால் இயைவது இன்மை
காட்டுவார் விதியார், அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா!
பூட்டு வார் முலை பொறாத பொய் இடை நையப் பூ நீர்
ஆட்டுவார் அமரர் மாதர், ஆடுவார் அரக்கர் மாதர்!       5.3.103

அநுமன் கண்ட அரக்கர்நிலை (5045-5061)

கானக மயில்கள் என்னக், களி மட அன்னம் என்ன,
ஆனன கமலப் போது பொலிதர, அரக்கர் மாதர்,
தேன் உகு சரளச் சோலைத் தெய்வநீர் ஆற்றுத் தெள் நீர்
வானவர் மகளிர் ஆட்ட, மஞ்சனம் ஆடுவாரை.       5.3.104

இலக்கண மரபிற்கு ஏற்ற எழுவகை நரம்பின் நல்யாழ்
அலத்தகத் தளிர்க்கை நோவ அளந்து எடுத்து அமைத்த பாடல்
கலக்கு உற முழங்கிற்று என்று, சேடியர் கன்னிமார் தம்
மலர்க் கையால் மாடத்து உம்பர் மழையின்வாய் பொத்துவாரை.       5.3.105

சந்தப் பூம் பந்தர் வேய்ந்த தமனிய அரங்கில், தத்தம்
சிந்தித்தது உதவும் தெய்வ மணிவிளக்கு ஒளிரும் சேக்கை
வந்து ஒத்து, நிருத மாக்கள், விளம்பின நெறி வழாமல்
கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம் காண்கின்றாரை.       5.3.106

திருத்திய பளிக்கு வேதித், தெள்ளிய வேல்கள் என்னக்,
கருத்து இயல்பு உரைக்கும் உண்கண் கரும் கயல் செம்மை காட்ட,
வருத்திய கொழுநர் தம்பால் வரம்பின்றி வளர்ந்த காமம்
அருத்திய பயிர்க்கு நீர்போல், அருநறவு அருந்துவாரை.       5.3.107

கோதறும் குவளை நாட்டம் கொழுநர் கண் வண்ணம் கொள்ளத்
தூதுளம் கனியை வென்று துவர்த்த வாய் வெண்மை தோன்ற,
மாதரும் மைந்தர் தாமும், ஒருவர்பால் ஒருவர் வைத்த
காதல் அம் கள் உண்டார் போல், முறைமுறை களிக்கின்றாரை.       5.3.108

வில் படர் பவளப் பாதத்து அலத்தகம் எழுதி, மேனி
பொற்பு அளவு இல்லா வாசப் புனை நறும் கலவை பூசி,
அற்புத வடிக்கண் வாளிக்கு அஞ்சனம் எழுதி, அம் பொன்
கற்பகம் கொடுக்க, வாங்கிக், கலன் தெரிந்து அணிகின்றாரை.       5.3.109

புலிபடு மதுகை மைந்தர் புதுப்பிழை உயிரைப் புக்கு
நலிவு இடை, அமுத வாயால் நச்சு உயிர்த்து, அயில் கண் நல்லார்,
மெலிவு உடை மருங்குல் மின்னின் அலமரச், சிலம்பு விம்மி
ஒலிபட, உதைக்கும் தோறும், மயிர் புளகு உதிக்கின்றாரை.       5.3.110

உள்ளுடை மயக்கால் உண்கண் சிவந்து, வாய் வெண்மை ஊறித்
துள்ளிடைப் புருவம் கோணித் துடிப்ப, வேர் பொடிப்பத் தூங்கும்
வெள்ளிடை மருங்குலார், தம் மதிமுகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற, நோக்கிக் கணவரைக் கனல்கின்றாரை.       5.3.111

ஆலையில், மலையில், சாலி முளையினில், அமுத வாரிச்
சோலையில், துவசர் இல்லில், சோனகர் மனையில், தூய
வேலையில், கொள ஒணாத, வேல்கணார் குமுதச் செவ்வாய்
வாழ் எயிறு ஊறு தீம்தேன், மாந்தினர் மயங்குவாரை.       5.3.112

நலனுறு கணவர் தம்மை நவை உறப் பிரிந்து, விம்மும்
முலை உறு கலவை தீய, முள் நிலா முளரிச் செங்கேழ்
மலர்மிசை மலர் பூத்து என்ன, வளைக் கையால் வதனம் தாங்கி,
அலமரும் உயிரினோடும், நெடிது உயிர்த்து அயர்கின்றாரை.       5.3.113

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய காதலாலே,
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலில் சாய்வார்,
மாதுயர் காதல் தூண்ட, வழியின்மேல் வைத்த கண்ணார்,
தூதியர் முறுவல் நோக்கி, உயிர்வந்து துடிக்கின்றாரை.       5.3.114

சங்கொடு, சிலம்பும், நூலும், பாதசாலகமும், தாழப்
பொங்கு பல் முரசம் ஆர்ப்ப, இல் உறை தெய்வம் போற்றிக்
கொங்கு அலர் கூந்தல் செவ்வாய் அரம்பையர், பாணி கொட்டி,
மங்கல கீதம் பாட, மலர்ப்பலி வகுக்கின்றாரை.       5.3.115

இழைதொடர் வில்லும், வாளும், இருெளாடு மலைய, யாணர்க்
குழைதொடர் நயனக் கூர்வேல் குமரர் நெஞ்சு உருவக் கோட்டி,
முழைதொடர் சங்கு, பேரி, முகில் என முழங்க, மூரி
மழைதொடர் மஞ்ஞை என்ன விழாவொடு வருகின்றாரை.       5.3.116

பள்ளியின் மைந்தரோடும், ஊடிய பண்பு நீங்கி,
உள்ளிய கலவிப் பூசல் உடற்றுதற்கு உருத்த நெஞ்சர்,
மெள்ளவே இழையை நீக்கி, அஞ்சனம் எழுதி ஏய்ந்த
கள்ளவாள் நயனம் என்னும் வாள் உறை கழிக்கின்றாரை.       5.3.117

ஓவியம் அனைய மாதர் ஊடினர், உணர்வோடு உள்ளம்
மேவிய கரணம் முற்றும் கொழுநரோடு ஒழிய, யாணர்த்
தூவி அம் பேடை என்ன, மின் இடை துவள ஏகி,
ஆவியும் தாமுமே புக்கு, அரும் கதவு அடைக்கின்றாரை.       5.3.118

கின்னர மிதுனம் பாடக், கிளர்மழை கிழித்துத் தோன்றும்
மின் எனத், தரளம் வேய்ந்த வெண்ணிற விமானம் ஊர்ந்து,
பன்னக மகளிர் சுற்றிப் பல ஆண்டு இசை பரவப் பண்ணைப்
பொன்னகர் வீதி தோறும், புதுமனை புகுகின்றாரை.       5.3.119

கோவையும் குழையும் மின்னக் கொண்டலின் முரசம் ஆர்ப்பத்
தேவர்நின்று ஆசி கூற, முனிவர் சோபனங்கள் செப்பப்
பாவையர் குழாங்கள் சூழப் பாட்டொடு வான நாட்டுப்
பூவையர் பலாண்டு கூறப் புதுமணம் புணர்கின்றாரை.       5.3.120

அநுமன் கும்பகன்னனைக் காண்டல்

இயக்கியர், அரக்கி மார்கள், நாகியர், இன்சொல் விஞ்சை
முயல்கறை இலாத திங்கள் முகத்தியர், முதலினோரை
மயக்கற நாடி ஏகு மாருதி, மலையின் வைகும்
கயக்கம் இல் துயிற்சிக் கும்ப கருணனைக் கண்ணிற் கண்டான்.       5.3.121

கும்பகன்னன் பள்ளியறைச் சிறப்பு

ஓசனை ஏழ் அகன்று உயர்ந்தது உம்பரின்
வாசவன் மணிமுடி கவித்த மண்டபம்
ஏசு உற விளங்குவது இருளை எண்வகை
ஆசையின் நிலைகெட அகற்றி ஆன்றது.       5.3.122

கும்பகன்னன் துயிலுநிலை (5064-5070)

அன்னதன் நடுவண் ஓர் அமளி மீ மிசைப்
பன்னக அரசு எனப் பரவைதான் எனத்
துன்னிருள் ஒருவழித் தொக்கதாம் என
உன்னரும் தீவினை உருக்கொண் டென்னவே.       5.3.123

முன்னிய கனைகடல் முழுகி மூவகைத்
தன் இயல் கதியொடும் தழுவித் தாது உகு
மன்நெடும் கற்பக வனத்து வைகிய
இன் இளம் தனெ்றல் வந்து இழுகி ஏகவே.       5.3.124

வானவர் மகளிர் தாள் வருட மாமதி
ஆனனம் கண்ட மண்டபத்துள் ஆய் கதிர்க்
கால் நகு காந்தம் மீக் கான்ற காமர்நீர்த்
தூ நிற நறும் துளி முகத்தில் தூற்றவே.       5.3.125

மூசிய உயிர்ப்பு எனும் முடுகு வாதமும்
வாசலின் புறத்திடை நிறுவி வன்மையால்
நாசியின் அளவையின் நடத்தக் கண்டவன்
கூசினன் குதித்தனன் விதிர்த்த கையினான்.       5.3.126

பூழியின் தொகை விசும்பு அணவப் போய்ப் புகும்
கேழில் வெம் கொடியவன் உயிர்ப்புக் கேடிலா
வாழிய உலகு எலாம் துடைக்கும் மாருதம்
ஊழியின் இறுதி பார்த்து உழல்வது ஒக்கவே.       5.3.127

பகை என மதியினைப் பகுத்துப் பாடுற
அகை இல் பேழ் வாய்மடுத்து அருந்துவான் எனப்
புகையொடு முழங்குபேர் உயிர்ப்புப் பொங்கிய
நகை இலா முழுமுகத்து எயிறு நாறவே.       5.3.128

தடையுறு மந்திரம் தகைந்த நாகம்போல்
இடையுறவு அரியது ஓர் உறக்கம் எய்தினான்
கடையுக முடிவெனும் காலம் ஓர்ந்து அயல்
புடைபெயரா நெடும் கடலும் போலவே.       5.3.129

கும்பகன்னனை இராவணனென்று நினைத்து அநுமன் சினத்தல்

ஆவது ஆகிய தன்மைய அரக்கனை, அரக்கர்
கோ எனாநின்ற குணம் இலி இவன் எனக் கொண்டான்;
காவல் நாட்டங்கள் பொறி உகக் கனல் எழக் கனன்றான்;
'ஏவனோ இவன்? மூவரின் ஒருவனாம் ஈட்டான்! '       5.3.130

இராவணன் அல்லன் என்று சினந்தணிதல்

குறுகி நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும், குன்று ஒத்து
இறுகு திண்புயம் இருபதும் இவற்கு இலை! என்னா,
மறுகி ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலை,
அறிவு எனும் பெரும் பரவை அம் புனலினால் அவித்தான்.       5.3.131

அநுமன் கும்பகன்னன் பள்ளியறையைக் கடந்து செல்லல்

அவித்து நின்று, 'எவன் ஆயினும் ஆக! 'என்று அங்கை
கவித்து, 'நீ கிட சிலபகல்! ' என்பது கருதாச்
செவிக்குத் தேன் அன்ன இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன், அனையவன் உறையுளைக் கடந்தான்.       5.3.132

அநுமன் மேலும் பல இடங்களிலும் தேடல்

மாட கூடங்கள், மாளிகை ஓளிகள், மகளிர்
ஆடு அரங்குகள், அம்பலம், தேவர் ஆலயங்கள்,
பாடல் வேதிகை, பட்டிமண்டபம், முதல் பலவும்
நாடி ஏகினன், இராகவன் புகழெனும் நலத்தான்.       5.3.133

தேடுங்கால் அநுமன் நிலை

மணிகொள் வாயிலில், சாளரத் தலங்களில், மலரில்,
கணிகொள் நாளத்தில், கால் எனப் புகை எனக் கலக்கும்,
நுணுகும், வீங்கும், மற்று அவன் நிலை யாவரே நுவல்வார்?
அணுவின் மேருவின் ஆழியான் எனச் செலும் அறிவோன்.       5.3.134

அநுமன் வீடணன் இல்லில் புகல்

ஏந்தல் இவ் வகை எவ் வழி மருங்கினும் எய்திக்
காந்தள் மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான்,
வேந்தர், வேதியர், மேலுேளார், கீழுேளார், விரும்பப்
போந்த புண்ணியன் கண்ணகன் கோயிலுள் புக்கான்.       5.3.135

வீடணனை நெருங்கல்

பளிக்கு வேதிகைப் பவழத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கரு நிறத்தோர்பால்
வெளித்து வைகுதல் அரிது என, அவர் உரு மேவி,
ஒளித்து வாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.       5.3.136

வீடணனை நல்லவன் என்று தெரிந்து அநுமன் மேல் செல்லல்

உற்று நின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்,
குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன், எனக் கொண்டான்,
செற்றம் நீங்கிய மனத்தினன், ஒருசிறை சென்றான்.
பொற்ற மாடங்கள் கோடி ஓர் நொடி இடைப் புக்கான்.       5.3.137

அநுமன் இந்திரசித்தின் மாளிகையை அடைதல் (5079-5080)

முந்து அரம்பையர் முதலினர், முழுமதி முகத்துச்
சிந்துரம் பயில் வாய்ச்சியர், பலரையும் தெரிந்து,
மந்திரம் பல கடந்து, தன் மனத்தின்முன் செல்வான்,
இந்திரன் சிறையிருந்த வாயிலின்கடை எதிர்ந்தான்.       5.3.138

ஏதி ஏந்திய தடக்கையர், பிறை எயிறு இலங்க,
மூதுரைப் பெருங் கதைகளும், பிதிர்களும், மொழிவார்,
ஓதில், ஆயிரம் ஆயிரம் உறுவலி அரக்கர்,
காது வெஞ்சினக் களியினர் காவலைக் கடந்தான்.       5.3. 139

அநுமன் இந்திரசித்தைக் காண்டல்

முக்கண் நோக்கினன் முறைமகன், அறுவகை முகமும்,
திக்கு நோக்கிய புயங்களும், சில கரந் தனையான்,
ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப்
புக்கு நோக்கினன், புகைபுகா வாயினும் புகுவான்.       5.3.140

இந்திரசித்தைக் கண்ட அநுமன் நினைதல் (5082-5083)

வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ?
அளையில் வாள் அரி அனையவன் யாவனோ? அறியேன்!
இளைய வீரனாம் ஏந்தலும் இவனுடன் நெடுநாள்
உளைய உள்ளபோர் உளது! என, உள்ளத்தின் உணர்ந்தான்.       5.3.141

'இவனை இன் துணை உடைய பேர் இராவணன், என்னே,
புவனம் மூன்றையும் வென்றது? ஓர் பொருள் எனப் புகலேன்!
சிவனை, நால் முகத்து ஒருவனைத் திருநெடுமாலாம்
அவனை அல்லது, நிகர் பிறர், என்பதும் அறிவோ? '       5.3.142

அநுமன் பிற இடங்களில் தேடல்

என்று கை மறித்து 'இடைநின்று காலத்தை இழப்பது
அன்று பேர்வது! 'என்று ஆயிரம் ஆயிரத்து அடங்காத்
துன்று மாளிகை ஓளிகள் துரிசு அறத் துருவிச்
சென்று தேடினன் இந்திர சித்தினைத் தீர்ந்தான்.       5.3.143

அநுமன் அக்கன் முதலியோரில்லங்களில் தேடிக் கடத்தல்

அக்கன் மாளிகை கடந்துபோய், மேல் அதிகாயன்
தொக்க கோயிலும், தம்பியர் இல்லமும், துருவித்
தக்க மந்திரத் தலைவர்மா மனைகளும் தடவிப்
புக்கு நீங்கினன், இராகவன் சரம் எனப் புகழோன்.       5.3.144

அநுமன் இடைநகர் அகழியை அடைதல்

இன்னர் ஆகிய இரும் படைத் தலைவர்கள் இருக்கைப்
பொன்னின் மாளிகை ஆயிர கோடியும் புக்கான்,
கன்னி மாநகர்ப் புறத்து அவன் கரந்து உறை காண்பான்,
சொன்ன மூன்றினுள், நடுவணது அகழியைத் தொடர்ந்தான். '       5.3.145

அநுமன் அகழியைக் காண்டல்

தனிக் கடக் களிறு என ஒரு துணையிலான், 'தாய
பனிக் கடல் பெருங் கடவுள்தன் பரிபவம் துடைப்பான்,
இனிக் கடப்பு அரிது! ஏழ் கடல் கிடந்தது! 'என்று இசைத்தான்
கனிக்கு அடல் கதிர் தொடர்ந்தவன் அகழியைக் கண்டான்.       5.3.146

அநுமன் இடைநகர் அகழியை வியத்தல் (5088-5089)

'பாழி நல் நெடும் கிடங்கு எனப் பகர்வரேல், பல் பேர்
ஊழிகாலம் நின்று, உலகு எலாம் கல்லினும், முடியா!
ஆழி வெம்சினத்து அரக்கனை அஞ்சி, ஆழ் கடல்கள்
ஏழும் இந்நகர்ச் சுலாய கொல் ஆம்! 'என இசைத்தான்.       5.3.147

ஆய தாகிய அகன் புனல் அகழியை அடைந்தான்,
'தாய வேலையின் இருமடி விசைகொடு தாவிப்
போய காலத்தும் போக்கு அரிது! ' என்பது புகன்றான்,
நாயகன் புகழ் நடந்த பேர் உலகு எலாம் நடந்தான்.       5.3.148

இடைநகர் அகழின் இயல்பு (5090-5096)

மேக்கு நால்வகை மேகமும் கீழ்விழத்
தூக்கினால் அன்ன தோயத்ததாய்த் துயர்
ஆக்கினான் படை அன்ன அகழியை
வாக்கினால் உரை வைக்கலும் ஆகுமோ?       5.3.149

ஆனை மும்மதமும் பரி ஆழியும்
மான மங்கையர் குங்கும வாரியும்
நானம் ஆர்ந்த நறைக்குழல் ஆவியும்
தேனும் ஆரமும் தேய்வையும் நாறுமால்!       5.3.150

உன்னம் நாரை மகன்றில் புதா உளில்
அன்னம் கோழி வண்டானங்கள் ஆழிப்புள்
கின்னரம் குரண்டம் கிலுக்கம் சிரல்
சென்னம் காகம் குணாலம் சிலம்புமே!       5.3.151

நலத்த மாதர் நறை அகில் நாவியும்
அலத்தகக் குழம்பும் செறிந்து ஆடின
இலக்கணக் களிறோடு இள மெல் நடைக்
குலம் பிடிக்கும் ஒர் ஊடல் கொடுக்குமால்!       5.3.152

நறவு நாறிய நாள் நறும் தாமரை
துறைகள் தோறும் முகிழ்த்தன தோன்றுமால்!
சிறையின் எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம் உடையார் ஒடுங்கார்கேளா?       5.3.153

பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய் ஒளி
விளிம்பும் வெள்ளமும் மெய் தெரியாது மேல்
தெளிந்த சிந்தையரும் சிறியார்கேளாடு
அளிந்த போது அறிதற்கு எளிதாவரோ?       5.3.154

நீலமேமுதல் நன்மணி நித்திலம்
மேல கீழ பல்வேறு ஒளி வீசலால்
பாலின் வேலை முதல் பல வேலையும்
கால் கலந்தனவோ எனக் காட்டுமே!       5.3.155

அநுமன் இடைநகருள் புகுந்து தேடல் (5097-5098)

அன்ன வேலை அகழியை ஆர்கலி
என்னவே கடந்து இஞ்சியும் பின்பட
துன்னரும் கடி மாநகர் துன்னினான்
பின்னர் எய்திய தன்மையும் பேசுவாம்.       5.3.156

கருவி நாழிகை பாதியில் காலனும்
வெருவி ஓடும் அரக்கர்தம் வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரண்டு ஓசனைத்
தெரிவு மும்மை நூறாயிரம் தேடினான்!       5.3.157

இரவில் அரக்கர் நிகழ்ச்சிகள் (5099-5106)

வேரியும் அடங்கின நெடும் கடல் விளம்பும்
பாரியும் அடங்கின அடங்கினது பாடல்
காரியம் அடங்கினர்கள் கம்மியர்கள் மும்மைத்
தூரியம் அடங்கின தொடங்கினது உறக்கம்!       5.3.158

இறங்கின நிறம் கொள் பரி ஏமம் உற எங்கும்
கறங்கின மறம் கொள் எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறும் குழலர் அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர் ஊடினவர் அல்லார்.       5.3.159

வடம் தரு தடம் கொள்புய மைந்தர் கலவிப் போர்
கடந்தனர் இடைந்தனர் களித்த மயில்போலும்
மடந்தையர் தடம் தன முகட்டு இடை மயங்கிக்
கிடந்தனர் நடந்தது புணர்ச்சி தரு கேதம்.       5.3.160

வாம நறையின் திறம் நுகர்ந்தவர் மறந்தார்;
காம நறையின் திறம் நுகர்ந்தவர் களித்தார்;
பூமன் அறை வண்டு உறை இலங்கு அமளி புக்கார்
தூம நறை இன் துறை அயின்றிலர் துயின்றார்.       5.3.161

பண் இமை அடைத்த பல கண் பொருநர் பாடல்
விண் இமை அடைத்தன விளைந்தது இருள் வீணை
தண்ணுமை அடைத்தன தழங்கு இசை வழங்கும்
கண் இமை அடைத்தன அடைத்தன கபாடம்.       5.3.162

விரிந்தன நரந்தம் முதல் மெல் மலர் வளாகத்து
உரிஞ்சி வரு தனெ்றல் உணர்வு உண்டு அயல் உலாவச்
சொரிந்தன கரும் கண் வரு துள்ளி தரு வெள்ளம்
எரிந்தன பிரிந்தவர்தம் எஞ்சுதனி நெஞ்சம்.       5.3.163

இளக்கர் இழுது எஞ்ச விழும் எண் அரு விளக்கைத்
துளக்கியது தனெ்றல் பகை சோர உயர்வோரின்;
அளக்கரொடு அளக்கரிய ஆசை உற வீயா
விளக்கு என விளங்கும் மணி மெய் உறு விளக்கம்.       5.3.164

நித்த நியமத் தொழில் முடித்து நெடு வானத்து
உத்தமர் உறங்கினர்கள்; யோகிகள் துயின்றார்;
மத்தமத வெம் களிறு உறங்கின; உறங்காப்
பித்தரும் உறங்கினர்; இனிப் பிறரது என்னோ?       5.3.165

அநுமன் அகநகரடைதல்

ஆயபொழுது அம்மதில் அகத்து அரசர் வைகும்
தூய தெரி ஒன்றொடு ஒருகோடி துருவிப் போய்த்
தீயவன் இருக்கை அயல் செய்த அகழ் இஞ்சி
மேயது கடந்தனன் வினைப் பகையை வென்றான்.       5.3.166

இராவணன் காதல் கிழத்தியர் இல்லங்களில் அநுமன் தேடுதல்

போர் இயற்கை இராவணன் பொன் மனை
சீர் இயற்கை நிரம்பிய திங்களாத்
தாரகைக் குழுவில் தழைத்து ஓங்கிய
நாரியர்க்கு உறைவாம் இடம் நண்ணினான்.       5.3.167

முயல் கரும் கறை நீங்கிய மொய்ம் மதி
அயர்க்கும் வாள் முகத்து ஆர் அமுது அன்னவர்
இயக்கர் மங்கையர் யாவரும் ஈண்டினர்
நயக்கும் மாளிகை வீதியை நண்ணினான்.       5.3.168

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூலினும் இன் இளம் காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெம் வினை வேர் அற வீசினான்.       5.3.169

இராவணன் உரிமை மகளிருள் இயக்கியர் நிலை (5111-5120)

அத்திரம் புரை யானை அரக்கன் மேல்
வைத்த சிந்தையர் வாங்கும் உயிர்ப்பு இலர்
பத்திரம் புரை நாட்டம் பதைப்பு அறச்
சித்திரங்கள் என இருந்தார் சிலர்       5.3.170

அள்ளல் வெம் சர மாரனை அஞ்சியோ?
மெள்ள இன் கனவின் பயன் வேண்டியோ?
கள்ளம் என்கொல்? அறிந்திலம் கண் முகிழ்த்து
உள்ளம் இன்றி உறங்குகின்றார் சிலர்.       5.3.171

பழுதில் மன்மதன் எய்கணை பல் முறை
உழுத கொங்கையர் ஊசல் உயிர்ப்பினர்
'அழுது செய்வது என்? ஆணை அரக்கனை
எழுதலாம் கொல்? 'என்று எண்ணுகின்றார் சிலர்.       5.3.172

'ஆவது ஒன்று அருளாய்! எனது ஆவியைக்
கூவுகின்றிலை! கூறலை சென்று! 'எனப்
பாவை பேசுவ போல் கண் பனிப்பு உறப்
பூவையோடு புலம்புகின்றார் சிலர்.       5.3. 173

ஈரத் தனெ்றல் இழுக மெலிந்து தம்
பாரக் கொங்கையைப் பார்த்து அந்தப் பாதகன்
வீரத் தோள்களின் வீக்கம் எண்ணா உயிர்
சோரச் சோரத் துளங்குகின்றார் சிலர். 5.3.174

நக்க செம்மணி நாறிய நீள் நிழல்
பக்கம் வீசுறு பள்ளியில் பல்பகல்
ஒக்க ஆசை உலக்க உலந்தவர்
செக்கர் வான் தரு திங்கள் ஒத்தார் சிலர்.       5.3.175

வாளின் ஆற்றிய கற்பக வல்லியர்
தோளின் நாற்றிய தூங்கு அமளித் துயில்
நாளினால் செவியில் புகும் நாம யாழ்த்
தேளினால் திகைப்பு எய்துகின்றார் சிலர்.       5.3.176

கவ்வு தீக்கணை மேருவைக் கால் வளைத்து
எவ்வினான் மலை ஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து தம் மாமுலை வௌவிய
செவ்வி கண்டு குலாவுகின்றார் சிலர்.       5.3.177

கூடி நான்கு உயர் வேலையும் கோக்க நின்று
ஆடினான் புகழ் அம் கை நரம்பினால்
நாடி நால் பெரும் பண்ணும் நயப்பு உறப்
பாடினான் புகழ் பாடுகின்றார் சிலர்.       5.3.178

இனைய தன்மை இயக்கியர் ஈண்டிய
மனை ஒராயிரம் ஆயிரம் வாயில் போய்
அனையவன் குலத்து ஆய் வளையார் இடம்
நினைவின் எய்தினன் நீதியின் எய்தினான்.       5.3.179

இராவணன் உரிமைமகளிருள் அரக்கியர்நிலை (5121-5132)

எரிசுடர் மணியின் செம் கேழ் இளவெயில் இடைவிடாது
விரி இருள் பருகி நாளும் விளக்கு இன்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவின் நீங்கி, ஆசையும் தாமுமே புக்கு,
ஒருசிறை இருந்து, போன உள்ளத்தொடு ஊடுவாரும்.       5.3.180

நகை எரிக் கற்றை தறெ்றி நாவி தோய்த்து அனைய ஓதி
புகை எனத் தும்பி சுற்றப், புது மலர் பொங்கு சேக்கை
பகை என ஏகி, யாணர்ப் பளிங்கு உடைச் சீதப் பள்ளி
மிகை உயிரோடும் காம விம்மலின் வெதும்புவாரும்.       5.3.181

சவிபடு தகைசால் வானம் தான் ஒரு மேனி ஆகக்
குவியும் மீன் ஆரம் ஆக, மின்கொடி மருங்குல் ஆகக்
கவிர் ஒளிச் செக்கர் கற்றை ஓதியா, மழை உண் கண்ணா,
அவிர்மதி நெற்றி ஆக, அந்திவான் ஒக்கின்றாரும்.       5.3.182

பானல் உண் கண்ணும் வண்ணப் படிமுறை மாறப் பண்ணைச்
சோனை போன்று அளிகள் பம்பும் சுரிகுழல் கற்றை சோர,
மேல் நிவந்து எழுந்த மாட வெள்நிலா முன்றில் நண்ணி,
வான மீன் கையின் வாரி, மணிக் கழங்கு ஆடுவாரும்.       5.3.183

உழை உழைப் பரந்த வான யாற்று நின்று, உம்பர் நாட்டுக்
குழை முகத்து ஆயம் தந்த புனல் குளிர்ப்பில என்று ஊடி
இழை தொடுத்து இலங்கும் மாடத்து இடை தடுமாற ஏறி,
மழை பொதுத்து, ஒழுகும் நீரால் மஞ்சனம் ஆடுவாரும்.       5.3.184

பன்னக அரசர் செம் கேழ்ப் பணா மணி வலியில் பற்றி,
இன் உயிர்க் கணவன் ஈந்தான் ஆம் என இருத்தி, விஞ்சை
மன்னவர் முடியும், பூணும், மாலையும், பணையம் ஆகப்
பொன்னின் நன் பலகைச் சூது, துயில்கிலர் பொருகின்றாரும்.       5.3.185

தெனநகு குடம் உள் பாடல் சித்தியர் இசைப்பத் தீஞ்சொல்
பன்னக மகளிர் வள் வார்த் தண்ணுமைப் பாணி பேணப்
பொன் நகு தரளப் பந்தர்க் கற்பகப் பொதும்பர்ப் பொன் தோள்
இன் நகை அரம்பைமாரை ஆடல் கண்டு இருக்கின்றாரும்.       5.3.186

ஆணியில் கிடந்த காதல் அகம் சுட, அருவி உண்கண்
சேண் உயர் உறக்கம் தீர்ந்த சிந்தையர், செய்வ தோரார்,
வீணையும், குழலும், தத்தம் மிடறும், வேற்றுமையில் தீர்ந்த
பாணி தள்ளாடப் பாடல் அமுது உகப் பாடுவாரும்.       5.3.187

தண்டலை வாழை அன்ன குறங்கு இடை அல்குல் தட்டில்,
கொண்ட பூந் துகிலும், கோவைக் கலைகளும், சோரக் கூர்ங்கள்
உண்டு அலமந்த கண்ணார், ஊசல் இட்டு உலாவுகின்ற
குண்டலம் திரு வில் வீசக் குரவையில் குழறு வாரும்.       5.3.188

நச்சு எனக் கொடிய கண்ணார், கள்ெளாடு குருதி நக்கிப்
பிச்சரில் பிதற்றி, அல்குல் பூந்துகில் கலாபம் பீறிக்
குச்சரித் திறத்தின் ஓசை களம் கொளக் குழுக் கொண்டு ஈண்டிச்
சச்சரிப் பாணி கொட்டி, நிறை தடுமாறுவாரும்.       5.3. 189

தயிர் நிறக் கள் உண்டு, உள்ளம் தள்ளத் தம் அறிவு, தள்ளப்
பயிர் உறத் 'தெய்வம் என்மேல் படிந்தது, பார்மின்! 'என்னா,
உயிர் உயிர்த்து, இரண்டு கையும் உச்சிமேல் உயர நீட்டி,
மயிர் சிலிர்த்து, உடலம் கூசி, வாய் விரித்து, ஒடுங்கு வாரும்.       5.3.190

இத்திறத்து அரக்கர் மாதர் ஈரிரு கோடி ஈட்டம்,
பத்தியின் உறையும் பத்திப் படர் நெடும் தெரிவும் பார்த்தான் :
சித்தியர் உறையும் மாடத் தெரிவும் பின்னாகச் சென்றான் :
உத்திசை விஞ்சை மாதர் உறையுளை முறையின் உற்றான்.       5.3.191

இராவணன் உரிமை மகளிருள் விஞ்சை மகளிர் நிலை (5133-5135)

வளர்ந்த காதலர், மகரிகை நெடுமுடி அரக்கனை வரக்காணார்,
தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட, உயிரொடு தடுமாறிக்
களம் தவா நெடும் கருவியில், கைகளில், செயிரியர் கலைக்கண்ணால்,
அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக, அலமரல் உறுகின்றார்.       5.3.192

புரியும் நல்நெறி முனிவரும், புலவரும், புகல்கிலர் பொறைகூர,
எரியும் வெம் சினத்து இகல் அடு கொடும் திறல் இராவணற்கு, எஞ்ஞான்றும்
பரியும் நெஞ்சினர் இவர் என வயிர்த்து ஒரு பகையொடும், பனித்திங்கள்
சொரியும் வெம் கதிர் துணைமுலைக் குவை சுடக் கொடிகளில் துடிக்கின்றார்.       5.3.193

சிறுகு காலங்கள் ஊழிகள் ஆம்வகை, திரிந்து சிந்தனை சிந்த,
முறுகு காதலின் வேதனை உழப்பவர், முயங்கிய முலைமுன்றில்
இறுகு சாந்தமும், எழுதிய குறிகளும், இன் உயிர்ப் பொறை ஈர,
மறுகு வாள் கண்கள் சிவப்பு உற நோக்கினர், மயங்கினர், உயிர்க்கின்றார்.       5.3.194

அநுமன் மண்டோதரி மனையைக் காண்டல்

ஆய விஞ்சையர் மடந்தையர் உறைவிடம் ஆறு இரண்டு அமை கோடி
தூய மாளிகை நெடும் தெரித் துருவிப்போய்த் தொலைவு இல் மூன்று உலகிற்கும்
நாயகன் பெரும் கோயிலை நண்ணுவான், கண்டனன், நளிர் திங்கள்
மாய நந்திய வாள் முகத்து ஒரு தனி மயன் மகள் மணி மாடம்.       5.3.195

மண்டோதரி மனையை அநுமன் வியத்தல்

கண்டு, கண்ணொடும் கருத்தொடும் கடாயினன் : 'காரணம் கடை நின்றது
உண்டு வேறு ஒரு சிறப்பு! எங்கள் நாயகற்கு உயிரினும் இனியாளைக்
கொண்டு போந்தவன் வைத்தது ஓர் உறையுள்கொல்? குல மணி மனைக்கு எல்லாம்,
விண்டுவின் தட மார்பினின் மணி ஒத்தது இது! 'என வியப்பு உற்றான்.       5.3.196

மண்டோதரி துயிலும் நிலை (5138-5139)

அரம்பை, மேனகை, திலோத்தமை, உருப்பசி ஆதியாயவர், மாரன்
சரம் பெய் தூணிபோல் தளிர் அடி கரம் தொடச் சாமரை தடுமாறக்
கரும்பையும் சுவை கைப்பித்த சொல்லியர் காமரம் கனி யாழின்
நரம்பின் இன்னிசை செவிபுக, நாசியில் கற்பக விரை நாற.       5.3.197

விழைவு நீங்கிய மேன்மையர் ஆயினும் கீழ்மையோர் வெகுள்வு உற்றால்,
பிழைகொல் நன்மைகொல் பெறுவது என்று ஐயுறு பீழையால், பெரும் தனெ்றல்,
உழையர் கூவப் புக்கு ஏகு எனப் பெயர்வது ஓர் ஊசலின் உளதாகும் :
பழையம் யாம் எனப் பண்பு அல செய்வரோ? பருணிதர் பயன் ஓர்வார்.       5.3.198

மண்டோதரியைப் பிராட்டியென்று மயங்கி அநுமன் வருந்தல் (5140-5141)

இன்ன தன்மையின் எழில் மணி விளக்கங்கள் இயல்கெடப் பொலிகின்ற
தன்னது இன் ஒளி தழைவு உறத் துயில்கொளும் தையலைத் தகைவு இல்லான்,
அன்னள் ஆகிய சானகி இவள் என அயிர்த்து, அகத்து எழு வெம் தீத்
துன்னு தன் உயிர் உடலொடு சுடுவது ஓர் துயர் உழந்து, இவை சொன்னான்.       5.3.199

'எற்பு வான் தொடர் யாக்கையால் பெறும் பயன் இழந்தனள்! இது நிற்க,
அற்பு வான் தளை, இல் பிறப்பு அதனொடும் இழந்து, தன் அரும் தெய்வக்
கற்பும் நீங்கிய கனம் குழை இவள் எனில், காகுத்தன் புகழோடும்,
பொற்பும், யானும், இவ் இலங்கையும், அரக்கரும், பொன்றுதும் இன்று! 'என்றான்.       5.3.200

அநுமன் தெளிதல் (5142-5143)

'மானுயர்த் திருவடிவினள் அவள் : இவள் மாறுகொண்டனள் : கூறில்,
தான் இயக்கியோ? தானவர் தையலோ? ஐயுறும் தகை ஆனாள்!
கான் உயர்த்த தார் இராமன்மேல் நோக்கிய காதல் காரிகையார்க்கு
மீன் உயர்த்தவன் மருங்குதான் மீளுமோ? நினைந்தது மிகை 'என்றான்.       5.3.201

'இலக்கணங்களும் சில உள! என்னினும், எல்லை சென்று உறுகில்லா
அலக்கண் எய்துவது அணியது உண்டு என்று, எடுத்து அறைகின்றது இவள் யாக்கை!
மலர்க் கருங் குழல் சோர்ந்து, வாய் வெரீஇச் சில மாற்றங்கள் பறைகின்றாள்!
உலக்கும் இங்கு இவள் கணவனும்! அழிவும் இவ் வியன் நகர்க்கு உளது! 'என்றான்.       5.3.202

அநுமன் மண்டோதரி மனை விட்டு இராவணன்மனையிற் புகுதல்

என்று உணர்ந்து நின்று ஏம் உறு நிலையினில், 'நிற்க இ திறன்! 'என்னாப்
பின்று சிந்தையன், பெயர்ந்தனன், அ மனை பிற்படப் பெருமேருக்
குன்று குன்றிய தகை உற ஓங்கிய கொற்றத்து மணிக் கோயில்
சென்று புக்கனன், இராவணற்கு எடுப்பரும் கிரி எனத் திரள் தோளான்.       5.3.203

அநுமன் இராவணன் மனையில் கண்ட தீக்குறிகள்

நிலம் துடித்தன, நெடுவரை துடித்தன, நிருதர்தம் குலமாதர்
பொலம் துடித்தன மருங்குல் போல், கண்களும் புருவமும் பொன் தோளும்
வலம் துடித்தன, மாதிரம் துடித்தன, தடித்து இன்றி நெடுவானம்
கலந்து இடித்தன, வெடித்தன பூரண மங்கல கலசங்கள்.       5.3.204

அநுமன் இலங்கை அழியும் என்றெண்ணி இரங்கல்

புக்கு நின்று, தன் புலன் கொடு நோக்கினன், பொருவரும் திரு உள்ளம்
நெக்கு நின்றனன், 'நீங்கும் அந்தோ இந்த நெடுநகர்த் திரு! 'என்னா,
எக்குலங்களில் யாவரே ஆயினும், இருவினை எல்லோர்க்கும்
ஒக்கும் : ஊழ்முறை அல்லது வலியது ஒன்று இல், என உணர்வுற்றான்.       5.3.205

அநுமன் இராவணனைக் காண்டல்

நூல் பெரும் கடல் நுணங்கிய கேள்வியான், நோக்கினன், மறம் கூரும்
வேல் பெரும் கடல் புடைபரந்து ஈண்டிய வெள் இடை வியன் கோயில்,
பால் பெரும் கடல் பல்மணிப் பல்தலைப் பாப்பு இடைப் படர்வேலை
மால் பெரும் கடல் வதிந்ததே அனையது ஓர் வனப்பினன் துயில்வானை!       5.3.206

இராவணன் துயிலும் நிலை (5148-5158)

குழவி ஞாயிறு குன்று இவர்ந்து அனையன குருமணி நெடுமோலி
இழைகேளாடு நின்று இளவெயில் எறித்திட இரவு எனும் பொருள் வீய,
முழைகொள் மேருவின் முகட்டு இடைக் கனகனை முருக்கிய முரண் சீயம்
தழைகொள் தோெளாடும் தலைபல பரப்பி முன் துயில்வது ஓர் தகையானை!       5.3.207

ஆய பொன் தலத்து ஆய்வளை அரம்பையர் ஆயிரர் அணி நின்று
தூய பொன் கவரி திரள் இயக்கிடச் சுழிபடு பசுங்காற்றின்
மீய கற்பகத் தேன் துளி விராயன வீழ்தொறும், நெடுமேனி
தீய, நல் தொடிச் சீதையை நினைதொறும் உயிர்த்து, உயிர் தேய்வானை!       5.3.208

குழந்தை வெண்மதிக் குடுமியன் நெடுவரை குலுக்கிய குலத் தோளைக்
கழிந்து புக்கு இடை கரந்தன அனங்கன் வெம் கடும் கணை பலபாய,
உழந்த வெம் சமத்து உயர்திசை யானையின் ஒளிர் மருப்பு உற்று இற்ற
பழம் தழும்பினுக்கு இடை இடையே சில பசும் புண்கள் அசும்பு ஊற!       5.3.209

சாந்து அளாவிய கலவைமேல் தவழ்வுறு தண் தமிழ்ப் பசும் தனெ்றல்
ஏய்ந்த காமவெம் கனல் உயிர்த்து இருமடி துருத்தியின் உயிர்ப்பு ஏறக்
காந்தள் மெல் விரல் சனகிபால் மனம் முதல் கரணங்கள் கடிது ஓடப்
பாந்தள் நீங்கிய முழை எனக் குழைவு உறு நெஞ்சு பாழ்பட்டானை!       5.3.210

கொண்ட பேர் ஊக்கம் மூளத் திசைதொறும் குறித்து மேல் நாள்
மண்டிய செருவில், மானத் தோள்களால் வாரி வாரி
உண்டது தவெிட்டிப் பேழ்வாய்க் கடைகள் தோறு ஒழுகிப் பாயும்
அண்டர்தம் புகழில் தோன்றும், வெள் எயிற்று அமைதியானை!       5.3.211

வெள்ளி வெண் சேக்கை வெந்து பொறி எழ, வெதும்பும் மேனி
புள்ளி வெண் மொக்குள் என்னப் பொடித்து வேர் கொதித்துப் பொங்கக்
கள் அவிழ் மாலை தும்பி வண்டொ டும் கரிந்து சாம்ப,
ஒள்ளிய மாலை தீய, உயிர்க்கின்ற உயிர்ப்பினானை!       5.3.212

தே இயல் நேமியானில், சிந்தைமெய்த் திருவின் ஏகப்
பூஇயல் அமளி மேலாப் பொய் உறக்கு உறங்குவானைக்
காவி அம் கண்ணி தன் பால் கண்ணிய காதல் நீரால்
ஆவியை உயிர்ப்பு என்று ஓதும் அம்மி இட்டு அரைக்கின்றானை!       5.3.213

மிகும் தகை நினைப்பு முற்ற உரு வெளிப்பட்ட வேலை,
நகும் தகை முகத்தன், காதல் நடுக்குறும் மனத்தன், 'வார் தேன்
உகும் தகை மொழியாள் முன்னம் ஒருவகை உள்ளத்து உள்ளே
புகுந்தனள் அன்றோ? 'என்று மயிர் புறம் பொடிக்கின்றானை!       5.3.214

மென் தொழில் கலாப மஞ்ஞை வேட்கை மீக்கூரும் ஏனும்,
குன்று ஒழித்து ஒருமாக் குன்றின் அரிதில் சேர் கொள்கை போல,
வன் தொழில் கொற்றப் பொன் தோள் மணந்திடும் மடந்தை மார்கட்கு
ஒன்று ஒழித்து ஒன்றின் ஏக அரிய தோள் ஒழுக்கினானை!       5.3.215

தழுவா நின்ற கருங்கடல் மீது உதயகிரியில் சுடர் தயங்க
எழுவான் என்ன மின் இமைக்கும் ஆரம் திகழும் இயல்பிற்றாய்,
முழு வானவராய் உலகம் ஒரு மூன்றும் காக்கும் முதல் தேவர்
மழு வாள் நேமி குலிசத்தின் வாய்மை துடைத்த மார்பானை!       5.3.216

தோடு உழுத தார் வண்டும், திசையானை மதம் துதைந்த வண்டும், சுற்றி,
மாடு உழுத நறும் கலவை, வயக் களிற்றின் சிந்துரத்தை மாறு கொள்ளக்
கோடு உழுத மார்பே போல், கொலை உழுத வடிவேலின் கொற்றம் அஞ்சித்
தாள் தொழுத பகை வேந்தர் முடி உழுது தழும்பு இருந்த சரணத்தானை!       5.3.217

இராவணனைக் கண்ட அநுமன் சினத்தல்

கண்டனன், காண்டலோடும், கருத்தின் மூள் காலச் செந்தீ
விண்டன கண்கள், கீண்டு வெடித்தன கீழும் மேலும்,
கொண்டது ஓர் உருவ மாயோன் குறளினும் குறுகி நின்றான்,
திண் தலை பத்தும் தோள்கள் இருபதும் தெரிய நோக்கி.       5.3.218

அநுமன் இராவணனைக் கொல்ல நினைத்தல் (5160-5161)

'தோள் ஆற்றல் என் ஆகும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாள் ஆற்று கண்ணாளை வஞ்சித்தான் மணிமுடி என்
தாள் ஆற்றலால் இடித்துத் தலைபத்தும் தகர்த்து, இன்று என்
ஆள் ஆற்றல் காட்டேனேல் அடியேனாய் முடியேனே! '       5.3.219

'நடித்துவாழ் தகைமையதோ அடிமைதான்? நல் நுதலைப்
பிடித்துவாழ் அரக்கனார் யான்கண்டும் பிழைப்பாரோ?
ஒடித்து வான் தோள் அனைத்தும், தலை பத்தும் உதைத்து உருட்டி,
முடித்து, இவ் ஊர் முடித்தால், மேல் முடிவது எ(ல்)லாம் முடிந்து ஒழிக! '       5.3.220

இராவணனைக் கொல்ல நினைந்த அநுமன் அந்நினைவொழிதல் (5162-5164)

என்று, ஊக்கி, எயிறு கடித்து, இரு கரமும் பிசைந்து, எழுந்து,
நின்று, ஊக்கி உணர்ந்து உரைப்பான், நேமியோன் பணி அன்றால்!
ஒன்று ஊக்கி ஒன்று இழைத்தல் உணர்வு உடையோர்க்கு உரித்து அன்றால் :
பின் தூக்கின், இது சாலப் பிழைபயக்கும் எனப் பெயர்ந்தான்.       5.3.221

ஆலம் பார்த்து உண்டவன்போல் ஆற்றல் அமைந்துளர் எனினும்,
சீலம் பார்க்குரியோர்கள் எண்ணாது செய்பவோ?
மூலம் பார்க்குறின் உலகை முடிவிக்கும் முறைத்து எனினும்,
காலம் பார்த்து இறை வேலை கடவாத கடல் ஒத்தான்.       5.3.222

இற்றைப் போர்ப் பெரும் சீற்றம் என்னோடு முடிந்திடுக!
கற்றைப் பூங் குழலாளைச் சிறைவைத்த கண்டகனை
முற்றப் போர் முடித்தது ஒரு குரங்கு, என்றால், முனை வீரன்
கொற்றப் போர்ச் சிலைத்தொழிற்குக் குறை உண்டாம் 'எனக் குறைந்தான்.       5.3.223

அநுமன் தன்னுள் கூறுதல்

அந்நிலையான், பெயர்த்து உரைப்பான், 'ஆய்வளைக்கை அணி இழையார்
இந்நிலையானுடன் துயில்வார் உளரல்லர்! இவன் நிலையும்
புல் நிலைய காமத்தால் புலர்கின்ற நிலை! பூவை
நல் நிலையின் உளள் என்னும் நலன் எனக்கு நல்குமால்! '       5.3.224

அநுமன் பிராட்டியைக் காணாது வருந்துதல் (5166-5174)

என்று எண்ணி, ஈண்டு இனி ஓர் பயன் இல்லை என நினையாக்
குன்று அன்ன தோளவன்தன் கோ மனை பின்படப் பெயர்ந்தான்,
நின்று எண்ணி உன்னுவான், 'அந்தோ! இந் நெடு நகரில்
பொன் துன்னும் மணிப் பூணாள் இலள்! 'என்னப் பொருமினான்.       5.3.225

'கொன்றானோ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியோன்?
ஒன்றானும் உணரகிலேன் : மீண்டு இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு இக் கொடும் துயரம் போகாதால் '       5.3.226

'கண்டு வரும்! என்று இருக்கும் காகுத்தன்; கவிகுலக்கோன்
கொண்டு வரும்! என்று இருக்கும்; யான் இழைத்த கோள் இதுவால்
புண்டரிக நயனத்தான் பால் இனி யான் போவேனோ?
விண்டவரோடு உடன் வீயாது, யான் வாளா விளிவேனோ? '       5.3.227

'கண்ணிய நாள் கழிந்துளவால் கண்டிலமால், கனம் குழையை!
விண் அடைதும் 'என்றாரை ஆண்டு இருத்தி விரைந்த யான்
எண்ணியது முடிக்ககிலேன்! இனி முடியாது இருப்பேனோ?
புண்ணியம் என்று ஒரு பொருள் என் உழை நின்றும் போயதால்.       5.3.228

'ஏழுநூறு ஓசனை சூழ்ந்து எயில் கிடந்த இவ் இலங்கை
வாழும் மா மன்னுயிர் யான் காணாத மற்று இல்லை :
ஊழியான் பெருந் தேவி ஒருவரையும் யான் காணேன்!
ஆழி தாய், இடர் ஆழி இடையே வீழ்ந்து அழிவேனோ? '       5.3.229

'வல் அரக்கன்தனைப் பற்றி, வாய் ஆறு குருதி உகக்
கல் அரக்கும் கரதலத்தால், 'காட்டு 'என்று காண்கேனோ?
எல் அரக்கும் அயில் நுதி வேல் இராவணனும் இவ் ஊரும்
மெல் அரக்கின் உருகி விழ, வெம் தழலால் வேய்கேனோ? '       5.3.230

'வானவரே முதலோரை வினவுவனேல், வல் அரக்கன்
தான் ஒருவன் உளன் ஆக, உரைசெய்யும் தருக்கு இலரால்!
ஏனையர்கள் எங்கு உரைப்பார்? எவ் வண்ணம் தெரிகேனோ?
ஊன் அழிய நீங்காத உயிர் சுமந்த உணர்வு இல்லேன்! '       5.3.231

'எருவைக்கு முதல் ஆய சம்பாதி, 'இலங்கையில் அத்
திருவைக் கண்டனென் 'என்றான் : அவன் உரையும் சிதைந்ததால்
கருவைக்கும் நெடுநகரைக் கடல் இடையே கரையாதே
உருவைக் கொண்டு இன்னமும் நான் உளென் ஆகி உழல்வேனோ?       5.3.232

'வடித் தாழ் பூங் குழலாளை, வான் அறிய, மண் அறியப்
பிடித்தான் இவ் அடல் அரக்கன் எனும் மாற்றம் பிழையாதால் :
எடுத்து ஆழி இலங்கையினை இரும் கடல் இட்டு, இன்று, இவனை
முடித்தாலே, யான் முடிதல் முறை மன்ற! என்று உணர்வான்.       5.3.233

அநுமன் அசோக வனத்தைக் காண்டல்

எள் உறையும் ஒழியாமல், யாண்டையினும் உளனாய்த் தன்
உள் உறையும் ஒருவனைப் போல், எம் மருங்கும் உலாவுவான்,
புள் உறையும் மானத்தை உற நோக்கிப் புறம் பேர்வான்,
கள் உறையும் மலர்ச்சோலை அயல் ஒன்று கண்ணுற்றான்.       5.3.234
------------

5.4 காட்சிப் படலம் (5176 - 5334)

அநுமன் நினைத்தல்

மாடு நின்ற அம் மணிமலர்ச் சோலையை மருவித்
'தேடி அவ் வழிக் காண்பெனேல் தீரும் என் சிறுமை;
ஊடு கண்டிலென் என்னில், பின் உரியது ஒன்று இல்லை!
வீடுவேன், மற்று, இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி! '       5.4.1

அநுமன் அசோகவனத்தை அடைதல்

என்று, சோலைபுக்கு எய்தினன் இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்,
அன்று வாள் அரக்கன் சிறை அவ் வழி வைத்த
துன்று அல் ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான் துணிந்தாம்.       5.4.2

பிராட்டி துயர்நிலை (5178-5204)

வல் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க, அங்கு இருந்தாள் :
கல் மருங்கு எழுந்து, என்றும் ஓர் துளி வரக் காணா
நல் மருந்துபோல், நலன் அற உணங்கிய நங்கை,
மெல் மருங்குல்போல், வேறு உள அங்கமும் மெலிந்தாள்.       5.4.3

துயில் அறக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்,
வெயில் இடைத் தந்த விளக்கு என, ஒளி இலா மெய்யாள்,
மயில் இயல் குயில் மழலையாள், மான் இளம் பேடை
அயில் எயிற்று வெம் புலிக் குழாத்து அகப்பட்டது அன்னாள்.            5.4.4

விழுதல், விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல், ஏங்குதல், இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல், சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல் அன்றி மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.            5.4.5

தழைத்த பொன் முலைத் தடம் கடந்து அருவிபோல் தாழப்
புழைத்த போல நீர் நிரந்தரம் பொழிகின்ற பொலிவால்,
இழைக்கும் நுண்ணிய மருங்குலாள், இணை நெடும் கண்கள்
மழைக்கண் என்பது காரணக் குறி என வகுத்தாள்.       5.4.6

அரிய மஞ்சினோடு அஞ்சனம் முதலிய அதிகம்
கரிய காண்டலும், கண்ணின்நீர் கடல்புகக் கலுழ்வாள்;
உரிய காதலர் ஒருவரோடு ஒருவரை உலகில்
பிரிவு எனும் துயர் உருவுகொண்டால் அன்ன பிணியாள்.       5.4.7

துப்பினால் செய்த கையொடு கால் பெற்ற துளி மஞ்சு,
ஒப்பினான் தனை நினைதொறும், நெடும் கண்கள் உகுத்த
அப்பினால் நனைந்து, அரும் துயர் உயிர்ப்பு உடை யாக்கை.
வெப்பினால் புலர்ந்து, ஒருநிலை உறாத மென் துகிலாள்.       5.4.8

அரிது போகவோ விதிவலி கடக்க என்று அஞ்சிப்
பரிதி வானவன் குலத்தையும் பழியையும் பாராச்
சுருதி நாயகன் வரும் வரும் என்பது ஓர் துணிவால்
கருதி, மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்.       5.4.9

கமையினாள் திருமுகத்து அயல் கதுப்பு உறக் கௌவிச்
சுமையுடைக் கற்றை நிலத்திடைக் கிடந்த, தூமதியை
அமைய வாயில் பெய்து உமிழ்கின்ற அயில் எயிற்று அரவில்,
குமையுறத் திரண்டு, ஒரு சடை ஆகிய குழலாள்.       5.4.10

ஆவி அம் துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்,
தூவி அன்னம் மென் புனல் இடைத் தோய்கிலா மெய்யாள்,
தேவு தணெ்கடல் அமிழ்துகொண்டு அநங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே ஒக்கின்ற உருவாள்.       5.4.11

'கண்டிலன்கொலாம் இளவலும்? கனை கடல் நடுவண்
உண்டு இலங்கை என்று உணர்ந்திலர், உலகு எலாம் ஒறுப்பான்
கொண்டு இறந்தமை அறிந்திலராம்? ' எனக் குழையாப்
புண் திறந்ததில் எரி நுழைந்தால் எனப் புகைவாள்.       5.4.12

'மாண்டுபோயினன் எருவைகட்கு அரசன், மற்று அவரோடு
ஆண்டை என் நிலை உரைப்பவர் இல்லை : இப் பிறப்பில்
காண்டலோ அரிது! 'என்று என்று விம்முறும், கலங்கும்;
மீண்டும் மீண்டும் புக்கு எரி நுழைந்தால் என மெலிவாள்.       5.4.13

'என்னை நாயகன் இளவலை எண்ணிலா வினையேன்
சொன்ன வார்த்தை கேட்டு அறிவிலள், எனத் துறந்தானோ?
முன்னை ஊழ்வினை முடிந்ததோ? ' என்று என்று முறையால்
பன்னி, வாய் புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆருயிர் பதைப்பாள்.       5.4.14

'அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? 'என்று அழுங்கும்;
'விருந்து கண்டபோது என் உறுமோ? ' என்று விம்மும்;
'மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு? 'என்று மயங்கும்;
இருந்த மா நிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்.       5.4.15

'வன்கண் வஞ்சனை அரக்கர் இத்துணைப் பகல் வையார்,
தின்பர், என் இனிச் செயத்தக்கது? என்று தீர்ந்தானோ?
தன் குலப் பொறை தன்பொறை எனத் தவிர்ந்தானோ?
என்கொல் எண்ணுவது? 'என்னும், அங்கு இராப்பகல் இல்லாள்.       5.4.16

'பெற்ற தாயரும் தம்பியும் பெயர்த்தும் வந்து எய்திக்
கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்கொலோ? குறித்துச்
சொற்ற யாண்டு எலாம் உறைந்து அன்றி அந்நகர்த் துன்னான்.
உற்றது உண்டு 'எனாப் படர் உழந்து உறாதன உறுவாள்.       5.4.17

'முரன் எனத்தகும் மொய்ம்பினோர் முன் பொருதவர்போல்,
வரனும், மாயமும், வஞ்சமும், வரம்பில வல்லோர்
பொர நிகழ்ந்தது ஓர் பூசல் உண்டாம்? ' எனப் பொருமாக்
கரன் நெரித்து, அது கண்டனளாம் எனக் கவல்வாள்.       5.4.18

தெம்மடங்கிய சேண் நிலம் கேகயர்
தம் மடந்தை உன் தம்பியதாம் என
மும்மடங்கு பொலிந்த முகத்தின் அவ்
வெம் மடங்கலை உன்னி வெதும்புவாள்.       5.4.19

'மெய்த் திருப்பதம் மேவு 'என்ற போதினும்
'இத்திரு துறந்து ஏகு 'என்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.       5.4.20

தேங்கு கங்கைத் திருமுடிச் செங்கணான்
வாங்கு கோல வடவரை வார்சிலை
ஏங்கும் மாத்திரத்து இற்று இரண்டாய்விழ
வீங்கு தோளை நினைந்து மெலிந்துளாள்.       5.4.21

இன்னல் அம்பர வேந்தற்கு இயற்றிய
பல் நலம் பதினாலாயிரம் படை
கன்னல் மூன்றில் களப்படக் கால் வளை
வில் நலம் புகழ்ந்து ஏங்கி வெதும்புவாள்.       5.4.22

ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு 'எம்பி நின் தம்பி : நீ
தோழன் : மங்கை கொழுந்தி! 'எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.       5.4.23

மெய்த்த தாதை விரும்பினன் நீட்டிய
கை தலங்களை கைகளின் நீக்கி வேறு
உய்த்தபோது தருப்பையில் ஒண்பதம்
வைத்த வேதிகைச்செய்தி மனக்கொள்வாள்.       5.4.24

உரம் கொள் தேம் மலர்ச் சென்னி உரிமைசால்
வரம் கொள் பொன் முடி தம்பி வனைந்திலன்
திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு
இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள்.       5.4.25

பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள்
அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து அவன்
கருத்தின் ஆசை கரை இன்மை கண்டு இறை
சிரித்த செய்கை நினைத்து அழும் செய்கையாள்.       5.4.26

மழுவின் வாய் இன மன்னரை மூவெழு
பொழுது நூறிப் புலவு உறு புண்ணின் நீர்
முழுகினான் தவ மொய்ம்பொடு மூரிவில்
தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள்.       5.4.27

ஏக வாளி அவ் இந்திரன் காதல் மேல்
போக ஏவி அது கண் பொடித்தநாள்
காகம் முற்றும் ஓர் கண்ணில வாகிய
வேக வென்றியைத் தன் தலைமேற் கொள்வாள்.       5.4.28

வெவ் விராதனை மேவு அரும் தீவினை
வவ்வி மாற்று அரும் சாபமும் மாற்றிய
அவ் இராமனை உன்னித் தன் ஆர் உயிர்
செவ் இராது உணர்வு ஓய்ந்து உடல் தேம்புவாள்.       5.4.29

காவல் அரக்கியர் துயிலுதல்

இருந்தனள்; திரிசடை என்னும் இன்சொலில்
திருந்தினாள் ஒழிய மற்று இருந்த தீவினை
அருந்திறல் அரக்கியர் அல்லும் நள் உறப்
பொருந்தலும் துயில் நறைக் களிபொருந்தினார்.       5.4.30

பிராட்டி திரிசடையிடம் கூறல் (5206-5210)

ஆயிடைத் திரிசடை என்னும் அன்பினால்
தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்
'தூயநீ! கேட்டி! என் துணைவி ஆம்! 'எனா
மேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்.       5.4.31

'நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?
பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்
வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்!       5.4.32

'முனியொடு மிதிலையின் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆயின் நல்குவாய்!       5.4.33

'மறந்தனென் இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்!
அறம் தரு சிந்தை என் ஆவி நாயகன்
பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்
துறந்து கான் புகுந்தநாள் வலம் துடித்ததே!       5.4.34

'நஞ்சு அனையான் வனத்து இழைக்க நண்ணிய
வஞ்சனை நாள் வலம் துடித்த வாய்மையால்
எஞ்சல ஈண்டுதாம் இடம் துடிக்குமால்;
அஞ்சல் என்று இரங்குவாய்! அடுப்பது யாது என்றாள்?       5.4.35

திரிசடை பிராட்டிபால் நற்குறிப்பயன் கூறுதல்

என்றலும் திரிசடை 'இயைந்த சோபனம்!
நன்று இது! நன்று! 'எனா நயந்த சிந்தையாள்
'உன்துணைக் கணவனை உறுதல் உண்மையால்!
அன்றியும் கேட்டி! 'என்று அறைதல் மேயினாள்.       5.4.36

திரிசடை தான் கண்ட நிமித்தமும் கனவும் பயனும் கூறல் (5212-5228)

'உன் நிறம் பசப்பு அற உயிர் உயிர்ப்பு உற
இன் நிறத் தெனஇசை இனிய நண்பினால்
மின் நிற மருங்குலாய்! செவியில் மெல்ல ஓர்
பொன் நிறத் தும்பி வந்து ஊதிப் போயதால்!       5.4.37

'ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்! என்
வாயது கேள்! 'என மறித்தும் கூறுவாள்.       5.4.38

துயிலலை ஆதலில் கனவு தோன்றல;
அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!       5.4.39

'எண்ணெய் தன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடும் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்
அண்ணல் வேல் இராவணன் அரத்த ஆடையன்
நண்ணினன் தெனபுலம்; நவை இல் கற்பினாய்!            5.4.40

'மக்களும் சுற்றமும் மற்று உேளார்களும்
புக்கனர் அப்புலம் போந்தது இல்லையால்!
சிக்கு அற நோக்கினன்! தீய இன்னமும்
மிக்கன கேட்க! 'என விளம்பல் மேயினாள்.            5.4.41

'ஆண்தகை இராவணன் வளர்க்கும் அவ் அனல்
ஈண்டில பிறந்தவால்; இனம் கொள் செம் சிதல்
தூண்டரு மணிவிளக்கு அழலும் தொல் மனை
கீண்டதால் வான ஏறு எறியக் கீழைநாள்!            5.4.42

'பிடி மதம் பிறந்தன; பிறங்கு பேரியும்
இடிபட முழங்கின இரட்டல் இன்றியே;
தடி உடை முகில் குலம் இன்றித் தாவு இல் வான்
வெடிபட அதிருமால் : உதிரும் மீன் எலாம்!            5.4.43

'வில் பகல் இன்றியே இரவு விண்டு அற
எல் பகல் எறித்து உளது என்னத் தோன்றுமால்!
மல் பக மலர்ந்த தோள் மைந்தர் சூடிய
கற்பக மாலையும் புலவு காலுமால்!            5.4.44

'திரியுமால் இலங்கையும் மதிலும்; திக்கு எலாம்
எரியுமால்; கந்தர்ப்ப நகரம் எங்கணும்
தெரியுமால்; மங்கல கலசம் சிந்தின
விரியுமால்; விளக்கினை விழுங்குமால் இருள்!            5.4.45

'தோரணம் முறியுமால் துளங்கிச் சூழி மால்
வாரணம் முறியுமால் வலத்த வால் மருப்பு;
ஆரண மந்திரத்து அறிஞர் நாட்டிய
பூரண குடத்து நீர் நறவில் பொங்குமால்!            5.4.46

'விண் தொடர் மதியினைப் பிளந்து மீன் எழும்;
புண் தொடர் குருதியில் பொழியுமால் மழை;
தண்டொடு திகிரி வாள் தனு என்று இன்னன
மண்டு அமர் புரியுமால் ஆழி மாறு உற!                  5.4.47

'மங்கையர் மங்கலத் தாலி மற்று அவர்
அம் கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன; குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால்!           5.4.48

'மன்னவன் தேவி அம் மயன் மடந்தைதன்
பின் அவிழ் ஓதியும் பிறங்கி வீழ்ந்தன
துன் அரும் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறின
இன்னல் உண்டு எனும் இதற்கு ஏது ஈது எனா!       5.4.49

என்று அன இயம்பி 'வேறு இன்னும் கேட்டியால்!
இன்று இவண் இப்பொழுது எழுந்தது ஓர் கனா!
வன் துணைக் கோளரி இரண்டு மாறு இலாக்
குன்று இடை உழுவை அம் குழுக்கொண்டு ஈண்டியே!            5.4.50

வரம்பு இலா மதகரி உறையும் அவ் வனம்
நிரம்புற வளைந்தன நெருக்கி நேர்ந்தன
குரம்பு அறு பிணம் படக் கொன்று மாறு இலாப்
புரம் புக இருந்தது ஓர் மயிலும் போயதால்!            5.4.51

'ஆயிரம் திருவிளக்கு அமைய மாட்டிய
சேய் ஒளி விளக்கம் ஒன்று ஏந்திச் செய்யவள்
நாயகன் தனி மனை நின்று நண்ணுதல்
மேயினள் வீடணன் கோயில் மென் சொலாய்!            5.4.52

'பொன்மனை புக்க அப் பொருவில் போதினில்
என்னை நீ உணர்த்தினை முடிந்தது இல்! 'என
'அன்னையே! அதன்குறை காண்! என்று ஆயிழை
இன்னமும் துயில்க! என இருகை கூப்பினாள்.            5.4.53

அநுமன் பிராட்டி இருக்கை காணுதல்

இவ்விடை அண்ணல் அவ் இராமன் ஏவிய
வெவ் விடை அனைய போர் வீரத் தூதனும்
அவ்விடை எய்தினன் அரிதின் நோக்குவான்
நொவ் இடை மடந்தைதன் இருக்கை நோக்கினான்.            5.4.54

துயிலுணர்ந்த அரக்கியர் நிலை (5230-5235)

அவ்வயின் அரக்கியர் அறிவு உற்று 'அம்மவோ!
செவ்வை இல் துயில் நமைச் செய்தது ஈது! 'எனா
எவ்வயின் மருங்கினும் எழுந்து வீங்கினார்
வெவ் அயில் மழு எழுச் சூல வெங்கையார்.            5.4.55

வயிற்றிடை வாயினர்; வளைந்த நெற்றியில்
குயிற்றிய விழியினர்; கொடிய நோக்கினர்;
எயிற்றினுக்கு இடையிடை யானை யாளி பேய்
துயில்கொள் வெம் பிலன் எனத் தொட்ட வாயினார்.            5.4.56

ஒருபது கையினர் ஒற்றைச் சென்னியர்;
இருபது தலையினர் இரண்டு கையினர்;
வெருவரு தோற்றத்தர் விகட வேடத்தர்;
பருவரை எனமுலை பலவும் நாற்றினார்.                  5.4.57

சூலம் வாள் சக்கரம் தோட்டி தோமரம்
கால வேல் கப்பணம் கற்ற கையினர்;
ஆலமே உருவு கொண்டு அனைய மேனியர் :
பாலமே தரித்தவன் வெருவும் பான்மையார்.            5.4.58

கரி பரி வேங்கை மாக் கரடி யாளி பேய்
அரி நரி நாய் என அணி முகத்தினர் :
வெரிந் உறு முகத்தினர் : விழிகண் மூன்றினர் :
புரிதரு கொடுமையர் : புகையும் வாயினார்.            5.4.59

எண்ணினுக்கு அளவிடல் அரிய ஈட்டினர்
கண்ணினுக்கு அளவிடல் அரிய காட்சியர்
பெண் எனப் பெயர்கொடு திரியும் பெற்றியர்
துண் எனத் துயில் உணர்ந்து எழுந்து சுற்றினார். 5.4.60

பிராட்டி வருந்தலும் அநுமன் அணுகலும்

ஆயிடை உரை அவிந்து அழகன் தேவியும்
தீ அனையவர் முகம் நோக்கித் தேம்பினாள் :
நாயகன் தூதனும் விரைவின் நண்ணினான்
ஓய்விலன் உயர்மரப் பணையின் உம்பரான். 5.4.61

அநுமன் சிந்தனை

'அரக்கியர் அயில் முதல் ஏந்தும் அங்கையர்
நெருக்கிய குழுவினர் துயிலும் நீங்கினர்
இருக்குநர் : மற்று இதற்கு ஏது என்? 'எனப்
பொருக்கென அவர் இடை பொருந்த நோக்கினான். 5.4.62

அநுமன் பிராட்டியைக் காண்டல்

விரி மழைக்குலம் கிழித்து ஒளிரும் மின் எனக்
கருநிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்
குருநிறத்து ஒரு தனிக் கொண்டல் ஊழியான்
இரும் நிறம் அத்து உற்ற எற்கு இயைந்த காந்தத்தை! 5.4.63

பிராட்டியே என்று அநுமன் துணிதல் (5239-5241)

'கடக்க அரும் அரக்கியர் காவல் சுற்று உளார்!
மடக்கொடி சீதையாம் மாதரே கொலாம்?
கடல்துணை நெடிய தன் கண்ணின் நீர்ப் பெரும்
தடத்திடை இருந்தது ஓர் அன்னத் தன்மையாள்! 5.4.64

'எள்ளரும் உருவின் நல் இலக்கணங்களும்
வள்ளல்தன் உரையொடும் மாறு கொண்டில!
கள்ள வாள் அரக்கன் அக் கமலக்கண்ணனார்
உள் உறை உயிரினை ஒளித்துவைத்தவா! 5.4.65

'மூவகை உலகையும் முறையின் நீக்கிய
பாவி தன் உயிர் கொள்வான் இழைத்த பண்பு இதால்!
ஆவதே? அரவு அணை துயிலின் நீங்கிய
தேவனே அவன்! இவள் கமலச் செல்வியே! 5.4.66

அநுமன் மகிழ்தல்

'வீடினது அன்று அறன்! யானும் வீகலேன்!
தேடினன் கண்டனன் தேவியே! 'எனா
ஆடினன் பாடினன் ஆண்டும் ஈண்டும் பாய்ந்து
ஓடினன் உலாவினன் உவகைத் தேன் உண்டான். 5.4.67

பிராட்டியின் தூய்மை கண்டு அநுமன் வியந்து பேசுதல் (5243-5251)

'மாசு உண்ட மணி அனாள் வயங்கு வெம் கதிர்த்
தேசு உண்ட திங்களும் என்னத் தேய்ந்து உளாள்!
காசு உண்ட கூந்தலாள் கற்பும் காதலும்
ஏசுண்ட இல்லையால்! அறத்துக்கு ஈறு உண்டோ? 5.4.68

'புனைகழல் இராகவன் பொன் புயத்தையோ?
வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ?
வனைகழல் அரசரின் வண்மை மிக்கிடும்
சனகர்தம் குலத்தையோ? யாதைச் சாற்றுகேன்? 5.4.69

'தேவரும் பிழைத்திலர்! தெய்வ வேதியர்
ஏவரும் பிழைத்திலர் அறமும் ஈறு இன்றால்?
யாவது இங்கு இனிச் செயல் அரியது எம்பிராற்கு?
ஆவ என் அடிமையும் பிழைப்பு இன்றாம் அரோ! 5.4.70

'கேழிலாள் நிறை இறை கீண்டதாம் எனின்
ஆழியான் முனிவு எனும் ஆழி மீக்கொள
ஊழியின் இறுதி வந்து உறும்! என்று உன்னினேன் :
வாழிய! உலகு இனி வரம்பில் நாள் எலாம்! 5.4.71

'வெங்கனல் முழுகியும் புலன்கள் வீக்கியும்
நுஙகுவ அருந்துவ நீக்கி நோற்பவர்
எங்கு உளர்; குலத்தில் வந்து இல்லின் மாண்புடை
நங்கையர் மனத்தவம் நவிலற் பாலதோ? 5.4.72

'பேண நோற்றது மனைப் பிறவி! பெண்மைபோல்
நாணம் நோற்று உயர்ந்தது! நங்கை தோன்றலால்!
மாண நோற்று ஈண்டு இவள் இருந்த ஆறு எலாம்
காண நோற்றிலன் அவன் கமலக் கண்களால்! 5.4.73

'முனிபவர் அரக்கியர் முறையின் நீங்கினார்!
இனி அவள் தான் அலாது யாரும் இல்லையால்!
தனிமையும் பெண்மையும் தவமும் இன்னதே!
வனிதையர்க்கு ஆக நல் அறத்தின் மாண்பு எலாம்! 5.4.74

'தருமமே காத்ததோ? சனகன் நல்வினைக்
கருமமே காத்ததோ? கற்பின் காவலோ?
அருமையே! அருமையே! யார் இது ஆற்றுவார்?
ஒருமையே எம்மனோர்க்கு உரைக்கற் பாலதோ? 5.4.75

செல்வமோ அது! அவர் தீமையோ இது!
அல்லும் நன்பகலும் நின்று அமரர் ஆட்செய்வார்!
ஒல்லுமோ ஒருவர்க்கு ஈது? உறுகண் யாது இனி?
வெல்லுமோ தீவினை அறத்தை மெய்ம்மையால்? 5.4.76

அசோக வனத்துள் இராவணன் தோன்றுதல்

என்று இவை இனையன எண்ணி வண்ணவான்
பொன் திணி நெடுமரப் பொதும்பர் புக்கவன்
நின்றனன் : அவ் வழி நிகழ்ந்தது என் எனில்
துன்று பூம் சோலைவாய் அரக்கன் தோன்றினான். 5.4.77

இராவணன் அசோகவனத்துட் புகும்நிலை (5253-5271)

சிகர வண் குடுமி நெடுவரை எவையும் ஒருவழித் திரண்டன சிவண,
மகரிகை வயிர குண்டலம் அலம்பு திண் திறல் தோள் புடை வயங்கச்
சகரன் நீர் வேலை தழுவிய கதிரில், தலைதொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பல் மகுடம் இளவெயில் எறிப்பக் கங்குலும் பகல்பட வந்தான். 5.4.78

உருப்பசி உடைவாள் ஏந்தினள் தொடர, மேனகை வெள்ளடை உதவச்
செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல, அரம்பையர் குழாம் புடை சுற்றக்
கருப்புரச் சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமள கந்தம்
மருப்புடைப் பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கைவாய் மூக்கிடை மடுப்ப. 5.4.79

நான நெய் விளக்கு நால் இரு கோடி நங்கையர் அங்கையால் எடுப்ப,
மேல் நிவந்து எழுந்த மணியுடை அணியின் விரி கதிர் இருள் எலாம் விழுங்கக்
கால் முதல் தொடர்ந்த நூபுரம் சிலம்பக் கிண்கிணி கலையொடும் கலிப்பப்
பால் நிறத்து அன்னக் குழாம் படர்ந்தனெ்னப் பற்பல மங்கையர் படர. 5.4.80

'அந்தரம் புகுந்தது உண்டு என முனிவுற்று அரும் துயில் நீங்கினான் ஆண்டைச்
சந்திர வதனத்து அருந்ததி இருந்த தண் நறும் சோலையின் தனையோ?
வந்தது இங்கு யாதோ? யாரொடும் போமோ? ' என்று தம் மனம் மறுகுதலால்,
இந்திரன் முதலோர் இமைப்பு இலா நாட்டத்து எனைவரும் உயிர்ப்பு அவிந்து இருப்ப. 5.4.81

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பால் நிறப் பட்டின் மாலை உத்தரியம் பண்பு உறப் பசும்பொன் ஆரத்தின்
மால் நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வருகதிர் இளவெயில் பொருவச்
சூல்நிறக் கொண்மூக் கிழித்து இடை துடிக்கும் மின் என மார்பின் நூல் துளங்க. 5.4.82

தோள்தொறும் தொடர்ந்த மகரிகை வயிரக் கிம்புரி வலயமாச் சுடர்கள்
நாள்தொறும் தொடரும் கலி கெழு விசும்பின் நாெளாடு கோளினை நக்கத்
தாள்தொறும் தொடர்ந்த தழங்கு பொன் கழலின் தகை ஒளி நெடு நிலம் தடவக்,
கேள்தொறும் தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின் முக மலர் இரவினும் கிளர. 5.4.83

தன்நிறத்தோடு மாறுகொண்டு இமைக்கும் நீவி அம் தழைபட உடுத்த
பொன் நிறத் தூசு, கருவரை மருங்கில் தழுவிய புதுவெயில் பொருவ,
மின் நிறக் கதிரில் செற்றிய பசும்பொன் விரல்தலை அவிர் ஒளிக் காசின்
கல் நிறக் கற்றை, நெடுநிழல் பூத்த கற்பக முழுவனம் கவின. 5.4.84

சன்னவீரத்த கோவை வெண் தரளம் ஊழியின் இறுதியில் தனித்த
பொன் நெடு வரையில் தொத்திய கோளும் நாளும் ஒத்து இடையிடை பொலிய,
மின் ஒளிர் மௌலி உதய மால்வரையின் ம்ீப் படர் வெம் கதிர்ச் செல்வர்
பன்னிருவரினும் இருவரும் தவிர உதித்தது ஓர்படி ஒளிபரப்ப.       5.4.85

பயில் எயிற்று இரட்டைப் பணை மருப்பு ஒடியப் படியினில் பரிபவம் சுமந்த
மயில் அடித்து ஒழுக்கின் அனைய மா மதத்த மாதிரக் காவல் மால் யானை
கயிலையில் திரண்ட முரண் தொடர் தடம் தோள் கனகனது உயர் வரம் கடந்த
அயில் எயிற்று அரியின் சுவடு தன் கரத்தால் அளைந்த மாக் கரியின் நின்று அஞ்ச.       5.4.86

அம் கயல் கரும் கண் இயக்கியர், துயக்கு இல் அரம்பையர் விஞ்சையர்க்கு அமைந்த
நங்கையர், நாக மடந்தையர், சித்த நாரியர், அரக்கியர் முதலாம்
குங்குமக் கொம்மைக் குவிமுலைக் கனிவாய்க் கோகிலம் துயர்ந்த மென் குதலை
மங்கையர் ஈட்டம் மால்வரை தழீஇய மஞ்ஞை அம் குழு என வயங்க.       5.4.87

தொளை உறு புழை வேய் தூங்கு இசைக் கானம் துயல் உறாது ஒருநிலை தொடர,
இளையவர் மிடறும் இன் நிலை இயக்கக் கின்னரம் முறை நிறுத்து எடுத்த
கிளை உறு பாடல், சில் அரிப் பாண்டில் தழுவிய முழவொடும் கெழுமி
அளை உறை அரவும் அமுது வாய் உகுப்ப, அண்டமும் வையமும் அளப்ப.       5.4.88

அன்ன பூஞ் சதுக்கம், சாமரை, உக்கம், ஆதியாம் வரிசையின் அமைந்த
உன்னரும் பொன்னின் மணியினில் புனைந்த இழைக்குலம் மழைக் கரும் கடைக்கண்
மின் இடைச் செவ்வாய்க் குவி முலைப் பணைத்தோள் வீங்கு தேர் அல்குலார் தாங்கி,
நல் நிறக் காரின் வரவு கண்டு உவக்கும் நாடக மயில் என, நடப்ப.       5.4.89

தந்திரி நெறியில் தாக்குறு கருவி தூக்கினர் எழுவிய சதியின்
முந்துறு குணிலோடு இயைவுறு குறட்டில் சில்லரிப் பாண்டிலின் முறையின்,
மந்தர கீதத்து இசைப்பதம் தொடர்ந்த வகையுறு கட்டளை வழாமல்
அந்தர வானத்து அரம்பையர், கரும்பின் பாடலார், அருகு வந்து அகவ       5.4.90

அந்தியின் அனங்கன் அழல்படத் துரந்த அலர் மலர்ப் பகழி வாய் அறுத்த
வெந்துறு புண்ணின், வேல் நுழைந்து என்ன வெண்மதிப் பசும் கதிர் விரவ,
மந்தமாருதம் போய் மலர்தொறும் வாரி வயங்கு நீர் மாரியின் வருதேன்
சிந்து நுண் துளிகள் சீகரத் திவலை உருக்கிய செம்பு எனத் தறெிப்ப.       5.4.91

இழை புரை மருங்குல் இறும் இறும் எனவும் இறுகலா வன முலை இரட்டை
உழை புகு செப்பின் ஒளிதர மறைத்த உத்தரீயத்தினர், ஒல்கிக்
குழை புகு கமலம் கோட்டினர் நோக்கும், குறுநகைக் குமுத வாய் மகளிர்
மழை புரை ஒண்கண் செங்கடை ஈட்டம், மார்பினும் தோளினும் வயங்க.       5.4.92

மாலையும், சாந்தும், கலவையும், பூணும் வயங்கு நுண் தூசொடு, காசும்,
சோலையின் தொழுதிக் கற்பகத் தருவும், நிதிகளும், கொண்டு பின்தொடரப்
பாலின் வெண் பரவைத் திரை கரும் கிரிமேல் பரந்து என சாமரை பதைப்ப,
வேலைநின்று உயரும் முயலில் வெண்மதியின், வெண்குடை மீது உற விளங்க.       5.4.93

ஆர்கலி அகழி அருவரை இலங்கை அடி பெயர்த்து இடு தொறும் அழுந்த,
நேர் பொரும் பரவைப் பிறழ் திரை தவழ்ந்து நெடும் தடம் திசைதொறும் நிமிரச்
சார்வு அரும் கடுவின் எயிறு உடைப் பகுவாய் அனந்தனும் தலை தடுமாற,
மூரி நீர் ஆடை இருநில மடந்தை முதுகு உளுக்குற்றனள் முரல.       5.4.94

கேடகத்தோடு, மழு, எழுச் சூலம், அங்குசம், கப்பணம், கிடுகோடு,
ஆடகச் சுடர்வாள், அயில், சிலை, குலிசம், முதலிய ஆயுதம் அனைத்தும்,
தாடகைக்கு இரட்டி எறுழ்வலி தழைத்த தகைமையர், தடவரை பொறுக்கும்
சூடகத் தடக்கைச் சுடுசினத்து, அடுபோர் அரக்கியர் தலைதொறும் சுமப்ப.       5.4.95

விரிதளிர், முகை, பூக் கொம்பு, அடை, முதல், வேர், பழம், இவை, மணி பொனால் வேய்ந்த
தரு உயர் சோலை திசை தொறும் கரியத் தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழத்
திருமகள் இருந்த திசை அறிந்திருந்தும், திகைப்பு உறு சிந்தையால், கெடுத்தது
ஒருமணி நேடும் பல்தலை அரவின், உழைதொறும் உழைதொறும் உலாவி.       5.4.96

அநுமன் இராவணனை நோக்குதல்

இனையது ஓர் தன்மை எறுழ்வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை,
அனையது ஓர் தன்மை அஞ்சனை சிறுவன் கண்டனன், அமைவுற நோக்கி,
'வினையமும், செயலும், மேல்விளை பொருளும், இவ் வழி விளங்கும்! 'என்று எண்ணி,
வனை கழல் இராமன் பெரும் பெயர் ஓதி, இருந்தனன் வந்து அயல் மறைந்தே.       5.4.97

இராவணன் அணுகலும் பிராட்டி அஞ்சுதலும்

ஆயிடை, அரக்கன், அரம்பையர் குழுவும் அல்லவும் வேறு அயல் அகல,
மேயினன் பெண்ணின் விளக்கு எனும் தகையாள் இருந்துழி; ஆண்டு அவள் வெருவிப்
போயின உயிரளாம் என நடுங்கிப் பொறி வரி எறுழ் வலிப் புகைக் கண்
காய் சின உழுவை தின்னிய வந்த கலையிளம் பிணை எனக் கரைந்தாள்.       5.4.98

இருவர் நிலையினையும் அநுமன் காண்டல்

கூசி ஆவி குலைவுறு வாளையும்
ஆசையால் உயிர் ஆசு அழிவானையும்
காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன்
ஊசல் ஆடல் ஒழிந்த உளத்தினான்.       5.4.99

அநுமன் பிராட்டியை வாழ்த்தல்

வாழி சானகி! வாழி இராகவன்!
வாழி நான்மறை! வாழியர் அந்தணர்!
வாழி நல்லறம்! என்று உற வாழ்த்தினான்
ஊழி தோறும் உயர்வுறும் கீர்த்தியான்.       5.4.100

இராவணன் பிராட்டியை இரத்தல் (5276-5289)

அவ்விடத்து அருகு எய்தி அரக்கன் தான்
'எவ்விடத்து எனக்கு இன் அருள் ஈவது
நொவ் விடக் குயிலே! நுவல்க 'என்றனன்
வெவ் விடத்தை அமுது என வேண்டுவான்.       5.4.101

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான்.       5.4.102

இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!       5.4.103

உலகம் மூன்றும் ஒருங்கு உடன் ஓம்பும் என்
அலகில் செல்வத்து அரசியல் ஆணையில்
திலகமே! உன் திறத்து அனங்கன் தரு
கலகம் அல்லது எளிமையும் காண்டியோ.       5.4.104

பூந்தண் வார் குழல் பொன் கொழுந்தே! புகழ்
ஏந்து செல்வம் இகழ்ந்தனை! இன் உயிர்க்
காந்தன் மாண்டிலன் காடு கடந்து போய்
வாய்ந்து வாழ்வது மானிடர் வாழ்வு அன்றோ?       5.4.105

நோற்கின்றார்களும் நுண்பொருள் நுண்ணிதில்
பார்க்கின்றாரும் பெறும் பயன் பார்த்தியேல்
வார்க் குன்றாம் முலை! என் சொல் மவுலியால்
ஏற்கின்றாரொடு உடன் உறை இன்பமால்.       5.4.106

பொருளும் யாழும் விளரியும் பூவையும்
மருளும் நாளும் மழலை வழங்குவாய்!
தெரிளும் நான்முகன் செய்தது உன் சிந்தையில்
அருளும் மின் மருங்கும் அரிது ஆக்கியோ?       5.4.107

ஈண்டு நாளும் இளமையும் என்று இவை
மாண்டு மாண்டு பிறிது உறும் மாலைய
வேண்டும் நாள் வெறிதே விளிந்தால் இனி
யாண்டு வாழ்வது? இடர் உழந்து ஆழ்தியோ?       5.4.108

இழவு எனக்கு உயிர் எய்தினும் எய்துக
குழை முகத்து நின் சிந்தனை கோடினால்
பழகி நிற்புறு பண்பு இயை காமத்தோடு
அழகினுக்கு இனி யார் உளர் ஆவரோ?       5.4.109

பெண்மையும் அழகும் பிறழா மனத்
திண்மையும் முதல் யாவையும் செய்யவாய்க்
கண்மையும் பொருந்திக் கருணைப்படா
வண்மை என்கொல்? சனகன் மடந்தையே!       5.4.110

வீட்டும் காலத்து அலறிய மெய்க்குரல்
கேட்டும் காண்டற்கு இருத்திகொல்? கிள்ளை நீ
நாட்டுங்கால் நெடு நல்லறத்தின் பயன்
ஊட்டுங் காலத்து இகழ்வது உறும் கொலோ?       5.4.111

தக்கது என் உயிர் வீடு உறத் தாழ்கிலாத்
தொக்க செல்வம் தொலையும்; ஒருத்தி நீ
புக்கு உயர்ந்தது எனும் புகழ் போக்கி வேறு
உக்கது என்னும் உறு பழி கோடியோ.       5.4.112

தேவர் தேவியர் சேவடி கைதொழும்
தாவு இல் மூவுலகின் தனி நாயகம்
மேவுகின்றது நுன்கண் விலக்கினை
ஏவர் ஏழையர் நின்னின்? இலங்கு இழாய்!       5.4.113

'குடிமை மூன்று உலகும் செயும் கொற்றத்து என்
அடிமை கோடி; அருளுதியால் 'எனா
முடியின் மீது முகிழ்த்து உயர் கையினன்
படியின் மேல் விழுந்தான் பழி பார்க்கலான்.       5.4.114

பிராட்டியின் மறுமாற்றம் (5290-5311)

காய்ந்தன சலாகை அன்ன உரை வந்து கதுவா முன்னம்
தீந்தன செவிகள்; உள்ளம் திரிந்தது; சிவந்த சோரி
பாய்ந்தன கண்கள்; ஒன்றும் பரிந்திலள் உயிர்க்கும்; பெண்மைக்கு
ஏய்ந்தன வல்ல வெய்ய மாற்றங்கள் இனைய சொன்னாள்.       5.4.115

மல்லொடு திரள்தோள் வஞ்சன் மனம் பிறிது ஆகும் வண்ணம்
'கல்லொடும் தொடர்ந்த நெஞ்சம் கற்பின்மேல் கண்டது உண்டோ?
இல்லொடும் தொடர்ந்த மாதர்க்கு ஏய்வன அல்ல வெய்ய
சொல் இது தெரியக் கேட்டி! துரும்பு! 'எனக் கனன்று சொன்னாள்.       5.4.116

மேருவை உருவ வேண்டின், விண் பிளந்து ஏகவேண்டின்
ஈர் எழு புவனம் யாவும் முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது; அறிந்திருந்து அறிவு இலாதாய்!
சீரிய அல்ல சொல்லித் தலை பத்தும் சிந்துவாயோ?       5.4.117

அஞ்சினை ஆதலால் அன்று ஆண்தகை அற்றம் நோக்கி,
வஞ்சனை மான் ஒன்று ஏவி, மாயையால் மறைத்து வைத்தாய்;
உஞ்சனை போதி ஆயின், விடுதி! உன் குலத்துக்கு எல்லாம்
நஞ்சினை எதிர்ந்த போது நோக்குமோ நினது நாட்டம்?       5.4.118

பத்து உள தலையும் தோளும் பல உள பகழி தூவும்
வித்தக வில்லினாற்குத் திருவிளையாடற்கு ஏற்ற
சித்திர இலக்கம் ஆகும்; அல்லது செருவில் ஏற்கும்
சத்தியை போலும்? மேல் நாள் சடாயுவால் தரையின் வீழ்ந்தாய்.       5.4.119

தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளும் நீர் வெள்ளம் சென்னி
ஏற்றவன் வாளால் வென்றாய், இன்று எனின் இறத்தி அன்றே!
நோற்ற நோன்பு, உடைய வாழ் நாள், வரம், இவை நுனித்த எல்லாம்,
கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்துக்கும் குறித்தது உண்டோ?       5.4.120

பெற்று உடை வாளும், நாளும், பிறந்து உடை உரனும், பின்னும்
மற்று உடை எவையும் தந்த மலரவன் முதலோர் வார்த்தை,
வில் தொடை இராமன் கோத்து விடுதலும், விலக்குண்டு, எல்லாம்
இற்று உடைந்து இறுதல் மெய்யே! விளக்கின் முன் இருள் உண்டாமோ?       5.4.121

குன்றுநீ எடுத்தநாள் தன் சேவடிக் கொழுந்தால் உன்னை
வென்றவன் புரங்கள் வேவத் தனிச் சரம் துரந்த மேரு
என் துணைக் கணவன் ஆற்றற்கு உரன் இலாது இற்று வீழ்ந்த
அன்று எழுந்து உயர்ந்த ஓசை கேட்டிலை போலும் அம்மா!       5.4.122

மலை எடுத்து எண்திசை காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும்நீ
சிலை எடுத்து இளையவன் நிற்கச் சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும் மகளிர்த் தாழ்தியோ?       5.4.123

ஏழை! நின் ஒளித்துறை இன்னது ஆம் என
ஆழி எம் கோம் மகன் அறிய வந்த நாள்
ஆழியும் இலங்கையும் அழியத் தாழுமோ?
ஊழியும் திரியும்; உன் உயிரொடு ஓயுமோ?       5.4.124

வெம் சின அரக்கரை விளித்து வீயுமோ?
வஞ்சனை நீசெய வள்ளல் சீற்றத்தான்
எஞ்சல் இல் உலகெலாம் எஞ்சும்! எஞ்சும்! என்று
அஞ்சுகின்றேன்; இதற்கு அறமும் சான்று அரோ!       5.4.125

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய்! புன்தொழில் விலக்க மேற்கொளாய்!
செங்கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலோ
எங்கள் நாயகனையும் நினைந்தது? ஏழை நீ!       5.4.126

மானுயர் இவர் என மனக் கொண்டாய் எனின்
கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்
தான் ஒரு மனிதனால்; தவத்துளார் எனில்
தேன் உயர் கொன்றையான் தன்மை தேர்தியால்!       5.4.127

இருவர் என்று இகழ்ந்தனை என்னின் யாண்டு எல்லை
ஒருவன் அன்றே உலகு அழிக்கும் ஊழியான்!
செரு வருங்கால் அவர் மேன்மை தேர்தியால்!
பொரு அரும் திரு இழந்து ஆயுள் பொன்றுவாய்!       5.4.128

பொன் கணான் தம்பி என்று இனைய போர்த் தொழில்
வில் கண் நாண் பொருத தோள் அவுணர் வேறு உளார்
நல் கணார் நல்லறம் துறந்த நாளினும்
இல் கணார் இறந்திலர் இறந்து நீங்கினார்.       5.4.129

பூ இலோன் ஆதியாகப் புலன்கள் பாம் நெறியில் போகாத்
தேவரோ, அவுணர் தாமோ, நிலைநின்று வினையில் தீர்ந்தார்?
ஏவர் மூவுலகின் செல்வம் எய்தினர்? இசையின், ஏழாய்!
பாவமோ? முன் நீ செய்த தருமமோ? தெரியப் பாராய்!       5.4.130

இப் பெரும் செல்வம் நின் கண் ஈந்தது, ஓர் ஈசன், யாண்டும்
அ பெரும் செல்வம் துய்ப்பான் நின்று மாதவத்தின் அன்றே?
ஒப்பு அரும் திருவும் நீங்கி, உறவொடும் உலக்க உன்னித்
தப்புதி அறத்தை, ஏழாய்! தருமத்தைக் காமியாயோ?       5.4.131

மறம் திறம்பாத தோலா வலியினர் எனினும் மாண்டார்
அறம் திறம்பினரும் மக்கட்கு அருள் திறம்பினரும் அன்றே?
பிறந்து இறந்து உழலும் பாசப் பிணக்கு உடைப் பிணியில் தீர்ந்தார்
துறந்து அரும் பகைகள் மூன்றும் துடைத்தவர் பிறர் யார்? சொல்லாய்!       5.4.132

தெனதமிழ் உரைத்தோன் முன்னாத் தீது தீர் முனிவர் யாரும்,
'புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்! நோற்கிலம்! புகுந்த போதே
கொன்று அருள்! உன்னால் அன்னார் குறைவது சரதம்! கோவே! '
என்றனர், யானே கேட்டேன், நீ அதற்கு இயைவ செய்தாய்.       5.4.133

உன்னையும் கேட்டு, மற்று, உன் ஊற்றமும், உடைய நாளும்,
பின்னை, இவ் அரக்கர் சேனைப் பெருமையும் முனிவர் பேணிச்
சொன்னபின், உங்கை மூக்கும், உம்பியர் தோளும், தாளும்,
சின்னபின்னங்கள் செய்த அதனை நீ சிந்தியாயோ?       5.4.134

ஆயிரம் தடக்கையால் நின் ஐந்நான்கு கரமும் பற்றி,
வாய் வழி குருதி சோரக் குத்தி, வான் சிறையில் வைத்த
தூயவன் வயிரத் தோள்கள் துணித்தவன் தொலைந்த மாற்றம்
நீ அறிந்திலையோ? நீதி நிலை அறிந்திலாத நீசா!       5.4.135

கடிக்கும் வல் அரவும் கேட்கும் மந்திரம்; களிக்கின்றோயை
'அடுக்கும், ஈது அடாது! 'என்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி,
இடிக்குநர் இல்லை; உள்ளார் எண்ணியது எண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது, முடிவு அன்றி முடிவது உண்டோ?       5.4.136

இராவணன் சினத்தல் (5312-5313)

என்ற அறத்து உரை கேட்டலும், இருபது நயனம்
மின் திறப்பன ஒத்தன; வெயில்விடு பகுவாய்
குன்று இறத் தழெித்து உரப்பின; குறிப்பது என்? காமத்
தின் திறத்தையும் கடந்தது சீற்றத்தின் தகைமை.       5.4.137

வளர்ந்த தாளினன், மாதிரம் அனைத்தையும் மறைவித்து
அளந்த தோளினன், அனல்சொரி கண்ணினன், 'இவளைப்
பிளந்து தின்பென்! 'என்று உடன்று நின்றனன், அடிபெயரான்,
கிளர்ந்த சீற்றமும் காதலும் எதிர் எதிர் கிடைப்ப.       5.4. 138

இராவணன் நிலை கண்ட அநுமன் நினைவு (5314-5315)

அன்னகாலையில் அநுமனும், 'அருந்ததிக் கற்பின்
என்னை ஆளுடை நாயகன் தேவியை என்முன்
சொன்ன நீசன் கை தொடுவதன்முன் துகைத்து உழக்கிப்
பின்னை, நின்றது செய்குவென்! ' என்பது பிடித்தான்.       5.4.139

'தனியன், நின்றனன் தலைபத்தும் கடிது உகத் தாக்கிப்
பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சிப்
புனித மா தவத்து அணங்கினைச் சுமந்தனன் போவென்
இனிதின் 'என்பதும் நினைந்து தன் கரம் பிசைந்து இருந்தான       5.4.140

சீற்றம் தணிந்து இராவணன் பேசுதல் (5316-5324)

ஆண்டு, அவ் வாள் அரக்கன் அகத்து அண்டத்தை அழிப்பான்
மூண்ட கால வெம் தீ என முற்றிய சீற்றம்
நீண்ட காம நீர் நீத்தத்தின் அவிவுறும் நிலையில்,
மீண்டு நின்று, ஒருதன்மையால், இவை இவை விளம்பும்.       5.4.141

கொல்வென் என்று உடன்றேன், உன்னைக் கொல்கிலென், குறித்துச் சொன்ன
சொல் அளவு; அவற்றுக்கு எல்லாம் காரணம் தெரியச் சொல்லின்,
ஒல்வது ஈது, ஒல்லாது ஈது, என்று எனக்கும் ஒன்று உலகத்து உண்டோ?
வெல்வதும் தோற்றல் தானும் விளையாட்டின் விளைந்த மேல்நாள்.       5.4.142

ஒன்று கேள் உரைக்க! நிற்கு ஓர் உயிர் என உரியோன் தன்னைக்
கொன்று கோள் இழைத்தால், நீ நின் உயிர் விடில் குற்றம் கூடும்,
என்றன் ஆர் உயிரும் நீங்கும் : என்பதை இயைய எண்ணி
அன்று நான் வஞ்சம் செய்தது; ஆர் எனக்கு அமரின் நேர்வார்?       5.4.143

மான் என்பது அறிந்து போன மானிடர் ஆவார் மீண்டு
யான் என்பது அறிந்தால் வாரார், ஏழைமை எண்ணி நோக்கல்
தேன் என்பது அறிந்த சொல்லாய்! தேவர்தாம் யாவரே எம்
கோன் என்பது அறிந்து பின்னைத் திறம்புவார், குறையின் அல்லால்?       5.4.144

வென்றோரும் இருப்ப, யார்க்கும் மேலவர் விளிவு இலாதோர்
என்றோரும் இருப்ப அன்றே இந்திரன் ஏவல் செய்ய
ஒன்றோ இவ் உலகம் மூன்றும் ஆள்கின்ற ஒருவன் யானே,
மென் தோளாய்! இதற்கு வேறு ஓர் காரணம் விரிப்பது உண்டோ?       5.4.145

மூவரும் தேவர் தாமும் முரண் உக முற்றும் கொற்றம்,
பாவை! நின் பொருட்டினால் ஓர் பழி பெறப் பயன்தீர் நோன்பின்
ஆ இயல் மனிதர் தம்மை அடுகிலேன்; அவரை ஈண்டக்
கூவிநின்று ஏவல் கொள்வென், காணுதி! குதலைச் சொல்லாய்!       5.4.146

சிற்றியல் சிறுமை ஆற்றல் சிறுதொழில் மனிதரோடே
முற்றியது ஆய வீர முனிவு என்கண் முளையாதேனும்,
இற்றை இப்பகலில் நொய்தின் இருவரை ஒருகையாலே
பற்றினென் கொணரும் தன்மை காணுதி! பழிப்பு இலாதாய்!       5.4.147

பதவு இயல் மனிதரேனும், பைந்தொடி! நின்னைத் தந்த
உதவியை உணர நோக்கின், உயிர் கொலைக்கு உரியர் அல்லர்
சிதைவுறல் அவர்க்கு வேண்டிச் செய்தி நீ தேர்ந்தது இன்றி;
இதம் உனக்கு ஈதே ஆகில், இயற்றுவல்! காண்டி இன்னும்!       5.4.148

பள்ள நீர் அயோத்தி நண்ணிப் பரதனே முதலினோர் ஆண்டு
உள்ளவர் தம்மை எல்லாம் உயிர் குடித்து, ஊழித் தீயின்
வெள்ள நீர் மிதிலையோரை வேர் அறுத்து, எளிதின் எய்திக்
கொள்வென் நின் உயிரும்! என்னை அறிந்திலை! குறைந்த நாேளாய்!       5.4.149

இராவணன் பிராட்டியை அச்சுறுத்துதல்

ஈது உரைத்து அழன்று பொங்கி, எரிகதிர் வாளை நோக்கித்
'தீது உயிர்க்கு இழைக்கும் நாளும் திங்கள் ஓர் இரண்டில் தேய்ந்தது!
ஆதலில், பின்னை நீயே அறிந்தவாறு அறிதி! 'என்னாப்
போது அரிக் கண்ணினாளை அகத்துவைத்து, உரப்பிப் போனான்.       5.4.150

இராவணன் காவல் அரக்கியர்க்குக் கட்டளையிட்டுச் செல்லல்

'அஞ்சுவித்தானும், ஒன்றால் அறிவுறத் தேற்றியானும்,
வஞ்சியின் செவ்வியாளை வசித்து, என்பால் வருவீர்! அன்றேல்,
நஞ்சு உமக்கு ஆவென்! 'என்னா, நகை இலா முகத்துப் பேழ்வாய்
வெம் சினத்து அரக்கிமார்க்கு வேறு வேறு உரைத்துப் போனான்.       5.4.151

காவலரக்கியர் பிராட்டியைக் கனன்று கூறல் (5327-5331)

போயினன் அரக்கன் பின்னைப் பொங்கு அரா நுங்கிக் கான்ற
தூய வெண் மதியம் ஒத்த தோகையைத் தொடர்ந்து சுற்றித்
தீய வல் அரக்கிமார்கள் தழெித்து இழித்து உரப்பிச் சிந்தை
மேயின வண்ணம் எல்லாம் விளம்புவான் உடன்று மிக்கார்.       5.4.152

முன்முன் நின்றார் கண் கனல் சிந்த முடுகு உற்றார்,
மின்மின் என்னும் சூலமும் வாளும் மிசை ஓச்சிக்
'கொல்மின்! கொல்மின்! கொன்று குறைத்துக் குடர் ஆரத்
தின்மின்! தின்மின்! 'என்று தழெித்தார் சிலர் எல்லாம       5.4.153

'வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்,
ஐயன், வேதம் ஆயிரம் வல்லான், அறிவாளன்,
மெய் அன்பு உன்பால் வைத்துளது அல்லால், வினை வென்றோன்
செய்யும் புன்மை யாதுகொல்? ' என்றார் சிலர் எல்லாம்.       5.4.154

'மண்ணில் தீய மானுயர்த் தத்தம் வழியோடும்,
பெண்ணில் தீயோய்! நின்முதல் மாயும் பிணிசெய்தாய்!
புண்ணில் கோல் இட்டால் அன சொல்லிப் பொதுநோக்காது
எண்ணில், காணாய் மெய்ம்மையை! ' என்றார் சிலர் எல்லாம்.       5.4.155

'புக்க வழிக்கும் போந்த வழிக்கும் புகை வெம் தீ
ஒக்க விதைப்பான் உற்றனை அன்றோ, உணர்வு இல்லாய்!
இக்கணம் இற்றாய்! உன் இனம் எல்லாம் இனி வாழா!
சிக்க உரைத்தேம்! 'என்று தழெித்தார் சிலர் எல்லாம்.       5.4.156

பிராட்டி வருந்துதல்

கொல்வான் உற்றோர் பெற்றியும், 'யாதும் குறையாதோன்
வெல்வான் நம் கோன்! தின்னுமின்! வம்! 'என்பவர் மெய்யும்,
வல்வாய் வெய்யோன் ஏவலும், எல்லாம் மனம் வைத்தாள்,
நல்வாய் நல்லாள், கண்கள் கலுழ்ந்தே நகுகின்றாள்.       5.4.157

திரிசடை சொல்லால் பிராட்டி ஆறுதலடைதல்

இன்னோர் அன்ன எய்திய காலத்து, இடை நின்றாள்,
'முன்னே சொன்னேன் கண்ட கனாவின் முடிவு, அம்மா!
பின்னே, வாளா பேதுறுவீரேல், பிழை! 'என்றாள்
'அன்னே! நன்று! 'என்றாள், அவர் எல்லாம் அவிவு உற்றார்.       5.4.158

திரிசடை சொல்லால் காவலரக்கியர் அடங்குதல்

அறிந்தார் அன்ன முச்சடை என்பாள் அது சொல்லப்
பிறிந்தார் சீற்றம், மன்னனை அஞ்சிப் பிறிகில்லார்,
செறிந்தார் ஆய தீவினை அன்னார், தறெல் எண்ணார்,
நெறிந்து ஆர் ஓதிப் பேதையும் ஆவி நிலை நின்றாள்.       5.4.159
--------------

5.5 உருக் காட்டு படலம் (5335 -5452 )

அநுமன் விஞ்சையால் காவலரக்கியர் உறங்குதல்

'காண்டற்கு ஒத்த காலமும் ஈதே : தறெு காவல்
தூண்டற்கு ஒத்த சிந்தையினாரும் துயில்கில்லார் :
வேண்டத் துஞ்சார் 'என்று, ஒரு விஞ்சை வினை செய்தான்;
மாண்டு அற்றார் ஆம் என்றிட அன்னார் மயர்வு உற்றார்.       5.5.1

பிராட்டி துயர்நிலைக் கிளவி (5336-5343)

துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்
நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்
அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்
எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.       5.5.2

கருமேகம் நெடும் கடல் கா அனையான்
தருமே தமியேன் தனது ஆர் உயிர்தான்?
உரும் ஏறு உறழ் வெம் சிலை நாண் ஒலிதான்
வருமே? உரையாய்! வலி ஆர் விதியே!       5.5.3

கல்லா மதியே! கதிர் வாள் நிலவே!
செல்லா இரவே! சிறுகா இருளே!
எல்லாம் எனையே முனிவீர் நினையா
வில்லாளனை யாதும் விளித்திலிரோ?           5.5.4

தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர் : எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனான் உடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ?            5.5.5

வாராது ஒழியான் எனும் வன்மையினால்
ஓர் ஆயிரம் கோடி இடர்க்கு உடைவேன் :
தீரா ஒரு நாள் வலி; சேவகனே!
நாராயணனே! தனி நாயகனே!       5.5.6

தரு ஒன்றிய கான் அடைவாய் 'தவிர்நீ :
வருவென் சில நாளினில் : மாநகர்வாய்
இரு! 'என்றனை; இன் அருள்தான் இதுவோ?
ஒருவென் தனி ஆவியை உண்ணுதியோ?       5.5.7

பேணும் உணர்வே! உயிரே! பெருநாள்
நாண் இன்று உழல்வீர் தனிநாயகனைக்
காணும் துணையும் கழிவீரலிர் நான்
பூணும் பழியோடு பொருந்துவதோ?       5.5.8

முடியா முடி மன்னன் முடிந்திடவும்
படி ஏழும் நெடும் துயர் பாவிடவும்
மடியான் உடன் வந்து வனம் புகுதும்
கொடியான் வரும் என்று குலாவுவதோ?       5.5.9

பிராட்டி இறக்கத் துணிதல் (5344-5354)

என்று என்று உயிர் விம்மி இருந்து அழிவாள்
மின் துன்னும் மருங்குல் விளங்கு இழையாள்
'ஒன்று என் உயிர் உண்டு எனின் உண்டு இடர் : யான்
பொன்றும் பொழுதே புகழ் பூணும் 'எனா.       5.5.10

பொறை இருந்து ஆற்றி என் உயிரும் போற்றினேன்
அறை இரும் கழலவன் காணும் ஆசையால் :
நிறை இரும் பல்பகல் நிருதர் நீள் நகர்ச்
சிறை இருந்தேனையும் புனிதன் தீண்டுமோ?       5.5.11

உன்னினர் பிறர் என உணர்ந்தும் உய்ந்து அவர்
சொன்னன சொன்னன செவியில் தூங்கவும்
மன் உயிர் காத்து இரும் காலம் வைகினேன் :
என்னின் வேறு அரக்கியர் யாண்டையார் கொலோ?       5.5.12

சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன்!
நல் பிறப்பு உடைமையும் நாணும் நன்று அரோ!
கற்புடை மடந்தையர் கதை உேளார்கள் தாம்
இல் பிரிந்து உய்ந்தவர் யாவர் யான் அலால்?       5.5.13

பிறர்மனை எய்திய பெண்ணைப் பேணுதல்
திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்
புறன் அலர் அவன் உறப் பொழுது போக்கி யான்
அறன் அலது இயற்றி வேறு என் கொண்டு ஆற்றுகேன்?       5.5.14

எப்பொழுது இப் பெரும் பழியின் எய்தினேன்
அப்பொழுதே உயிர் துறக்கும் ஆணையேன் :
ஒப்பு அரும் பெரு மறு உலகம் ஓத யான்
துப்பு அழிந்து உய்வது துறக்கம் துன்னவோ?       5.5.15

அன்பு அழி சிந்தையர் ஆய ஆடவர்
வன்பழி சுமக்கினும் சுமக்க : வான் உயர்
துன்பு அழி பெரும் புகழ்க் குலத்துள் தோன்றினேன்
என் பழி துடைப்பவர் என்னின் யாவரே?       5.5.16

வஞ்சனை மானின் பின் மன்னைப் போக்கி என்
மஞ்சனை வைது பின் வழிக்கொள்வாய் எனா
நஞ்சு அனையான் அகம் புகுந்த நங்கை யான்
உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ?       5.5.17

வல் இயல் மறவர் தம் வருக்கம் மாசு அற
வெல்லினும் வெல்க போர் விளிந்து வீடுக :
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்
சொல்லிய என்பழி அவரைச் சுற்றுமோ?       5.5.18

வருந்தல் இல் மானம் மா அனைய மாட்சியர்
பெரும் தவ மடந்தையர் முன்பு பேதையேன்
'கரும் தனி முகிலினைப் பிரிந்து கள்வர் ஊர்
இருந்தவள் இவள்! 'என ஏச நிற்பெனோ?       5.5.19

அற்புதன் அரக்கர்தம் வருக்கம் ஆசு அற
வில் பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள்
'இல் புகத் தக்கலை! 'என்னின் யான் உடைக்
கற்பினை எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்?       5.5.20

பிராட்டி மாதவிச் சூழலடைதல்

'ஆதலால் இறத்தலே அறத்தின் ஆறு! 'எனாச்
'சாதல் காப்பவரும் என் தவத்தில் சாம்பினார்;
ஈது அலாது இடமும் வேறு இல்லை 'என்று ஒரு
போது உலாம் மாதவிப் பொதும்பர் எய்தினாள்.       5.5.21

பிராட்டி உயிரைவிட முயலுதல்

எய்தினள் பின்னும் எண்ணாத எண்ணி 'ஈங்கு
உய்திறம் இல்லை! 'என்று ஒருப்பட்டு ஆங்கு ஒரு
கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும் ஏல்வையில் தவத்தின் பெற்றியால்.       5.5.22

அநுமன் தன்னை இராமதூதன் என்று தெரிவித்தல் (5357-5358)

கண்டனன் அநுமனும் : கருத்தும் எண்ணினான் :
கொண்டனன் துணுக்கம் : மெய்தீண்டக் கூசுவான் :
'அண்டர் நாயகன் அருள்தூதன் யான்! 'எனாத்
தொண்டை வாய் மயிலினைத் தொழுது தோன்றினான்.       5.5.23

அடைந்தனென் அடியனேன்; இராமன் ஆணையால்
குடைந்து உலகு அனைத்தையும் நாடும் கொட்பினால்
மிடைந்தவர் உலப்பிலர்; தவத்தை மேவலால்
மடந்தை! நின் சேவடி வந்து நோக்கினேன்.       5.5.24

இராமன் வராமைக்குக் காரணம் கூறல்

ஈண்டு நீ இருந்ததை இடரின் வைகுறும்
ஆண்தகை அறிந்திலன் : அதற்குக் காரணம்
வேண்டுமே? அரக்கர்தம் வருக்கம் வேரொடு
மாண்டில ஈது அலால் மாறு வேறு உண்டோ?       5.5.25

அநுமன் தான் இராமதூதனே, ஐயுறவேண்டா எனல்

'ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்
மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;
கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!
நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! 'என்றான்.       5.5.26

பிராட்டி அநுமனைத் தெளிதல்

என்று அவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் முனிவும் எய்தி,
'நின்றவன் நிருதன் அல்லன் : நெறி நின்று பொறிகள் ஐந்தும்
வென்றவன் : அல்லன் ஆகில், விண்ணவன் ஆதல் வேண்டும் :
நன்று உணர்வு : உரையும் தூயன் : நவை இலன்போலும்! 'என்னா.       5.5.27

பிராட்டி மகிழ்தல்

அரக்கனே ஆக : வேறு ஓர் அமரனே ஆக : அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக : கொடுமை ஆக :
இரக்கமே ஆக : வந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி
உருக்கினன் உணர்வைத், தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?       5.5.28

பிராட்டி அநுமனை வினவுதல்

என நினைத்து எய்த நோக்கி, 'இரங்கும் என் உள்ளம் : கள்ளம்
மனன் அகத்து உடையர் ஆய வஞ்சகர் மாற்றம் அல்லன் :
நினைவு உடைச் சொற்கள் கண்ணீர் நிலம்புகப் புலம்பா நின்றான் :
வினவுதற்கு உரியன் என்னா, 'வீர! நீ யாவன்? என்றாள்.       5.5.29

அநுமன் தன்வரலாறு விரித்தல் (5364-5371)

ஆயசொல் தலைமேல் கொண்ட அம் கையன், 'அன்னை! நின்னைத்
தூயவன் பிரிந்த பின்பு, தேடிய துணைவன், தொல்லைக்
காய்கதிர்ச் செல்வன் மைந்தன், கவிக் குலம் அவற்றுக்கு எல்லாம்
நாயகன், சுக்கிரீவன் என்று உளன், நவையில் தீர்ந்தான். '       5.5.30

மற்றவன் முன்னோன் வாலி, இராவணன் வலி தன் வாலின்
இற்று உகக் கட்டி, எட்டுத் திசையினும் எழுந்து பாய்ந்த
வெற்றியன், தேவர் வேண்ட, வேலையை விலங்கல் மத்தில்
சுற்றிய நாகம் தேய அமுது எழக் கடைந்த தோளான்.       5.5.31

அன்னவன் தன்னை உம்கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கிப்,
பின்னவற்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான்; எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன், வானின்
நல்நெடும் காலின் மைந்தன், நாமமும் அநுமன் என்பேன்.       5.5.32

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன, உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப, வேலை தனித்தனி கடக்கும் தாள,
குழுவின, உம் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி
வழு இல செய்தற்கு ஒத்த வானரம், வானின் நீண்ட.       5.5.33

துப்பு உறு பரவை ஏழும், சூழ்ந்த பார் ஏழும், ஆழ்ந்த
ஒப்பு உறு நாகர் நாடும், உம்பர்நின்று இம்பர்காறும்,
இப்புறம் தேடி நின்னை எதிர்ந்தில என்னின், அண்டத்து
அப்புறம் போயும் தேட அவதியின் அமைந்து போன.       5.5.34

புன்தொழில் அரக்கன் கொண்டு போந்த நாள், பொதிந்து தூசில்
குன்றின் எம் மருங்கின் இட்ட அணிகலக் குறியினாலே,
வென்றியான் அடியேன் தன்னை வேறு கொண்டு இருந்து கூறித்
'தனெ்திசைச் சேறி! 'என்றான் : அவன் அருள் சிதைவது ஆமோ?       5.5.35

கொற்றவற்கு ஆண்டுக் காட்டிக் கொடுத்தபோது அடுத்த தன்மை
பெற்றியின் உணர்தற் பாற்றோ? உயிர்நிலை பிறிதும் உண்டோ
இற்றைநாள் அளவும்? அன்னா! அன்று நீ இழித்து நீத்த
மற்றை நல் அணிகள் காண் உன் மங்கலம் காத்த மன்னோ!       5.5.36

'ஆயவன் தன்மை நிற்க அங்கதன், வாலி மைந்தன்,
ஏயவன் தனெ்பால், வெள்ளம் இரண்டினோடு எழுந்து சேனை
மேயினன் படர்ந்து, தீர வினையவன் விடுத்தான் என்னைப்
பாய்திரை இலங்கை மூதூர்க்கு ' என்றனன் பழியை வென்றான்.       5.5.37

இராமபிரான் திருமேனிநிலை கூறுக எனப் பிராட்டி அநுமனை வேண்டுதல்

எய்தின உரைத்தலோடும், எழுந்து பேர் உவகை ஏற,
வெய்து உற ஒடுங்கும் மேனி வான் உற விம்மி ஓங்க,
'உய்தல் வந்து உற்றதோ? 'என்று அருவிநீர் ஒழுகு கண்ணாள்,
'அய்ய! சொல்! அனையன் மேனி எப்படித்து? அறிவி! 'என்றாள்.       5.5.38

இராமபிரான் திருமேனியழகை அடிமுதல் முடியீறாக அநுமன் கூறல் (5373-5393)

'படி எடுத்து உரைத்துக் காட்டும் படித்து அன்று : படிவம், பண்பின்
முடிவு உள உவமைக்கு எல்லாம் : இலக்கணம், உரைக்கின் முந்தா :
துடி இடை! அடையாளத்தின் தொடர்வையே தொடர்தி! 'என்னா,
அடிமுதல் முடி ஈறாக அறிவுற அநுமன் சொல்வான்.       5.5.39

திருவடிச் செவ்வி

சேயிதழ்த் தாமரை என்று சேண் உேளார்
ஏயினர்; அதன்துணை எளியது இல்லையால்
நாயகன் திருவடி குறித்து நாட்டுறின்
பாய்திரைப் பவழமும் குவளைப் பண்பிற்றால்.            5.5.40

திருவடி விரல் செவ்வி

தளம்கெழு கற்பக முகிழும் தண்துறை
இளம்கொடிப் பவழமும் கிடக்க : என் அவை?
துளங்கு ஒளி விரற்கு எதிர் உதிக்கும் சூரியன்
இளம்கதிர் ஒக்கினும் ஒக்கும் ஏந்திழாய்!            5.5.41

திருவடி விரல்களின் நகச் செவ்வி

சிறியவும் பெரியவும் ஆகித் திங்கேளா
மறு இல பத்து உள அல்ல மற்று இனி
எறிசுடர் வயிரமோ திரட்சி எய்தில
அறிகிலென் உகிர்க்கு யான் உவமை ஆவன.            5.5.42

மீட்டும் திருவடிச் செவ்வி

பொருந்தின நிலனொடு போந்து கான் இடை
வருந்தின எனின் அது நூலை மாறுகொண்டு
இருந்தது; நின்றது புவனம் யாவையும்
ஒருங்கு உடன் புணர்வன; உணர்த்தற் பாலதோ?            5.5.43

கணைக்கால் செவ்வி

தாங்கு அணைப் பணிலமும் வளையும் தாங்கும் நீர்
வீங்கு அணைப் பணிமிசை மேகம் அன்னவன்
பூங்கணைக்காற்கு ஒரு பரிசுதான் பொரு
ஆம் கணைக்கு ஆவமோ ஆவது? அன்னையே!            5.5.44

தொடைகளின் செவ்வி

அறம் கிளர் பறவையின் அரசன் ஆடு எழில்
பிறங்கு எருத்து அணைவன பெயரும் பொற்பு உடை
மறம் கிளர் மதகரிக் கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை இவ் உலகில் கூடுமோ?            5.5.45

திருவுந்தியின் செவ்வி

வலம் சுழித்து ஒழுகு நீர் வழங்கு கங்கையின்
பொலம் சுழி என்றலும் புன்மை பூவொடு
நிலம் சுழித்து எழும் மணி உந்தி நேர் இனி
இலஞ்சியும் போலும் வேறு உவமை யாண்டு அரோ.            5.5.46

திருமார்பின் செவ்வி

பொரு அரு மரகதப் பொலம் கொள் மால்வரை
வெரு உற விரிந்து உயர் விலங்கல் ஆகத்தைப்
பிரிவு அற நோற்றனள் என்னில் பின்னை அத்
திருவினில் திரு உளார் யாவர்? தெய்வமே!            5.5.47

கைத்தலங்களின் செவ்வி

நீடுறு கீழ்த்திசை நின்ற யானையின்
கோள்துறு கரம் எனச் சிறிது கூறலாம்
தோடு உறும் மலர் எனச் சுரும்பு சுற்று அறாத்
தாள்துறு தடக்கை வேறு உவமை சாலுமோ?            5.5.48

கைந் நகங்களின் செவ்வி

பச்சிலைத் தாமரை பகல் கண்டால் அன
கைச்செறி முகிழ் உகிர் கனகன் என்பவன்
வச்சிர யாக்கையை வகிர்ந்த வன் தொழில்
நிச்சயம் அன்று எனின் ஐயம் நீக்குமே.            5.5.49

திருப் புயங்களின் செவ்வி

திரண்டில ஒளியில திருவின் சேர்வில
முரண்தரு மேருவின் சிலையின் மூரிநாண்
புரண்டில புகழ் இல பொருப்பு என்று ஒன்றுபோன்று
இரண்டு இல புயங்களுக்கு உவமை ஏற்குமோ?                  5.5.50

திருமிடற்றின் செவ்வி

கடல்படு பணிலமும், கன்னிப் பூகமும்,
மிடற்றினுக்கு உவமை என்று உரைக்கும் வெள்ளியோர்க்கு
உடன்பட ஒண்ணுமோ? உரகப் பள்ளியான்
இடத்து உறை சங்கம் ஒன்று இருக்க, எங்களால்.            5.5.51

திருமுகச் செவ்வி

அண்ணல்தன் திருமுகம் கமலம் ஆமெனில்
கண்ணினுக்கு உவமை வேறு யாது காட்டுகேன்
தண்மதி ஆம் என உரைக்கத் தக்கதோ
வெண்மதி பொலிந்தது மெலிந்து தேயுமால்.            5.5.52

திருவாயின் செவ்வி

'ஆரமும் அகிலும் நீவி அகன்ற தோள் அமலன் செவ்வாய்
நாரம் உண்டு அலர்ந்த செங்கேழ் நளினம் 'என்று உரைக்க நாணும்;
ஈரமுண்டு அமுதம் ஊறும் இன்னுரை இயம்பாதேனும்,
மூரல் வெண்முறுவல் பூவாப் பவழமோ மொழியற்பாற்றே?       5.5.53

பற்களின் செவ்வி

முத்தம் கொல்லோ? முழுநிலவின் முறியின் திறனோ? முறை அமுதத்
தொத்தின் துள்ளி வெள்ளி இனம் தொடுத்த கொல்லோ? துறை அறத்தின்
வித்தின் முளைத்த அங்குரம்கொல்? வேறே சிலகொல்? மெய்ம்முகிழ்த்த
தொத்தின் தொகைகொல்? யாது என்று பல்லுக்கு உவமை சொல்லுகேன்!       5.5.54

திருமூக்கின் செவ்வி

எள்ளா நிலத்து இந்திரநீலத்து எழுந்த கொழுந்து மரகதத்தின்
விள்ளா முழுமா நிழல்பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோ?
தள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்
கொள்ளா வள்ளல் திருமூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆமோ?       5.5.55

திருப்புருவச் சிறப்பு

பனிக் கல் சுரத்துக் கரன் முதலோர் கவந்தப் படையும், பல்பேயும்,
தனிக் கைச்சிலையும், வானவரும், முனிவர் குழுவும், தனி அறமும்,
'இனிக் கட்டு அழிந்தது அரக்கர்குலம்! ' என்று சுருதி ஈர் இரண்டும்
குனிக்கக் குனித்த புருவத்துக்கு உவமை நீயே கோடியால்!       5.5.56

திருநெற்றியின் பெற்றி

வரும் நாள் தோன்றும் தனி மறுவும் வளர்வும் தேய்வும் வாள் அரவம்
ஒருநாள் கவ்வும் உறுகோளும் இறப்பும் பிறப்பும் ஒழிவு உற்ற
இருநால் பகலின் இலங்குமதி அலங்கல் இருளின் எழில் நிழல் கீழ்ப்
பெருநாள் நிற்பின் அவன் நெற்றிப் பெற்றித்தாகப் பெறும் மன்னோ!       5.5.57

திருக்குழலின் செவ்வி

நீண்டு குழன்று நெய்த்து இருண்டு நெறிந்து செறிந்து நெடு நீலம்
பூண்டு புரிந்து சரிந்து கடை சுருண்டு புகையும் நறும் பூவும்
வேண்டும் அல்ல எனத் தெய்வ வெறியே கமழும் நறும்குஞ்சி
ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ?       5.5.58

நடையின் செவ்வி

புல்லல் ஏற்ற திருமகளும் பூவும் பொருந்தப் புவி ஏழின்
எல்லை ஏற்ற நெடுஞ்செல்வம் எதிர்ந்த ஞான்றும், அஃது இன்றி,
அல்லல் ஏற்ற கானகத்தும் அழியா நடையை இழிவு ஆன
மல்லல் ஏற்றின் உளது என்றால், மத்தயானை வருந்தாதோ?       5.5.59

இராமபிரான் கூறிய அடையாளங்களை அநுமன் உரைக்கத் தொடங்குதல்

என்ன மொழிய, அம் மொழி கேட்டு எரியின் இட்ட மெழுகு என்னத்
தன்னை அறியாது அழிவாளைத் தரையின் வணங்கி, 'நாயகனார்
சொன்ன குறி உண்டு : அடையாளச் சொல்லும் உளவால் : தொழுதகைய
அன்னநடையாய்! கேட்க! 'என அறிவன் அறைவான் ஆயினான்.       5.5.60

அநுமன் கூறிய அடையாள உரைகள் (5395-5397)

'நடத்தல் அரிது ஆகும் நெறி : நாள்கள் சில : தாயர்க்கு
அடுத்த பணி செய்து இவண் இருத்தி! 'என, அச்சுற்று,
உடுத்த துகிலோடும், உயிர் உக்க உடலோடும்,
எடுத்த முனிவோடும், அயல் நின்றதும் இசைப்பாய்!       5.5.61

நீண்ட முடி வேந்தன் அருள் ஏந்தி நிறைசெல்வம்
பூண்டு அதனை நீங்கி நெறி போதல் உறு நாளின்
ஆண்டு அந் நகர் ஆரையொடு வாயில் அகலாமுன்
'யாண்டையது கான்? 'என இசைத்ததும் இசைப்பாய்.       5.5.62

எள் அரிய தேர்தரு சுமந்திரன் 'இசைப்பாய்
வள்ளல் மொழி! வாசகம் 'எனத் துயர் மறந்தாள்
'கிள்ளையொடு பூவைகள் வளர்த்தல் கிள! 'என்னும்
பிள்ளை உரையின் திறம் உணர்த்துதி பெயர்த்தும்.       5.5.63

அநுமன் திருவாழி காட்டுதல்

'மீட்டும் உரை வேண்டுவன இல்லை 'என மெய் பேர்
தீட்டியது தீட்டு அரிய செய்கையது செவ்வே :
'நீட்டு இது! 'என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஒர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள்.       5.5.64

ஆழிகண்ட பிராட்டிநிலை (5399-5400)

இறந்தவர் பிறந்தபயன் எய்தினர்கொல் என்கோ?
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ?
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்ததுகொல் என்கோ?
திறம் தெரிவது என்னைகொல்? இந் நல் நுதலி செய்கை!       5.5.65

இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்,
பழம் தனம் இழந்தன படைத்தவரும் ஒத்தாள்,
குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்,
உழந்து விழி பெற்றது ஒர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்.       5.5.66

திருவாழி பெற்ற பிராட்டிநிலை (5401-5404)

வாங்கினள் : முலைக்குவையில் வைத்தனள் : சிரத்தால்
தாங்கினள் : மலர்க்கண் மிசை ஒத்தினள் : தடம்தோள்
வீங்கினள், மெலிந்தனள் : குளிர்ந்தனள், வெதுப்போடு
ஏங்கினள் : உயிர்த்தனள் : இது இன்னது எனல் ஆமே?       5.5.67

மோக்கும் முலை வைத்து உற முயங்கும் ஒளிர் நல் நீர்
நீக்கி நிறை கண் இணை ததும்ப நெடு நீள
நோக்கும் நுவலக் கருதும் ஒன்றும் நுவல்கில்லாள்
மேக்கு நிமிர் விம்மலள் விழுங்கலுறுகின்றாள்.       5.5.68

நீண்ட விழி நேரிழை தன் மின்னின் நிறம் எல்லாம்
பூண்டது ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம் அம்மா!
ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம்
தீண்டு அளவில் வேதிகைசெய் தெய்வமணி கொல்லோ?       5.5.69

இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும்
அருந்தும் அமுது ஆகியது : அறத்தவரை அண்மும்
விருந்தும் எனல் ஆகியது : வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது; வாழி! மணி ஆழி.       5.5.70

பிராட்டி அநுமனைப் பாராட்டுதல் (5405-5406)

இத்தகையள் ஆகி உயிர் ஏம் உற விளங்கும்
முத்த நகையாள் விழியின் ஆலி முலைமுன்றில்
தத்தி உக மென்குதலை தள்ள 'உயிர் தந்தாய்!
உத்தம! 'எனா இனைய வாசகம் உரைத்தாள்.       5.5.71

'மும்மை ஆம் உலகம் தந்த முதல்வற்கும் முதல்வன் தூது ஆய்ச்
செம்மையால் உயிர் தந்தாய்க்குச் செயல் என்னால் எளியது உண்டே?
அம்மை ஆய் அப்பன் ஆய அத்தனே! அருளின் வாழ்வே!
இம்மையே மறுமை தானும் நல்கினை இசையோடு 'என்றாள்.       5.5.72

பிராட்டி அநுமனை வாழ்த்தல்

'பாழிய பணைத்தோள் வீர! துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய! வள்ளலே! யான் மறு இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும் யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவு உற்ற ஞான்றும், இன்று என இருத்தி! 'என்றாள்.       5.5.73

பிராட்டி அநுமனிடம் இராமபிரானைப் பற்றி வினவுதல்

மீண்டு உரை விளம்பல் உற்றாள், 'விழுமிய குணத்தோய்! வீரன்
யாண்டையான் இளவலோடும்? எவ் வழி எய்திற்று உன்னை?
ஆண்தகை, அடியேன் தன்மை யார் சொல அறிந்தது? 'என்றாள்;
தூண் திரண்டு அனைய தோளான் உற்றது சொல்லல் உற்றான்.       5.5.74

அநுமன் இராமனது வரலாறு விரித்தல் (5409-5429)

உழைக் குலத்து இயையும் மாய உருவுகொண்டு உறுவல் செய்தான்,
மழைக் கருநிறத்து மாய அரக்கன், மாரீசன் என்பான்,
இழைத் தட மார்பத்து அண்ணல் எய்யப் போய், வையம் சேர்வான்,
அழைத்த வல் ஓசை உன்னை மயக்கியது; அரக்கன் சொல்லால்.       5.5.75

'இக்குரல் இளவல் கேளாது ஒழிக! 'என இறைவன் இட்டான்
மெய்க்குரல் சாபம் : பின்னை, விளைந்தது விதியின் வெம்மை :
'பொய்க்குரல் இன்று! பொல்லாப் பொருள் பின்பு பயக்கும்! 'என்பான்,
கை குரல் வரிவில்லானும், இளையவன் வரவு கண்டான்.       5.5.76

கண்டபின், இளைய வீரன் முகத்தினால் கருத்தை ஓர்ந்த
புண்டரிகக் கணானும் உற்றது புகலக் கேட்டான் :
வண்டு உறை சாலை வந்தான், நின் திருவடிவு காணான்,
உண்டு உயிர், இருந்தான் : இன்னல் உழத்தற்கே ஏது அன்றோ?       5.5.77

தேண்டி நேர் கண்டேன் வாழி! தீது இலன் எம் கோன்; ஆகம்
பூண்ட மெய் உயிரே நீ! அப் பொய் உயிர் போயே நின்ற
ஆண்தகை நெஞ்சில் நின்றும் அகன்றிலை : அழிவு உண்டாமோ?
ஈண்டு நீ இருந்தாய், ஆண்டு அங்கு எவ் உயிர் விடும் இராமன்?       5.5.78

அந்நிலை ஆய அண்ணல், ஆண்டு நின்று, அன்னை! நின்னைத்
துன்னரும் கானும் யாறும் மலைகளும் தொடர்ந்து நாடி,
இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்,
தன் உயிர் புகழ்க்கு விற்ற சடாயுவை வந்து சார்ந்தான்.       5.5.79

வந்து அவன்மேனி நோக்கி, வான் உயர் துயரின் வைகி,
'எந்தை! நீ உற்ற தன்மை இயம்பு! 'என, இலங்கைவேந்தன்,
சுந்தரி! நின்னைச் செய்த வஞ்சனை சொல்லச் சொல்ல,
வெந்தன உலகம் என்ன, நிமிர்ந்தது சீற்ற வெம் தீ.       5.5.80

சீறி, 'இவ் உலகம் மூன்றும் தீந்து உகச் சின வாய் அம்பால்
நூறுவென்! 'என்று கைவில் நோக்கிய காலை, 'வெய்தின்,
ஊறு ஒரு சிறியோன் செய்ய முனிதியோ உலகை? உள்ளம்
ஆறுதி! 'என்று தாதை ஆற்றலில், சீற்றம் ஆறி.       5.5.81

'எவ்வழி ஏகிற்று அன்னான்? யாண்டையான்? உறையுள் யாது?
செவ்வியோய்! கூறுக! 'என்னச், செப்புவான் உற்ற செவ்வி,
வெவ்விய விதியின் கொட்பால், வீடினன் கழுகின் வேந்தன்;
எவ்விய வரி வில் செங்கை இருவரும் இடரின் வீழ்ந்தார்.       5.5.82

அயர்த்தவர் அரிதில் தேறி, ஆண்தொழில் தாதைக்கு ஆண்டுச்
செயத்தகு கடன்கள் யாவும் தேவரும் மருளச் செய்தார் :
'கயத்தொழில் அரக்கன்தன்னை நாடி நாம் காண்டும் 'என்னாப்
புயல் தொடு குடுமிக் குன்றும் கானமும் கடிது போனார்.       5.5.83

அவ்வழி நின்னைக் காணாது அயர்பவன், அரிதில் தேறிச்
செவ்வழி நயனம் செல்லும் நெடுவழி சேறு செய்ய,
வெவ் அழல் உற்ற மெல் என் மெழுகு என அழியும் மெய்யன்,
இவ்வழி இனைய பன்னி, அறிவு அழிந்து, இரங்கல் உற்றான்.       5.5.84

கன்மத்தை ஞாலத்தவர் யார் உளரே கடப்பார்?
பொன்மொய்த்த தோளான், மயல்கொண்டு, புலன்கள் வேறு ஆய்,
நல் மத்தம் நாகம் தலைசூடிய நம்பனேபோல்,
உன்மத்தன் ஆனான், தனை ஒன்றும் உணர்ந்திலாதான       5.5.85

'போது ஆயின போது உன தண்புனல் ஆடல் பொய்யோ?
சீதா, பவழக்கொடி அன்னவள் தேடி என்கண்
நீ தா! தருகிற்றிலையேல் நெருப்பு ஆதி! 'என்னாக்
கோதாவரியைச் சினம் கொண்டனன் கொண்டல் ஒப்பான்.       5.5.86

'குன்றே! கடிது ஓடினை கோமளக்கொம்பர் அன்ன
என் தேவியைக் காட்டுதி! காட்டலை என்னின், இவ் அம்பு
ஒன்றே அமையும், உன் உடைக் குலம் உள்ள எல்லாம்
இன்றே பிளவா, எரியாக் கரி ஆக்க 'என்றான்.       5.5.87

'பொன்மான் உருவால் சில மாயை புணர்க்க அன்றோ,
என்மான் அகல்வுற்றனள் இப்பொழுது என்கண்? 'என்னா,
நல் மான்களை நோக்கி, 'நும் நாமமும் மாய்ப்பென் இன்றே,
வில் மான் கொலை வாளியின் 'என்று வெகுண்டு நின்றான்.       5.5.88

வேறு உற்ற மனத்தவன் இன்ன விளம்பி நோவ
ஆறு உற்ற நெஞ்சில் தனது ஆர் உயிர் ஆய தம்பி
கூறுற்ற சொல் என்று உள கோது அறு நல் மருந்தால்
தேறுற்று உயிர்பெற்று இயல்வும் சில தேறல் உற்றான்.       5.5.89

வந்தான் இளையானொடும் வான் உயர் தேரின் வைகும்
நந்தாவிளக்கின் வரும் எம் குலநாதன் வாழும்
சந்து ஆர் தடம் குன்றினில்; தன் உயிர் காதலோனும்
செந்தாமரைக் கண்ணனும் நட்டனர் தேவர் உய்ய.       5.5.90

உண்டாயதும் உற்றதும் முற்றும் உணர்த்தி, உள்ளம்
புண்தான் என நோய் உற விம்முறுகின்ற போழ்தின்,
எண்தான் உழந்து இட்ட நும் ஏந்து இழை யாங்கள் காட்டக்
கண்டான், உயர் போதமும் வேதமும் காண்கிலாதான்.       5.5.91

தணிகின்ற நம் சொல் தொடர் தன்மையது அன்று தன்மை,
துணிகொண்டு இலங்கும் சுடர் வேலவன், தூய நின்கண்
அணி கண்டுழியே, அமுதம் தெளித்தாலும் ஆறாப்
பிணிகண்டது : பண்டு அது உண்டு ஆயினும், பேர்ப்பது அன்றால்.       5.5.92

அயர்வு உற்று, அரிதில் தெளிந்து, அம்மலைக்கு அப்புறத்து ஓர்
உயர் பொன்கிரி உற்றுளன் வாலி என்று ஓங்கல் ஒப்பான்,
துயர்வு உற்ற அவ் இராவணன் வால் இடை பண்டு தூங்க,
மயர்வு உற்ற பொருப்பொடு மால் கடல் தாவி வந்தான்.       5.5.93

ஆயானை ஒர் அம்பினில் ஆர் உயிர் வாங்கி அன்பில்
தூயான்வயின் அவ் அரசு ஈந்தவன் 'சுற்று சேனை
மேயான் வருவாய்! 'என விட்டனன் மேவுகாறும்
ஏயான் இருந்தான் இடை திங்கள் இரண்டு இரண்டும்.       5.5.94

'பின் கூடிய சேனை பெரும் திசை பின்ன ஆக,
வில் கூடு நுதல் திரு! நின்னிடை மேவ ஏவித்,
தறெ்கு ஊடுருவக் கடிது ஏவினன் என்னை 'என்னா,
முன் கூடின கூறினன், காலம் ஒர் மூன்றும் வல்லான்.       5.5.95

இராமனது துயர் நினைந்த பிராட்டிநிலை

அன்பினன் இவ் உரை உணர்த்த ஆரியன்
வன் பொறை நெஞ்சினன் வருத்தம் உன்னுவாள்
என்புற உருகினள் இரங்கி ஏங்கினள்
துன்பமும் உவகையும் சுமந்த உள்ளத்தாள்.       5.5.96

சீதை அநுமனைக் கடல் கடந்தவாறு வினவுதல்

நையுறு சிந்தையள் நயன வாரியின்
தொய்யல் வெம் சுழி இடை சுரிக்கும் மேனியள்
'ஐய! நீ அளப்பு அரும் அளக்கர் நீந்தினை
எய்தியது எப்பரிசு? இயம்புவாய்! 'என்றாள்.       5.5.97

அநுமன் கடல் கடந்தவாறு கூறுதல்

'சுருங்கு இடை! உன் ஒரு துணைவன் தூயதாள்
ஒருங்கு இடை உணர்வினோர் ஓய்வு இல் மாயையின்
பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
கருங்கடல் கடந்தனென் காலினால் 'என்றான்.       5.5.98

பிராட்டி அநுமனை மீண்டும் வினவுதல்

'இத்துணைச் சிறியது ஓர் ஏண் இல் யாக்கையை
தத்தினை கடல் அது தவத்தின் ஆயதோ?
சித்தியின் இயன்றதோ? செப்புவாய்! 'என்றாள்
முத்தினும் நிலவினும் முறுவல் முற்றினாள்.       5.5.99

பிராட்டிக்கு அநுமன் தன் பேருருக் காட்டுதல்

சுட்டினன்; நின்றனன்; தொழுத கையினன்
விட்டு உயர் தோளினன் விசும்பின் மேக்கு உயர்
எட்ட அரும் நெடுமுகடு எய்தி நீளுமேல்
முட்டும் என்று உருவொடு வளைந்த மூர்த்தியான்.       5.5.100

அநுமன் காட்டிய பேருருவின் நிலை (5435-5440)
செவ்வழிப் பெருமை என்று உரைக்கும் செம்மைதான்,
வெவ்வழிப் பூதம் ஓர் ஐந்தின் மேலதோ?
அவ்வழித்து அன்று எனின், அநுமன்பாலதோ?
எவ்வழித்து ஆகும்? என்று எண்ணும் ஈட்டதே.       5.5.101

ஒத்து உயர் கனக வான் கிரியின் ஓங்கிய
மெய்த் துறு மரம் தொறும் மின்மினிக் குலம்
மொய்த்து உளவாம் என முன்னும் பின்னரும்
தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம்.       5.5.102

கண் தலம் அறிவொடு கடந்த காட்சிய
விண் தலம் இருபுடை விளங்கும் மெய்ம்மைய
குண்டலம் இரண்டும் அக் கோளில் மாச்சுடர்
மண்டலம் இரண்டொடும் மாறு கொண்டவே.       5.5.103

ஏண் இலது ஒரு குரங்கு ஈது என்று எண்ணலா
ஆணியை அநுமனை அமைய நோக்குவான்
'சேண் உயர் பெருமை ஓர் திறத்தது அன்று! 'எனா
நாண் உறும் உலகு எலாம் அளந்த நாயகன்.       5.5.104

எண்திசை மருங்கினும் உலகம் யாவினும்
தண்டல் இல் உயிரெலாம் தன்னை நோக்கின;
அண்டம் என்றதின் உறை அமரர் யாரையும்
கண்டனன் தானும் தன் கமலக் கண்களால்.       5.5.105

எழுந்து உயர் நெடுந்தகை இரண்டு பாதமும்
அழுந்துற அழுத்தலின் இலங்கை ஆழ்கடல்
விழுந்தது; நிலமிசை விரிந்த வெண் திரை
தழைந்தன; புரண்டன மீனம் தாம் எலாம்.       5.5.106

பேருருவை ஒடுக்கிக் கொள்ளும்படி அநுமனைப் பிராட்டி வேண்டுதல் (5441-5442)

வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள்
கஞ்சமும் புரைவன கழலும் கண்டிலாள்;
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள்
'அஞ்சினென்! இவ் உரு அடக்குவாய்! 'என்றாள்.       5.5.107

'முழுவதும் இவ் உருக் காண முற்றிய
குழுவினது உலகு : இனிக் குறுகுவாய்! 'என்றாள்;
எழுவினும் எழில் இலங்கு இராமன் தோள்களைத்
தழுவினள் ஆமெனத் தளிர்க்கும் சிந்தையாள்.       5.5.108

அநுமன் பேருரு ஒடுங்குதல்

ஆண்தகை அநுமனும் 'அருளதாம்! 'எனா
மீண்டனன் விசும்பு எனும் பதத்தை மீச்செல்வான்
காண்டலுக்கு உரியது ஓர் உருவு காட்டினான்;
தூண்டு அரு விளக்கு அனாள் இனைய சொல்லினாள்.       5.5.109

பிராட்டி அநுமனைப் பாராட்டுதல் (5444-5448)

இடந்தாய் உலகை மலையோடும், இடித்தாய் விசும்பை, இவை சுமக்கும்
படந்தாழ் அரவை ஒருகரத்தால் பறித்தாய் எனினும் பயன் இன்றால் :
நடந்தாய் இடையே என்றாலும் நாணாம் நினக்கு : நளி கடலைக்
கடந்தாய் என்றால் என்னாகும்? காற்றாம் அன்ன கடுமையாய்!       5.5.110

ஆழி நெடும் கை ஆண்தகைதன் அருளும் புகழும் அழிவு இன்றி
ஊழி பலவும் நிலைநிறுத்தற்கு ஒருவன் நீயே உளையானாய்
பாழி நெடும் தோள் வீரா! நின் பெருமைக்கு ஏற்பப் பகை இலங்கை
ஏழு கடற்கும் அப்புறத்தது ஆகாது இருந்தது இழிவு அன்றோ?       5.5.111

அறிவும் ஈதே, உரு ஈதே, ஆற்றல் ஈதே, ஐம்புலத்தின்
செறிவும் ஈதே, செயல் ஈதே, தேற்றம் ஈதே, தேற்றத்தின்
நெறியும் ஈதே, நினைவு ஈதே, நீதி ஈதே, நினக்கு என்றால்,
வெறியர் அன்றோ? குணங்களால், விரிஞ்சன் முதலாம் மேலானோர்.       5.5.112

மின் நேர் எயிற்று வல் அரக்கர் வீக்கம் நோக்கி, வீரற்குப்
பின்னே பிறந்தான் அல்லது ஓர் துணை இலாத பிழை நோக்கி,
உன்னாநின்றே உடைகின்றேன்; ஒழிந்தேன் ஐயம்; உயிர் உயிர்த்தேன்;
என்னே! நிருதர் என் ஆவர்? நீயே எங்கோன் துணை ஆனால்.       5.5.113

'மாண்டேன் எனினும் பழுது அன்றே; இன்றே மாயச் சிறைநின்றும்
மீண்டேன்; என்னை ஒறுத்தாரைக் குலங்கேளாடும் வேர் அறுத்தேன்;
பூண்டேன் எம் கோன் பொலம் கழலும்; புகழே அன்றிப் புன்பழியும்
தீண்டேன்! 'என்று மனம் மகிழ்ந்தாள், திருவின் முகத்துத் திரு ஆனாள்.       5.5.114

அநுமன் பணிமொழி

அண்ணல் பெரியோன், அடி வணங்கி, அறிய உரைப்பான் : 'அருந்ததியே!
வண்ணக் கடலின் இடைக் கிடந்த மணலின் பலரால், வானரத்தின்
எண்ணற்கு அரிய படைத்தலைவர், இராமற்கு அடியார் : யான் அவர்தம்
பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன் : ஏவக்கடவ பணிசெய்வேன். '       5.5.115

வானரர் பெருமையினை அநுமன் கூறுதல்

வெள்ளம் எழுபது உளது அன்றோ வீரன் சேனை! இவ் வேலைப்
பள்ளம் ஒருகை நீர் அள்ளிக் குடிக்கப் போதும் பான்மையதோ?
கள்ள அரக்கர் கடி இலங்கை காணாது ஒழிந்ததால் அன்றோ
உள்ள துணையும் உளதாவது; அறிந்த பின்னும் உளது ஆமோ?       5.5.116

வானரப் படைத்தலைவர் பெயர்

வாலி இளவல், அவன்மைந்தன், வசந்தன், துமிந்தன், வயக் குமுதன்,
நீலன், இடபன், குமுதாக்கன், பனசன், சரபன், நெடும் சாம்பன்,
காலன் அனைய துன்மருடன், கனகன், கவயன், கவயாக்கன்,
ஞாலம் அறியும் நளன், சங்கன், விந்தன், துவிந்தன், மதன் என்போன்.       5.5.117

வானரப் படைத்தலைவர் பெருமை

தம்பன், தூமத் தனிப்பேரோன், ததியின்வதனன், சதவலி என்று
இம்பர் உலகோடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன்கை
அம்பின் உதவும் படைத்தலைவர், அவரை நோக்கின் இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறையிடவும் போதார் : கணக்கு வரம்பு உண்டோ?       5.5.118
--------------

5.6 சூடாமணிப் படலம் (5453- 5536)

அநுமன் கருதுதல்

'உண்டு துணை என்னல் எளிதோ உலகின்? அம்மா!
புண்டரிகை போலும் இவள் இன்னல் புரிகின்றாள்;
அண்டமுதல் நாயகனது ஆவி அனையாளைக்
கொண்டு அகல்வதே கருமம்! ' என்று உணர்வு கொண்டான்.       5.6.1

பிராட்டிபால் அநுமன் வேண்டல் (5454-5462)
கேட்டி அடியேன் உரை; முனிந்தருளல்; கேள், ஆய்!
வீட்டியிடும் மேல் அவனை; வேறல் வினை அன்றால்;
நீட்டி இனி என் பயன்? இராமன் எதிர் நின்னைக்
காட்டி அடிதாழ்வென்; இது காண்டி இது காலம்!       5.6.2

பொன் திணி பொலம் கொடி! என் மென் மயிர் பொருந்தித்
துன்றிய புயத்து இனிது இருக்க : துயர் விட்டாய்,
இன்துயில் விளைக்க : ஒர் இமைப்பின், இறை வைகும்
குன்று இடை உனைக்கொடு குதிப்பென்; இடை கொள்ளேன்.       5.6.3

அறிந்து இடை அரக்கர் தொடர்வார்கள் உளராமேல்
முறிந்து உதிர நூறி என் மனச் சினம் முடிப்பேன்;
நெறிந்த குழல்! நின் நிலைமை கண்டும் நெடியோன்பால்
வெறும் கை பெயரேன் ஒருவராலும் விளியாதேன்.      5.6.4

'இலங்கையொடும் ஏகுதிகொல்! ' என்னினும், இடந்து என்
வலம் கொள் ஒரு கைத்தலையில் வைத்து, எதிர் தடுப்பான்
விலங்கினரை நூறி, வரி வெம் சிலையினோர்தம்
பொலம்கொள் கழல் தாழ்குவென்; இது, அன்னை! பொருள் அன்றால்.            5.6.5

அருந்ததி! உரைத்தி! அழகற்கு அருகு சென்று 'உன்
மருந்து அனைய தேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்
பெரும் துயரினோடும் ஒரு வீடு பெறுகில்லாள்
இருந்தனள் 'எனப் பகரின் என் அடிமை என் ஆம்?       5.6.6

புண் தொடர்வு அகற்றிய புயத்தினொடு புக்கேன்
விண்டவர் நலத்தையும் வலத்தையும் விரிப்பேன்
'கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி கொண்டேன்;
கண்டு வருகிற்றிலென்! 'எனக் கழறுகேனோ?       5.6.7

'இருக்கும் மதில் சூழ் கடி இலங்கையை இமைப்பின்
உருக்கி எரியால் இகல் அரக்கனையும் ஒன்றா
முருக்கி நிருதன் குலம் முடித்து வினைமுற்றிப்
பொருக்க அகல்க 'என்னினும் அது இன்று புரிகின்றேன்.       5.6.8

இந்து நுதல்! நின்னொடு இவண் எய்தி இகல் வீரன்
சிந்தை உறு வெம் துயர் தவிர்ந்த தெளிவோடும்
அந்தம் இல் அரக்கர்குலம் அற்று அவிய நூறி
நந்தல் இல் புவிக்கண் இடர் பின் களைதல் நன்றால்.       5.6.9

'வேறு இனி விளம்ப உளது அன்று; விதியால் இப்
பேறு பெற என்கண் அருள் தந்தருளு; பின்னே
ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்
ஏறு கடிது! 'என்று தொழுது இன் அடி பணிந்தான்.       5.6.10

பிராட்டி அநுமன் ஆற்றல் கருதுதல்

ஏய நல்மொழி எய்த விளம்பிய
தாயை முன்னிய கன்று அனையான்தனக்கு
'ஆய தன்மை அரியதன்றால் 'எனத்
தூய மென் சொல் இனையன சொல்லினாள்.       5.6.11

அநுமன் வேண்டுகோட்கு இசையாத பிராட்டி கூற்று (5464-5478)
அரியது அன்று நின் ஆற்றலுக்கு; ஏற்றதே;
தெரிய எண்ணினை; செய்வதும் செய்தியே;
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு; அது என்
பெரிய பேதைமைச் சில் மதிப் பெண்மையால்.       5.6.12

வேலையின் இடையே வந்து வெய்யவர்
கோலி வெம் சரம் நின்னொடும் கோத்தபோது
ஆலம் அன்னவர்க்கு அல்லை எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும் தனிமையோய்.       5.6.13

அன்றியும் பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெம் சிலை மாசு உணும்; வேறு இனி
நன்றி என்பவோ? வஞ்சித்த நாய் அவன்
நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ?       5.6.14

கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில்
அண்டர் ஏவரும் நோக்க என் ஆக்கையைக்
கண்ட வாள் அரக்கன் விழி காகங்கள்
உண்டபோது அன்றி யான் உளென் ஆவெனோ?       5.6.15

வெற்றி நாண் உடை விலியர் வில் தொழில்
முற்ற நாண் இல் அரக்கியர் மூக்கொடும்
அற்ற நாணினர் ஆயினபோது அன்றிப்
பெற்ற நாணமும் பெற்றியது ஆகுமோ?       5.6.16

பொன் பிறங்கல் இலங்கை பொருந்தலர்
என்பு மால்வரை ஆகிலதே எனின்
இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல்
கற்பும் யான் பிறர்க்கு எங்ஙனம் காட்டுகேன்?       5.6.17

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.       5.6.18

வேறும் உண்டு உரை; கேள் அது மெய்ம்மையோய்!
ஏறு சேவகன் மேனி அல்லால் இடை
ஆறும் ஐந்து பொறி நின்னையும் ஆண் எனக்
கூறும்; இவ் உருத் தீண்டுதல் கூடுமோ?       5.6.19

தீண்டினான் எனின் இத்தனை சேண் பகல்
ஈண்டுமோ உயிர் மெய்யின்? இமைப்பின் முன்
மாண்டு தீர்வன் என்றே நிலம் வன் கையால்
கீண்டுகொண்டு எழுந்து ஏகினன் கீழ்மையான்.       5.6.20

'மேவு சிந்தை இல் மாதரை மெய் தொடில்
தேவு பொன் தலை சிந்துக நீ! 'எனப்
பூவின் வந்த புராதனனே புகல்
சாவம் உண்டு : எனது ஆர் உயிர் தந்ததால்.       5.6.21

'அன்ன சாபம் உளது 'என ஆண்மையான்
மின்னும் மௌலியன் வீடணன் மெய்ம்மையான்
கன்னி என்வயின் வைத்த கருணையாள்
சொன்னது உண்டு துணுக்கம் அகற்றுவான்.       5.6.22

ஆயது உண்மையின் நானும் அது அன்று எனின்
மாய்வென் மன்ற; அறம் வழுவாது என்றும்
நாயகன் வலி எண்ணியும் நாணுடைத்
தூய்மை காட்டவும் இத்துணை தூங்கினேன்.       5.6.23

ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்து கொண்டு
ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய
நீண்ட சாலையொடு நிலைநின்றது
காண்டி ஐய! நின் மெய் உணர் கண்களால்.       5.6.24

தீர்வு இலேன் இது ஒரு பகலும் சிலை
வீரன் மேனியை மானும் இவ் வீங்கும் நீர்
நார நாள் மலர்ப் பொய்கையை நண்ணுவேன்
சோரும் ஆர் உயிர் காக்கும் துணிவினால்.       5.6.25

"ஆதலான் அது காரியம் அன்று; அயர்
வேத நாயகன்பால் இனி மீண்டனை
போதல் காரியம்! " என்றனள் பூவை; அக்
கோது இலானும் இனையன கூறினான்.       5.6.26

சீதையை அநுமன் பாராட்டல்

'நன்று! நன்று! இவ் உலகு உடை நாயகன்
தன் துணைப் பெருந்தேவி தவத் தொழில்!
என்று சிந்தை களித்து உவந்து ஏத்தினான்
நின்ற சங்கை இடரொடு நீங்கினான்.       5.6.27

இராமனிடம் யாது கூறவேண்டும் என்று அநுமன் கேட்டல்

'இருளும் ஞாலம் இராகவனால் இது
தெரிளும் நீ இனிச் சில்பகல் தீங்குறல்;
மருளும் மன்னவற்கு யான் சொலும் வாசகம்
அருளுவாய்! 'என்று அடியின் இறைஞ்சினான்.       5.6.28

சீதை அநுமனிடம் கூறியவை (5481-5490)

இன்னும் ஈண்டு ஒரு திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்!
பின்னை ஆவி பிடிக்ககிலேன் : அந்த
மன்னன் ஆணை! இதனை மனக்கொள் நீ!       5.6.29

இராமனிடம் கூறுமாறு சீதை கூறியது

ஆரம் தாழ் திரு மார்பு கு அமைந்தது ஓர்
தாரம் தான் அலெனேனும் தயா எனும்
ஈரம் தான் அகத்து இல்லை என்றாலும் 'தன்
வீரம் காத்தலை வேண்டு 'என்று வேண்டுவாய்.       5.6.30

இலக்குவன்பால் கூறுமாறு கூறியது

ஏத்தும் வென்றி இளையவற்கு ஈது ஒரு
வார்த்தை கூறுதி : மன் அருளால் எனைக்
காத்திருந்த தனக்கே கடன் இடை
கோத்த வெம் சிறை வீடு என்று கூறுவாய்.       5.6.31

மீட்டும் இராமன்பால் கூறுமாறு கூறியது

'திங்கள் ஒன்றின் என் செய் தவம் தீர்ந்ததால்
இங்கு வந்திலனே எனின் யாணர் நீர்க்
கங்கை ஆற்றங் கரை அடியேற்கும் தன்
செங்கையால் கடன் செய்க என்று செப்புவாய்!       5.6.32

மாமியர்பால் கூறுமாறு கூறியது

சிறக்கும் மாமியர் மூவர்க்கும் சீதை ஆண்டு
இறக்கின்றாள் தொழுதாள் எனும் இன்ன சொல்
அறத்தின் நாயகன்பால் அருள் இன்மையால்
மறக்குமாயினும் நீ மறவேல் ஐயா! 5.6.33

மீட்டும் இராமனிடம் கூறுமாறு கூறியவை (5486-5487)

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
'இந்த இப் பிறவிக்கு இரு மாதரைச்
சிந்தையாலும் தொடேன் 'என்ற செவ் வரம்
தந்தவாறு திருச்செவி சாற்றுவாய்!       5.6.34

ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்டல் ஆவது ஒர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்.       5.6.35

சீதை மீட்டும் அநுமனிடம் கூறியன (5488-5490)

அரசு வீற்றிருந்து ஆளவும் ஆய் மணிப்
புரசை யானையின் வீதியில் போதவும்
விரசு கோலங்கள் காண விதி இலேன் :
உரை செய்து என்னை? என் ஊழ்வினை உன்னுவேன்!       5.6.36

தன்னை நோக்கி உலகம் தளர்தற்கும்
அன்னை நோய்க்கும் பரதன் அங்கு ஆற்றுறும்
இன்னல் நோய்க்கும் அங்கு ஏகுவது அன்றியே
என்னை நோக்கி இங்கு எங்ஙனம் எய்துமோ?       5.6.37

எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என்
வந்தனை விளம்புதி! கவியின் மன்னனைச்
'சுந்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப் போய்
அந்தம் இல் திரு நகர்க்கு அரசன் ஆக்கு! 'என்பாய்!       5.6.38

அநுமன் பிராட்டியைத் தேற்றுதல் (5491-5526)

இத்திறம் அனையவள் இயம்ப 'இன்னமும்
தத்துறவு ஒழிந்திலை தையல் நீ! 'எனா
எத்திறத்து ஏதுவும் இயைந்த இன் உரை
ஒத்தன தெரிவுற உணர்த்தினான் அரோ.       5.6.39

வீவாய் நீ இவண் மெய் அஃதே!
ஓய்வான் இன் உயிர் உய்வானாம்!
போய்வான் அந்நகர் புக்கு அன்றோ
வேய்வான் மௌலியும்! மெய் அன்றோ!            5.6.40

கைத்து ஓடும் சிறை கற்போயை
வைத்தோன் இன் உயிர் வாழ்வானாம்!
பொய்த்தோர் வில்லிகள் போவாராம்!
இத்தோடு ஒப்பது யாது உண்டே?                  5.6.41

நல்லோய்! நின்னை நலிந்தோரைக்
கொல்லோம் எம் உயிர் கொண்டு அங்கே
எல்லோமும் செல எம் கோனும்
வில்லோடும் செலவேண்டாவோ?            5.6.42

நீந்தா இன்னலின் நீந்தாமே
தேய்ந்து ஆறாத பெருஞ் செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தார் யார்?            5.6.43

'நன்று ஆம் நல்வினை நல்லோரைத்
தின்றார்தம் குடர் பேய் தின்னக்
கொன்றால் அல்லது கொள்ளேன் நாடு! '
என்றானுக்கு இவை ஏலாவோ?            5.6.44

மாட்டாதார் சிறை வைத்தோயை
மீட்டாம் என்கிலம் மீள்வாமே?
நாட்டார் நல்லவர் நல்நூலும்
கேட்டார் இவ் உரை கேட்பாரோ?                  5.6.45

'பூண்டாள் கற்புடையாள் பொய்யாள்
தீண்டா வஞ்சகர் தீண்டாமுன்
மாண்டாள்! 'என்று மனம் தேறி
மீண்டால் வீரம் விளங்காதோ?            5.6.46

கெட்டே நீ உயிர் கேதத்தால்
விட்டாய் என்றிடின் வெவ் அம்பால்
ஒட்டாரோடு உலகு ஓர் ஏழும்
சுட்டாலும் தொலையாது அன்றோ?                  5.6.47

முன்னே கொல்வான் மூவுலகும்
பொன்னே! பொங்கிய போர்வில்லான்
என்னே! நின்நிலை ஈது என்றால்
பின்னே செம்மை பிடிப்பானோ?            5.6.48

கோள் ஆனார் உயிர் கோேளாடும்
மூளா வெம் சினம் முற்று ஆக
மீளாவேல் அயல் வேறு உண்டோ?
மாளாதோ புவி வானோடும்?            5.6.49

தாழித் தண் கடல் தம்மோடும்
ஏழுக்கு ஏழ் உலகு எல்லாம் அன்று
ஆழிக் கையவன் அம்பு அம்மா!
ஊழி தீ என உண்ணாதோ?                  5.6.50

'படுத்தான் வானவர் பற்றாரைத்
தடுத்தான் தீவினை தக்கோரை
எடுத்தான் நல்வினை எந்நாளும்
கொடுத்தான் 'என்று இசை கொள்ளாயோ?            5.6.51

சில் நாள் நீ இடர் தீராதாய்
இன்னா வைகலின் எல்லோரும்
நல்நாள் காணுதல் நன்று அன்றோ
உன்னால் நல்லறம் உண்டானால்?                  5.6.52

புளிக்கும் கண்டகர் புண் நீருள்
குளிக்கும் பேய் குடையும் தோறும்
ஒளிக்கும் தேவர் உவந்து உள்ளம்
களிக்கும் நல்வினை காணாயோ?                  5.6.53

ஊழியின் இறுதியின் உரும் எறிந்து எனக்
கேழ்கிளர் சுடுகணை கிழித்த புண்பொழி
தாழ் இரும் குருதியால் தரங்க வேலைகள்
ஏழும் ஒன்று ஆகி நின்று இரைப்பக் காண்டியால்!            5.6.54

சூல் இரும் பெருவயிறு அலைத்துச் சோர்வுறும்
ஆலி அம் கண்ணியர் அறுத்து நீத்தன
வாலியும் கடப்பு அரும் வனப்ப வான் உயர்
தாலி அம் பெரு மலை தயங்கக் காண்டியால்!            5.6.55

விண்ணின் நீளிய நெடும் கழுதும் வெம்சிறை
எண்ணின் நீளிய பெரும் பறவை ஈட்டமும்
புண்ணின் நீர்ப் புணரியில் படிந்து பூவையர்
கண்ணின் நீர் ஆற்றினில் குளிப்பக் காண்டியால்!            5.6.56

கரம் பயில் முரசு இனம் கறங்கக் கைதொடர்
நரம்பு இயல் இமிழ் இசை நவில நாடகம்
அரம்பையர் ஆடிய அரங்கின் ஆண் தொழில்
குரங்குகள் முறை முறை குனிப்பக் காண்டியால்!            5.6.57

புரை உறு புன் தொழில் அரக்கர் புண்பொழி
திரை உறு குருதி ஆறு ஈர்ப்பச் செல்வன
வரை உறு பிணப் பெரும் பிறக்கம் மண்டின
கரை உறு நெடுங் கடல் தூர்ப்பக் காண்டியால்!            5.6.58

வினை உடை அரக்கர் ஆம் இருந்தை வெந்து உகச்
சனகி என்று ஒரு தழல் நடுவண் தங்கலான்
அனகன்கை அம்பு எனும் அளவில் ஊதையால்
கனகம் நீடு இலங்கை நின்று உருகக் காண்டியால்!      5.6.59

தாக்கு இகல் இராவணன் தலையில் தாவின,
பாக்கியம் அனைய நின் பழிப்பு இல் மேனியை
நோக்கிய கண்களை நுதிகொள் மூக்கினால்,
காக்கைகள் கவர்ந்துகொண்டு உண்ணக் காண்டியால்!       5.6.60

மேல் உற இராவணற்கு அழிந்து வெள்கிய
நீல் உறு திசைக் கரி திரிந்து நிற்பன
ஆல் உற அனையவன் தலையை அவ் அவை
கால் உறக் கணை தடிந்து இடுவ காண்டியால்!       5.6.61

நீர்த்து எழு கண மழை வழங்க நீலவான்
வேர்த்தது என்று இடையிடை வீசும் தூசு போல்
போர்த்து எழு பொலம் கொடி இலங்கைப் பூழியோடு
ஆர்த்து எழு கழுது இரைத்து ஆடக் காண்டியால்!       5.6.62

நீல் நிற அரக்கர்தம் குருதி நீத்தம் நீர்
வேலைமிக்கு ஆற்றொடு மீள; வேலைசூழ்
ஞாலம் முற்று உறு கடை உகத்தும் நச்சு அறாக்
காலனும் வெறுத்து உயிர் காலக் காண்டியால்!       5.6.63

அணங்கு இளமகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர் கற்பகச் சோலை வாவி வாய்ப்
பிணங்கு உறு குடர்முறை பிடித்த மாலைய
கணம் கிளர் கழுது இனம் குளிப்பக் காண்டியால்!       5.6.64

செப்புறல் என்பல? தெய்வ வாளிகள்
இப்புறத்து அரக்கரை முருக்கி ஏகின
முப்புறத்து உலகையும் துருவி முட்டலால்
அப்புறத்து அரக்கரும் அவியக் காண்டியால்!       5.6.65

ஈண்டு ஒருதிங்கள் நீ இடரின் வைகவும்
வேண்டுவது அன்று; யான் விரைவின் வீரனைக்
காண்டலே குறை; பின்னும் காலம் வேண்டுமோ?
ஆண்தகை இனி ஒருபொழுதும் ஆற்றுமோ?       5.6.66

ஆவி உண்டு என்னும் ஈது உண்டு; உன் ஆர் உயிர்ச்
சேவகன் திரு உருத் தீண்டத் தீகிலாப்
பூ இலை தளிர் இலை பொரிந்து வெந்து இலா
கா இலை கொடி இலை நெடிய கான் எல்லாம்.       5.6.67

சோகம்வந்து உறுவது தெளிவு தோய்ந்து அன்றோ?
மேகம் வந்து இடித்து உரும் ஏறு வீழினும்
ஆகமும் புயங்களும் அழுந்த ஐந்தலை
நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ?       5.6.68

மத்து உறு தயிர் என வந்து சென்று இடை
தத்து உறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும்
பித்தும் நின் பிரிவினில் பிறந்த வேதனை
எத்தனை உள? அவை எண்ணும் ஈட்டவோ?       5.6.69

இந்நிலை உடையவன் தரிக்கும் என்றி? என்
மெய்ந்நிலை உணர்ந்துழி விடை தந்தீதியேல்
பொய்ந்நிலை அன்றி யான் புகன்ற யாவும் உன்
கைந்நிலை நெல்லி அம் கனியில் காட்டுகேன்.       5.6.70

தீர்த்தனும் கவிக்குலத்து இறையும் தேவி! நின்
வார்த்தை கேட்டு உவப்பதன் முன்னம் மாக்கடல்
தூர்த்தன இலங்கையைச் சூழ்ந்து மாக்குரங்கு
ஆர்த்தது கேட்டு உவந்து இருத்தி! அன்னை நீ!       5.6.71

எண் அரும் பெரும்படை நாளை இந்நகர்
நண்ணிய பொழுது அதன் நடுவண் நங்கை! நீ
விண் உறு கலுழன்மேல் விளங்கும் விண்டுவில்
கண்ணனை என் நெடு வெரிந் இல் காண்டியால்!       5.6.72

அங்கதன் தோள்மிசை இளவல் அம்மலைப்
பொங்கு இளங்கதிர் எனப் பொலியப் போர் படை
இங்கு வந்து இறுக்கும்; நீ இடரும் மையலும்
சங்கையும் நீங்குதி! தனிமை நீங்குவாய்.       5.6.73

"குரா வரும் குழலி! நீ குறித்த நாளினே
விராவு அரும் நெடும் சிறை மீட்கலான் எனில்
பராவரும் பழியொடு பாவம் பற்றுதற்கு
இராவணன் அல்லனே இராமன்? " என்றனன்.       5.6.74

அநுமன் தேற்றத் தேறிய பிராட்டி பேசுதல் (5527-5531)
ஆக இம்மொழி ஆசு இல கேட்டு அறிவு உற்றாள்
ஓகை கொண்டு களிக்கும் மனத்தவள் உய்ந்தாள்
போகை நன்று இவன் என்பது புந்தியின் வைத்தாள்
தோகையும் சில வாசகம் இன்னன சொன்னாள்.       5.6.75

பிராட்டி அடையாளம் கூறல் (5528-5530)

'சேறி, ஐய! விரைந்தனை; தீயவை எல்லாம்
வேறி; யான் இனி ஒன்றும் விளம்பலென்; மேலோய்!
கூறுகின்றன, முன் குறி உற்றன; கோமாற்கு
ஏறும் 'என்று இவை சொல்லினள், இன்சொல் இசைப்பாள்.       5.6.76

நாகம் ஒன்றிய நல்வரையின் தலை மேல் நாள்
ஆகம் வந்து எனை அள் உகிர் வாளின் அளைந்த
காகம் ஒன்றை முனிந்து அயல் கல் எழு புல்லால்
வேக வெம் படை விட்டது மெல்ல விரிப்பாய்!       5.6.77

'என் ஒர் இன் உயிர் மென் கிளிக்கு ஆர்பெயர் ஈகேன்?
மன்ன! 'என்றலும், 'மாசறு கேகயன் மாது என்
அன்னை தன்பெயர் ஆக்கு! 'என அன்பினொடு அந்நாள்
சொன்ன மெய்ம்மொழி சொல்லுதி! மெய்ம்மை தொடர்ந்தோய்!       5.6.78

பிராட்டி கைக்கொண்ட சூடாமணியின் ஒளி பரவுதல் (5531-5533)

என்று உரைத்து இனி இத்தனை பேர் அடையாளம்
ஒன்று உணர்த்துவது இல் என எண்ணி உணர்ந்தாள்
தன் திரு துகிலில் பொதிவுற்றது தானே
வென்றது அச்சுடர் மேலொடு கீழ் உற மெய்யால்.       5.6.79

வாங்கினாள் தன் மலர்க்கையில்; மன்னனை முன்னா
ஏங்கினாள்; அவ் அநுமனும் 'என்கொல் இது! 'என்னா
வீங்கினான் வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள் முற்றும் இரிந்தது சுற்றும்.       5.6.80

'மஞ்சு அலங்கு ஒளியோனும் இம் மாநகர் வந்தான்
அஞ்சலன்? 'என வெம் கண் அரக்கர் அயிர்த்தார்;
சஞ்சலம் புரி சக்கரவாகமுடன் தாழ்
கஞ்சமும் மலர்வு உற்றன; காந்தின காந்தம்.       5.6.81

அநுமன் சூடாமணியைக் காணுதல்

கூந்தல் மென்மழை கொள் முகில் மேல் எழு கோளின்
வேந்தன் அன்னது; மெல் இயல் தன் திருமேனி
சேந்தது; அந்தம் இல் சேவகன் சேவடி என்னக்
காந்துகின்றது; காட்டினள் மாருதி கண்டான்.       5.6.82

சீதை அநுமனிடம் சூடாமணியைத் தருதல்
ல் 'சூடையின் மணி கண்மணி ஒப்பது தொல்நாள்
ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்
நாடி வந்து எனது இன் உயிர் நல்கினை! நல்லோய்!
கோடி! 'என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்.       5.6.83

சூடாமணி பெற்ற அநுமன் செல்லுதல்

தொழுது வாங்கினன் சுற்றிய தூசினில் முற்றப்
பழுது உறாவகை பந்தனை செய்தனன்; வந்தித்து
அழுது மும்மை வலங்கொடு இறைஞ்சினன்; அன்போடு
எழுது பாவையும் ஏத்தினள்; ஏகினன் இப்பால்.       5.6.84
-----------------------

This file was last updated on 24 June 2016.
.